Saturday, July 25, 2026

காலக்கலம்

காலக்கலம்- சசி

சிறுகதை | வாசகசாலை - 6th July 2026












முத்து மகிழ்நன் தன் முன் அமைந்திருந்த திரையில் விசைகளை

முடுக்கி விண்கலத்தின் பயணப்பாதையை உறுதி செய்தான். 2178

வருடங்களுக்கு முந்தைய குறிப்பிட்ட நாள் ஒன்று பயண இலக்காக

நீலநிற நியானில் திரையில் ஒளிர்ந்துகொண்டிருந்தது. காலக்கலம்

விண்கலம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒரு நியூட்ரான்

நட்சத்திரத்தைச் சுற்றி ஒரு நிலையான சுற்றுப்பாதையில்

நிலைநிறுத்தப்பட்டிருந்தது. இளந்திரையன் வன்பொருள்

இணைப்புகளை மீண்டும் ஒருமுறை பரிசோதித்தான். மகிழ்நன்

மென்பொருள் உத்தரவுகளை கணினித் திரையில் ஓடவிட்டு பிழைகள்

ஏதும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டான். இருவரும்

தங்கள் இருக்கைகளுடன் தங்களை பட்டைகளால் இறுக்கி பயணம்

தொடங்க ஆயத்தமானார்கள்.

தமிழில் கடமுடாவென்ற வன்பொருள் விண்வெளி அறிவியல்

வேண்டாம் என்பவர்கள் அடுத்த மூன்று பத்திகளை தயக்கமின்றி

கடந்து போகலாம்.

ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு மற்றும் கருந்துளை விதிகள் 200

ஆண்டுகளுக்கு முந்தையது என்றாலும் இன்றளவும் காலப்பயணம்

நடத்த தேவையாகிறது. இவர்களது விண்கலம் குவாண்டம்

க்ரோனோ-ஸ்டேபிலைசர் இணைக்கப்பட்டதால் முன்காலப்பயண

முரண்பாடுகளை முற்றிலுமாக தவிர்க்க உதவுகிறது.

கால முரண்பாடுகள் ஏதேனும் தோன்றினால், அவற்றைச் செயற்கை

நுண்ணறிவு மென்பொருள் இணைந்த ‘குவாண்டம் குரோனோ


நிலைநிறுத்தி’, விண்கலன் பயணப்பாதையில் புழுத்துளையை (வார்ம்

ஹோல் தான்) தேவைப்பட்ட கோணத்தில் துல்லியமாக சரித்து

சரிக்கட்டும். இது மிகைநிறை துகள்களைப் பயன்படுத்தி, கிளைக்கும்

காலவரிசைகளை ஊடுருவி முரண்பாடற்ற பயணப்பாதைகளைத்

தேர்ந்தெடுக்கிறது.

விண்கலத்தின் உட்புற அமைப்பு கால நேரம் நிர்ணயம் அற்றது.

எனவே வேறு எந்த செயலற்ற சக்திகளும் குழுவினரின் மீது

செயல்படாமல், சார்பியல் மற்றும் பொதுவான இயற்பியல்

போன்றவை இயல்பாக இருப்பதையும் உறுதி செய்கிறது.

பயணத் திட்ட வரைமுறைப்படி, பயணர்கள் இருவரும் சந்திக்கும் நபர்

யார், அவரிடம் கேட்கப்படவேண்டிய மூன்று கேள்விகள் யாவை

போன்ற தகவல்கள் விண்கலம் இலக்கை அடைந்ததும் திரையில் 70

நொடிகள் ஒளிரும். ஏற்கனவே மகிழ்நனும் இளந்திரையனும் யாரை

சந்திக்கப்போகிறோம் என்ற ரகசியத்தை கிட்டத்தட்ட

ஊகித்துவிட்டார்கள். ஆனாலும் கேள்விகள் என்னவாயிருக்கும் என்ற

ஆர்வம் அவர்களிடம் மேலோங்கியிருந்தது.

இந்த ‘காலம் முந்திய சந்திப்பு’ ஒளிப்பட பதிவு வரையறைக்குள் வர

முற்றிலும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. அங்கீகரிக்கப்பட்ட மூன்று

கேள்விகள், அதற்கான பதில் அடங்கிய உரையாடல் மட்டுமே

ஒலிப்பதிவு செய்ய அனுமதி. பயணர்கள் இந்த கேள்விகளுக்கு

சம்பந்தமான துணைக்கேள்விகளையும் கேட்கலாம். இவை

இளந்திரையன் இடுப்பில் பொருத்தப்பட்ட ஒலிப்பதிவு கருவியில்

தன்னிச்சையாகப் பதிவாகும். பின்னர் இந்த ஒலிப்பதிவு அடங்கிய

கருவியை பத்திரமாக விண்கலத்திலுள்ள பாதுகாப்புப் பெட்டகத்தில்

சேர்க்கவேண்டும்.

பல நூற்றாண்டுகளாய் தமிழ்சமூகத்திலும் இலக்கிய உலகிலும்

புரையோடி விவாதிக்கப்பட்டு சச்சரவை உண்டாக்கிய இந்த

கேள்விகளும் அதற்கான ஒவ்வொரு மதம் இனம் சார்ந்த தர்க்க


விவரணைகளும் இந்த உரையாடல் பதிவின் மூலமாக முடிவுக்கு

வரும்.

பயணத்திற்கு ஆயத்தமாகும் சமயத்தில் இளந்திரையன் மகிழ்நனிடம்

கேட்டான். “இதற்காக ஐந்து பில்லியன் டாலர் செலவில் இந்த பயணம்

அவசியமா?”

“திருக்குறள் இப்போது உலகம் முழுவதுக்குமான ஒரு மதம் மொழி

கடந்த வேதமாக மாறிவிட்டது. கடந்த நூற்றாண்டில் தமிழறிஞர்கள்

குறள்களை ஒவ்வொன்றாக ஆராய்ந்து சல்லித்து அதில் ஆயிரம்

குறள்களை தேர்ந்தெடுத்து வாழ்வியல் ஆயிரம் என்ற தொகுப்பாக்கிய

நிகழ்வு உனக்கும் தெரியுமே. ஆனாலும் இன்றளவும் இதற்கு மத இன

சாயம் பூசும் வேலையும் நின்றபாடில்லை. இந்த

கேள்விகளுக்கெல்லாம் விடை காண கண்டிப்பாக இந்த பயணம்

அவசியமே.”

இளந்திரையன் கைப்பட்டையில் கட்டியிருந்த குறுங்காலக் கருவியின்

பொத்தானை அழுத்த விண்கலத்திலிருந்து மீண்ட இருவரும் துல்லிய

நுண்நொடியில் இலக்கை அடைந்தார்கள்.

கூரை வேய்ந்த மண்குடிசை வாசலுக்கு முன் சாணம் மொழுகிய

முற்றத்தில் ஒரு வேப்பமரத்தின் கிளைக்கும் பத்தடி தொலைவில்

நடப்பட்டிருந்த கழியையும் சணல் கயிறு ஒன்று இணைத்திருந்தது.

அதில் பச்சை, காவி, வெண்மை மற்றும் நீலம் என பல நிறங்களில்

வேட்டி போன்ற தோற்றம் கொண்ட ஆடைகள் தொங்கின. முற்றிலும்

எதிர்பாராத உருவமும் சிகையும் கொண்ட ஒருவர், இவர்களை

எதிர்கொண்டார்.

“நீங்கள் தான் திருவள்ளுவர் பெருந்தகையோ?” என்று தயக்கத்துடன்

மகிழ்நன் வினவினான்.

“திரு என்று அடைமொழி ஏனோ? வள்ளுவன் என்பார் எம்மை. சிலர்

வள்ளுவனார் என்றும் சொல்வர்.” என்றார் அவர்.

சிறிது தயக்கத்துடன் அவர் அணிந்திருந்த வெளிர் நீல நிற ஆடையை

பார்த்தபடி, முதல் கேள்வியைக் கேட்டான் மகிழ்நன். “நீங்கள்


வழக்கில் விரும்பி அணிவது எந்த நிற ஆடையை? காவியா..

வெண்மையா..”

“விருப்பம் கருதியன்று, மாறாக மானம் காக்கவன்றோ உடுக்கை, அது

எந்த நிறமானால் என்ன? எல்லாம் உடுக்கவே. இவையனைத்தும்

கனியமுதன் அன்புடன் நெய்து எனக்களித்தது.” என்று கயிற்றில்

தொங்கிக்கொண்டிருந்த பல வண்ண ஆடைகளை சுட்டிக்காட்டினார்

வள்ளுவனார்.

அவர்களை அவர் குடிசைக்குள்ளே அழைத்துச் சென்றார். தரையில்

கோரைப்புல்லில் வேய்ந்த பாய் ஒன்று விரிக்கப்பட்டிருந்தது. ஒரு நீர்

நிரம்பிய மண்குடுவை. ஒரு மூலையில் துணியில் பொதிந்த

ஓலைச்சுவடிக் கட்டுகள். மண் கலயங்கள். செப்புப் பாத்திரங்கள் சில.

“அய்யா, தங்கள் குலம் குடி குறித்து சொல்ல முனைவீரோ?” இந்தக்

கடினமான வினாவைக் கேட்டது இளந்திரையன்.

“நல்லோர்க்கேது குடி? புலவனார்க்கேது குலம். செய்யும் தொழில்

குடியோ குலமோ குறிப்பதன்றே! தொழில் வெவ்வேறாயினும்.

அவையனைத்தும் ஈடே. ஆயினும் இவற்றுள் உழுதுண்டு வாழ்வோரே

தலை என்றே என் எண்ணம்.” என்றார் வள்ளுவர்.

“அய்யா, நீங்கள் செய்யும் தொழில் யாது?” துணைக்கேள்வியைக்

கேட்டான் மகிழ்நன்

“செய்யுள் செய்யுங்கால் நான் புலவன். நாற்றங்கால் நட்டு பயிர்

இடும்பொழுதில் உழவன். ஆடை நெய்தால் நெசவாளி. கலம் செய்தால்

குயவன்”

“இவை அனைத்தும் நீங்கள் செய்வதுண்டா?” என்று மகிழ்நன் கேட்க

உரக்கச் சிரித்தபடி “இவற்றுள் கலம் செய்ய இயலேன்.”என்றார்

வள்ளுவனார்.


“அய்யா, நீங்கள் இறை நம்பிக்கை கொண்டவரோ?” தயங்கியபடி

மூன்றாவது கேள்வியைக் கேட்டான் மகிழ்நன்.

சில நொடிகள் அமைதிக்குப்பின் பதில் சொன்னார் வள்ளுவனார்.

“அன்பிலே கண்டேன் இறை. அஃதிலார் வாழ்க்கை பிழை”

“அற்புதம் அய்யா. சுருங்கச் சொல்லி பெருவிளக்கம் தந்தீர்” உள்ளபடி

மகிழ்ந்தான் மகிழ்நன்.

சற்றே குழப்பமுற்றார் வள்ளுவனார். “அற்புதம்? என்ன பொருள்? இது

தமிழ்ச் சொல் அல்லவே. குறுகச் சொல்லுதல் நலமே என்பது உங்கள்

கூற்றோ? நன்று. நீவிர் வடக்கிலிருந்து வருபவரோ. உங்கள் உடுக்கை

கண்டதும் உள்ளினேன். பெண்டிர் அணிவது போன்றல்லவோ

இடையில் கச்சை..”

இதைக்கேட்டதும் மகிழ்நன் கூச்சமுற்று சட்டென்று எழுந்திட முற்பட

அவனது இடைக்கச்சை தளர்ந்து நழுவியது. சட்டென்று இடதுகையால்

அதைப்பற்றிக்கொண்டு தன் மெல்லிய சிந்தெடிக் வலையில் பின்னிய

ஃசூமர் ஜட்டி தெரியாதபடி மானம் காத்தான். அந்த நிகழ்வை

வள்ளுவனார் சற்று கூர்ந்து கவனிப்பதாகத் தோன்றியது.

“நீவிர் இருவரும் அருக்கரோ?”

“அருக்கரா? என்ன பொருள் அய்யா?”

“உமக்குள் நட்பு பாராட்டுபவர்”

“ஓ, ஆம், நண்பர்கள்”.

“இடுக்கண் வருங்கால் உதவும் பாங்குடை உற்றோர்.” புன்னகை

செய்து முறுவலித்தார்.

“அஃதே அய்யா!” என்றான் இளந்திரையன்.

“நன்று.. நன்று..” என்று முணுமுணுத்தபடி இடுப்புக் கச்சையிலிருந்த

ஒரு ஓலைச் சுவடியில் அவசரமாக எழுத்தாணியால் ஏதோ குறித்துக்

கொண்டார்.


இந்தக் கட்டத்தில் மகிழ்நன் “பயணத்திட்டம் வெற்றி” என்று

மேலுடுப்பில் பொருத்தியிருந்த நானோ ஒலிவாங்கியில் பதிவு

செய்தபின் கைப்பையில் வைத்திருந்த குறுங்கால இணைப்புக்

கருவியை எடுத்து நேரத்தை சரிசெய்து பொத்தானை அழுத்த

இருவரும் மீண்டும் விண்கலத்திற்குள்ளே.

இளந்திரையன் முகக்கவசம் இணைத்தபின் ஒலிப்பானில் பேசினான்.

“திருவள்ளுவர் பார்த்துக்கொண்டிருக்கும் போதே நாம் இருவரும்

மாயமாக மறைந்திருப்போம் அல்லவா? என்ன நினைத்திருப்பார்

நம்மைப் பற்றி.”

“‘மாயமாய் மறைந்த அருக்கர் இருவர் காயம் மறைக்கத் தெரிந்த

அரக்கரோ ‘ என்று எண்ணியிருப்பார்” என்றான் மகிழ்நன். “நல்ல

முயற்சி. ஆனாலும் இந்தக் குறளில் தகவல் இருக்கிறது. கருத்து

ஏதுமில்லை” என்று கூறிச் சிரித்தான் இளந்திரையன்.

“”நாம் திருக்குறள் முழுமையும் படித்திருக்கிறோம். ஆனால் அதை

எழுதிய திருவள்ளுவர் நம் முன் அமர்ந்திருந்தார். ஆனாலும் அவர்

காலக் கணிதப்படி இன்னும் திருக்குறளை எழுதத்

தொடங்கவேயில்லை. இப்போது தான் அதுபற்றி சிந்திக்கிறார் என்று

நினைக்கிறேன்.”என்று மகிழ்நன் சொல்ல

வியப்புடன் இளந்திரையான் கேட்டான். “இப்போதுதான் திருக்குறள்

எழுத நினைக்கிறார் என்று எப்படிச் சொல்கிறாய்?”

“பேசிக்கொண்டேயிருக்கும்போது தன் கச்சையில் இருக்கும் சுவடியை

எடுத்து அவ்வப்போது குறிப்பெழுதிக் கொள்கிறார்.”

“நானும் கவனித்தேன்.”

“இப்போது அவரிடம் அவர் எழுதிய ஏதேனும் ஒரு குறளைச்

சொன்னால் அவரது எதிர்வினை எப்படி இருக்கும்? “

“இதுபற்றி ஏற்கனவே நமக்களித்த எச்சரிக்கைக் குறிப்புகளில் விரிவாய்

உள்ளது. அது பட்டாம்பூச்சி விளைவுக்கான சாத்தியக்கூறுகளை

ஏற்படுத்தக்கூடும். மேலும் பயணத்தின் அதிகபட்ச விதிமீறலுக்கு


நம்மை உட்படுத்தி நம்முடைய இருப்பைக் கேள்விக்குரியதாக்கி

விடும். அதுமட்டுமல்ல, திருவள்ளுவரின் படைப்பின் மீதும்

விளைவுகளை உண்டாக்கி திருக்குறளில் எதிர்பாரா மாற்றமுறச்

செய்யலாம்.”

“புரிகிறது”

“கேள்விகளுக்கான பதில்களை இவ்வாறு நீ எதிர்பார்த்தாயா?”

இளந்திரையன் வினவினான்.

“நிச்சயமாக இல்லை. அன்னார் எதற்கும் பிடிகொடுக்கவில்லை,

கவனித்தாயா? இறைநம்பிக்கை குறித்த அவரது பதில் நான் சிறிதும்

எதிர்பாராதது. மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. வள்ளுவரும் குறளும்

யாருக்கும் தனிச்சொத்தில்லை. எந்த இனத்துக்கும் மதத்திகும்

உரிமையல்ல. திருக்குறள் உலகப்பொதுமறை என்ற கூற்று

நிரூபணமானது.” என்று விவரித்தான் மகிழ்நன்.

“அது சரி! உன் கச்சை அவிழ்ந்த போது அதைப் பார்த்ததும்

திருவள்ளுவர் உடனே சுவடியில் எழுத்தாணியால் கீறினார்.

கவனித்தாயா? “ என்று கேட்டான் இளந்திரையன்.

“ஆமாம். அதனால் என்ன?”

“எனக்கென்னவோ அவர் மனதில் அப்போது ஒரு குறள்

உருவாகியிருக்கும் என்று தோன்றுகிறது.”

“என்னது?”

“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே..”

“இடுக்கண் களைவதாம் நட்பு” அட, நம்மால் ஒரு குறள் உருவானதா?”

அதெப்படி? அந்தக் குறள் நாம் இங்கு வருவதற்கு முன்னேரே

இருந்ததே. “

“ஆனால் நாம் பார்க்கும்போது அவர் இன்னும் திருக்குறளை

எழுதவில்லையே.”


“அதுவும் சரியே. இந்தக் காலமுரணைப் புரிந்துகொள்ளும் முயற்சியில்

மண்டை காய்ந்துவிடுகிறது. இதெல்லாம் கதைகளில் படீத்தபோதும்

திரைப்படங்களில் பார்த்தபோதும் எளிதாக இருந்தது.”

“எதுவானாலும் திருவள்ளுவர் குறளில் சொன்ன அந்த ‘உடுக்கை

இழந்தவன் நீதான்’ என்று நினைத்தால் சிரிப்பு வருகிறது.”

“இந்த காலமுரண் அனுபவம், திருவள்ளுவருக்குப் புரியாத ஒரு

வார்த்தையில் சொல்வதானால் ‘அற்புதம்’ என்று சொல்லியபடி

விசைகளை முடுக்கி ‘காலக்கலம்’ விண்கலனை மீள்

பயணப்பாதையில் செலுத்தினான் மகிழ்நன


காலக்கலம்

Tuesday, May 26, 2026

பரகாயம்


பரகாயம்-   சசி



சற்குருநாதன் வீரராகவுலு பத்மாசனத்தில் இடதுகாலை மடக்கி வலது தொடைக்கு மேல் வைக்க எத்தனித்துக் கொண்டிருந்தபோது உள் அறையிலிருந்து பாக்கியலட்சுமி குரல் கொடுத்தாள். “என்னங்க, இங்கே வாங்களேன், கொஞ்சம் சீக்கிரமா வந்து பாருங்க”. 

பதறியபடி வந்த அவரிடம், புடவைகள் அடுக்கி வைக்கப்பட்ட பீரோ கதவைத் திறந்து காட்டி  “இங்க பாருங்க. அரை அடி இருக்கு, காலியா!” என்ற சரவணா ஸ்டோர்ஸ் ஆடித்தள்ளுபடி விளம்பர டயலாக்கை அவிழ்த்து விட்டாள். வாழ்க்கையில் அவளது எல்லா உரையாடல்களும் எப்போதும் டிவி சீரியல்கள் மற்றும் அதற்கு இடையே வரும் விளம்பரங்கள், இதில் வரும் டயலாக்ஸ் தான்.

கடுப்பேறிய சற்குருநாதன் சோபா மேல் காயப்போட்டிருந்த அவரது ஜட்டி பனியன் இவற்றையெல்லாம் கொஞ்சம் அள்ளிக்கொண்டு அவள் முன் வந்து நின்று “இதெல்லாம் வைக்க இடம் இல்லாமல் தவிச்சுக்கிட்டு இருந்தேன். இந்த அரையடி எனக்கு தாராளமா போதும்” என்றார். “வேறென்ன செய்ய, நாம என்ன ஜெயம் ரவியா, கடைக்குக் கூட்டிட்டுப் போய் வேணும்ன்றத அள்ளிக்கோன்னு சொல்ல..” என்று தனக்குள் முணுமுணுத்தார்.

திரும்பி ஹாலுக்கு வந்து பத்மாசன போஸில் அமர்ந்து  வலதுகையில் பாபா முத்திரையுடன் சிறுவயதில் பாட்டி சொல்லித் தந்த சித்தர் மந்திர உச்சாடனையை முணுமுணுத்தபடி இடதுகையில் இரண்டு மாத்திரை, மூன்று மாத்திரை என்று அளந்து மூச்சுப் பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அந்த அதிசயம் மீண்டும் நடந்தது. இதற்குமுன் பலமுறை இப்படி நடந்திருக்கிறது.

 “பாக்கி, இங்க வாயேன்” என்று முக்கி முனகலாகக் குரலெழுப்பினார். பத்மாசன இருப்பில் இருந்த அவரது உடம்பு தரையிலிருந்து கொஞ்சமாக ஒரு அரையடி அளவுக்கு  மேலெழும்பியிருப்பதை அவரால் உணர முடிந்தது. முழி பிதுங்கிய நிலையில் மூச்சு முற்றிலும் ஸ்தம்பித்து வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கி நாக்குழறியது. வாய் ஒருபக்கம் இழுத்தபடி கோணியது. பாக்கியலட்சுமியை உரக்கக் கூப்பிட நினைத்தார். ஆனால் செயல்படுத்த இயலவில்லை. அதற்குள் பொத்தென்று விழுந்து தரைதட்டினார். எதேச்சையாக ஹாலுக்குள் வந்த பாக்கியலட்சுமி “என்ன? “என்றாள் கோபமான குரலில். ஏற்கனவே இப்படி போனமுறை நிகழ்ந்தபோது, அன்று அவளிடம் தவறுதலாக ‘லேசா பறக்க முடிஞ்சுது’ என்று சொல்லப்போய் குலுங்கிச் சிரித்தபடி ”முதல்ல நடக்கிற வேலையப் பாருங்க. பறக்குறாராம். காப்பித் தூள் தீர்ந்து போச்சு. அப்படியே டவுனுக்கு பறந்துபோய் பட்டுனு வாங்கியாருவிங்களாம்.” என்றாள். 

இந்தமுறை சுத்தம். ஆடி விளம்பர டயலாக்கை அவர் எதிர் கிண்டலடித்த காயம் இன்னும் ஆறாததால்  “என்னது, உக்காரச்சே கொஞ்சம் கேப் இருக்கா.. புட்டத்துக்கு கீழ ஒரு தலக்காணி வச்சுக்கோங்க. சரியாப் போகும்” என்று பதிலடி கொடுத்துப் பழி வாங்கினாள். “எனக்கு பொழுதன்னைக்கும் அந்த சனியன் பிடிச்ச எலியோடப் போராடுறதே பெரும்பாடாப் போச்சு. இந்த எலிப்பொட்டியெல்லாம் அதுக்கு சரிப்படாது. நான் உங்கள மாதிரி ஜீவ காருண்யம் பார்க்கிற வள்ளலார் பரம்பரை கிடையாது. எலியப் பிடிச்சு டொங்குனு போட்டுத் தள்ளுற இரும்புப் பொறி ஒண்ணு உடனடியா வாங்கனும்” என்று புலம்பினாள் சற்குருநாதன் சகதர்மினி. 

தேவையில்லாமல் உளறிக்கொட்டிவிட்டு அடி வாங்குகிறோமோ என்று சற்குருநாதனுக்குத் தோன்றியது. புவியீர்ப்பு விசைக்கு எதிராக நம்மால் தரையிலிருந்து கொஞ்சம் மேலாக சில நொடிகள் எழ முடிகிறதே, இது அதிசயமில்லையா? பாக்கி இதை அலட்சியமாகக் கடந்து செல்கிறாளே? என்று சற்குருநாதனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ஒருவேளை இது  நடப்பது போல நமக்குப் பிரமையோ என்று அவர் நினைத்த மாத்திரத்தில் மேல் எழும்பிய நிலையில் இருந்து பொத்தென்று விழ பின்பக்கம் வலிப்பது எப்படி பொய்யாக இருக்கமுடியும் என்று யோசித்தார். ஒவ்வொருமுறையும் இந்த நிகழ்வின் சில வினாடிகளில் ஏதோ உயிர் போய் மீண்டு வருவது போன்ற அனுபவமாகத் தான் அவருக்குத் தோன்றியது.

எதற்கும் விஷயம் தெரிந்த தகுதி வாய்ந்த ஒரு மூன்றாம் நபரிடம் காட்டி உறுதிபடுத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்தார் சற்குருநாதன். 

கேட்டைத் திறந்து ஸ்கூட்டியை உள்ளே நுழைத்து எப்போதும் போல காம்பௌண்ட் சுவர் ஓரமாக நிறுத்தினேன். “பேரு தான் பெத்த பேரு, ஆனா பவிசு.. இந்த ஊர்ல இதுக்கெல்லாம் அரையணாவுக்கு பிரயோசனம் உண்டா?”  புலம்பியபடி மாடிப் படிக்கட்டுக்கு ஏறுவதற்கு முன் வாசலில் வைக்கப்பட்டிருந்த மரத்திலான பெயர்ப் பலகையை கைக்குட்டையால் துடைத்தேன்.  ‘டாக்டர் பரந்தாமன், சைக்கியாட்ரிஸ்ட்’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த அந்தப் பெயர்ப்பலகையைப் படித்துவிட்டு இந்த திருநெல்வேலி டவுனில் என்னை வந்து பார்த்தவர்கள் எவ்வளவு பேர் என்று கைவிரல்களை மடக்கி எண்ணி விடலாம். இங்கே மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் குறைதீர நெல்லையப்பர் கோவிலுக்குப் போய் வேண்டிக்கொண்டு வாசலில் இருட்டுக்கடை அல்வா சாப்பிட்டுவிட்டு சந்தோஷமாக வீடு திரும்புகிறார்கள் போல. 

நேற்று காலை பதினோரு மணி இருக்கும். கதவு லேசாகத் தட்டும் சத்தம் கேட்டு ஆர்வத்துடன் “யெஸ், கமின்” என்ற அடுத்த நொடியில் உள்ளே நுழைந்தது பத்து வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன். எங்கேயோ பார்த்தமாதிரி இருந்தது.  “யார் நீ? என்ன வேணும்” என்று கேட்டதும் ஒரு கசங்கிய வெள்ளைத் தாளை நீட்டினான். “அக்கா உங்க கிட்ட தரச் சொன்னாங்க”.

“இது என்னடா வில்லங்கம்” என்று திக்திக் இதயத்துடன் பிரித்துப் பார்த்தேன். என் அலுவலகத்தில் டைப்பிஸ்ட் வேலை வேண்டி விண்ணப்பம். ‘உயர்திரு டாக்டர் அவர்களுக்கு’ என்று தொடங்கியது எனக்கே பெருமையாக இருந்தது. ஆளில்லாத டீக்கடையில் டீ ஆத்தும் என்னிடம் வேலை கேட்கும் அந்தப் பெண்ணை நினைத்துச் சிரிப்பு வந்தது. இப்போது நினைவுக்கு வந்தது. கீழ் போர்ஷனில் வசிக்கும் குடும்பம்.  நான் அந்தக் கடிதத்தைப் படிக்கும்வரைக் காத்திருந்து பிறகு பதில் எதுவும் எதிர்பார்க்காமல் “நான் வரேன் தாத்தா” என்று நகர்ந்தான் பொடியன். 

அடப்பாவி…தாத்தாவா? இன்னும் நான் ஐம்பது வயதை நெருங்கவில்லை. என் பெண் ப்ளஸ் ஒன் படிக்கிறாள். தலையில் கொஞ்சம் வழுக்கை விழுந்தாலே இந்த பொடியன்களும் பெண்களும் நம்மை அசிங்கப்படுத்தி விடுகிறார்கள். அவனது அக்கா என்னிடம் டைப்பிஸ்டாக வேலைக்கு சேர்ந்து “நீங்க தந்த லெட்டரை டைப் பண்ணிட்டேன். போய்ட்டு வரேன் தாத்தா” என்று சொல்வது போன்ற காட்சி மண்டைக்குள் ஓடியது. சுவற்றில் மாட்டியிருந்த கண்ணாடியில் பார்த்து தலைமுடியை கைகளால் பரபரவென்று தேய்த்து பரவலாக்கிக் கொண்டேன். ம்ம்., முன்பக்க வழுக்கையில் ஒரு பத்து சதவிகிதம் மறைந்தது. 

அன்று காலையிலிருந்து இதுவரை பேஷன்ட்ஸ் யாரும் தென்படாததால் ஏதாவது மர்மக் கதை எழுத முயற்சிக்கலாமா என்று யோசித்தபடி கம்ப்யூட்டரை ஆன் செய்தபோது, கதவைத் தட்டாமல் லேசாகத் திறந்து எட்டிப்பார்த்துப் பின் அவசரமாக உள்ளே நுழைந்தவர் என் எதிரே அமர்ந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு நேரடியாக விஷயத்துக்கு வந்தார். 

“சார், என் பேரு சற்குருநாதன், மூணாவது தெருமுக்குல பச்ச கலர் பெயிண்ட் அடிச்சிருக்குமே, அந்த வீட்டில வசிக்கிறேன். இன்சூரன்ஸ் ஏஜெண்ட்.”

“சொல்லுங்க சார், என்ன பிரச்னை?”

“கொஞ்ச நாளா நான் பத்மாசன போஸ்ல உக்காந்திட்டு யோகாசனம் செய்யுற போது உடம்பு லேசா எழும்பி மேலப் பறக்கிற மாதிரி..”

அவர் வாக்கியத்தை முடிக்கும் முன் நான் பேசத் தொடங்கினேன். “இது எவ்வளவு நாளா இருக்கு. இந்தக் கனவு தூங்கின உடனே வருதா.. இல்ல விடியக் காலைல வருதா?” 

“சார் ஒரு நிமிஷம்”

“இதோ பாருங்க, இதப்பத்தி, இந்த புஸ்தகத்தில இருக்கிறதப் படிக்கிறேன், கேளுங்க. பலருக்கு பறப்பதுபோல் கனவு வருவது மிகவும் இயல்பானது. கவிஞர் கண்ணதாசனுக்கு அடிக்கடி வானில் பறப்பது போன்ற கனவு வருமாம். இதுகுறித்து பலவிதமான உளவியல் காரணங்கள் சொல்லப்பட்டாலும் தளைகளில் இருந்து விடுபட நினைப்பது முக்கிய குறியீடாகக் கருதப்படுகிறது.”

“சார், படிச்சி முடிச்சாச்சா?” சொல்லிக்கொண்டிருந்த என்னை அவர் இப்போது இடைமறித்தார். “நான் சொல்றது கனவில்ல. நிசமாலுமே.”

“அப்படியா? பறக்குறதுன்னா பறந்து எவ்வளவு தூரம் போக முடியுது?” கிண்டலாகக் கேட்டேன். 

“நக்கலடிக்கிறீங்கன்னு புரியுது. அந்த மாதிரிப் பறக்கிறதில்ல சார். லேசா ஒரு அரை அடி தரையில் இருந்து எழும்ப முடியுது”. 

“அதுகூட கண்டிப்பா சாத்தியமில்ல. இதுவரை புவியீர்ப்பு விசைக்கு எதிராக யாரும் விஞ்ஞான பூர்வமா எதையும் செய்து காட்டியதா உலக சரித்திரத்திலேயே ஆதாரம் இல்ல.”

“உங்களால நம்ப முடியாதுன்னு தெரியும். எனக்கு ஒரு பத்து நிமிஷம் டைம் கொடுங்க. இங்கேயே இப்பவே செய்து காட்டுறேன்.”

சொல்லிக்கொண்டே என் அனுமதி எதுவும் எதிர்பாராமல் பட்டென்று வேட்டியை மடித்துக் கட்டி உள்ளே போட்டிருந்த பட்டாப்பட்டி டிராயர் தெரியும்படி பத்மாசன போஸில் தரையில் அமர்ந்து கொண்டார். என் கவனம் முழுவதும் திறந்திருந்த வாசல் கதவை பார்த்தபடி தான் இருந்தது. சட்டென்று யாராவது வந்துவிட்டால் இங்கே என்ன நடக்கிறது என்று சொல்லிப் புரியவைக்க முடியாதே என்ற ஆதங்கம் தான் தலை தூக்கியது. 

ஒரு உளவியல் மருத்துவராக என்னால் இதை நம்ப முடியவில்லை என்றாலும் என் கண்கள் பார்த்து மூளை உணர்ந்து பதிவு செய்த அந்த ஒரு நொடிக் காட்சி உண்மை நிகழ்வு என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இதனை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டி அவரை இன்னொரு முறை செய்து காட்டச் சொன்னேன். கண்களைச் சிமிட்டாமல் உற்றுப் பார்த்தேன். மீண்டும் பத்மாசனம். பாபா முத்திரை. ஏதோ புரியாத தமிழில் மந்திர முணுமுணுப்பு. வலிப்பு வந்தது போன்ற முகக் கோணல். இப்போது ஓரளவு தெளிவானது. தரையிலிருந்து அரையடிக்கும் குறைவான உயரம். இரண்டு நொடி நேரம். அவ்வளவே. அந்த காட்சியை புலன் உணர்வு உள்வாங்கிக் கொள்ளும் முன்னரே லேசான தட் என்ற சத்தத்துடன் தரையை தொட்டு விடுகிறார். குழப்பத்தில் இருந்த நான் பெருமூச்சு விட்டபடி நான் என் நாற்காலியில் அமர்ந்து கொண்டு அவரை எதிரில் உட்கார வைத்து அவரிடம் இது நிஜமாக இருக்கும் பட்சத்தில் இதனால் அவருக்கு நேரவிருக்கும் சாதக பாதகங்களை விளக்கினேன்.

“முதலில் இது வெளி உலகுக்கு தெரிந்தால் மூன்று விஷயங்கள் நடை பெறலாம். ஒன்று ஜனங்களுக்கு தெரிஞ்சு போய் உங்களுக்கு அந்தர சாமியார் இல்லைன்னா தொங்கு சாமியார்னு பேர் வெச்சு கற்பூர ஆரத்தி எடுத்துக் கும்பிடலாம். நீங்களும் அதுக்கு ஓக்கேன்னா சில்லறை தேத்தி கல்லா கட்டலாம். அடுத்தது ஏதாவது மாஜிக் ஷோல ஜாயின் பண்ணிக்கிடடு பிரபலமாகலாம். மூனாவதா அரசாங்கம் உங்களை அள்ளிட்டுப்போய் உடம்பெல்லாம் ஊசி குத்தி ஃபிளக் பண்ணி ஆராய்ச்சி பண்ணுவாங்க. நீங்க கிட்டத்தட்ட லேப்ல ஆராய்ச்சி எலி மாதிரி ஆயிடுவீங்க. எனக்குத் தெரிந்து மூன்றாவது விஷயம் நடக்கறதுக்கான சாத்தியக்கூறுகள் தான் அதிகம்.”

“ஐயையோ!” என்றார் சற்குருநாதன்.

“நான் சொல்லப் போற மூன்று விஷயங்களில் ஏதாவது ஒண்ணுல முன்னேற்றம் ஏற்பட்டால் சொல்லுங்க. இந்த சிக்கலைத் தவிர்த்து நாம ரகசியமாக விஷயத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தலாம். ஒன்று உயரம். இப்போதைய நான்கு அங்குலம், புவியீர்ப்பு எதிர்விசையை நிரூபணம் செய்ய போதுமான உயரம் இல்லை. இரண்டாவது நேரம். ஓரிரண்டு நொடிகளில் இந்நிலையிலிருந்து பொத்தென்று விழுந்து தரை தொடுவதும் நம்பகத் தன்மைக்கு சிக்கல். மூன்றாவது நகர்வு. புவியீர்ப்பு எதிர்நிலையில் ஒரு சில அடிகளாவது நகர முடிந்தால் உத்தமம்.” 

இதை விளக்கியதும் “இந்த மூன்றும் செய்ய முடிஞ்சா?” வினவினார் சற்குருநாதன்.

“அப்ப நீங்க மனிதகுல சரித்திரத்திலேயே பறக்க முடிந்த மூன்றாவது கதாபாத்திரமா இருப்பீங்க. அதுலயும் முதலாவது மனுஷன் நீங்களா தான் இருப்பீங்க.” 

“சூப்பர் மேன் தெரியும். இன்னொன்னு யார்?”

“அனுமார்.”

கன்சல்டேஷன் ஃபீஸ் எவ்வளவு என்று அவராகவே கேட்டுத் தந்துவிட்டு மேற்கொணடு எதுவும் பேசாமல் திக்பிரமை பிடித்ததுபோல் வெளியேறினார் சற்குருநாதன். 

அதற்குப்பிறகு சில நாட்கள் அந்தக் காட்சிகள் மனதில் ஓடிக் கொண்டிருந்தாலும் எனக்கு நொடிப்பொழுது நேர்ந்த மருட்சியின் வெளிப்பாடே அது என்று என்னைத் தேற்றிக் கொண்டேன். கல்லூரி நாட்களில் பேரா-சைக்காலஜி என்று சொல்லப்படும் அமானுஷ்ய  உளவியலில் ஆர்வம் இருந்ததால் ஏராளமான சித்தர்கள் குறித்த ஆராய்ச்சி நூல்கள் தமிழில் வாங்கிக் குவித்திருந்தேன். சட்டென்று நினைவு வந்து பரணிலிருந்து முனைவர் திருஞானபண்டிதன் எழுதிய ‘அஷ்டமா சித்து’ என்ற புத்தகத்தை எடுத்து தூசி தட்டிப் புரட்டினேன். அஷ்டமா சித்துக்களில் ஒன்று பரகாயப் பிரவேசம். கூடுவிட்டு கூடு பாய்வது.  அதாவது தன் உடலில் இருந்து உயிரை வெளியேற்றி அருகில் இருக்கும் இறந்து கிடக்கும் உடலிலோ அல்லது உயிரோடு இருப்பவர்கள் முழுமனதுடன் சம்மதித்து அவர்கள் உடலில் பிரவேசம் செய்வது. சரியான மந்திர உச்சாடனம், சீரான மூச்சளவு, குறிப்பிட்ட ஆசனத்தில் அமர்வு இதெல்லாம் இந்த சித்து நிகழ்வைத் தீர்மானிக்கும். இது மிகவும் ஆபத்தான ஒரு சித்து வேலை என்பதால் இதனைச் செய்ய பிரசித்தி பெற்ற சித்தர்களும் அஞ்சுவார்கள்.

‘முழி பிதுங்கி வாய் கோணி நாக்குழறி இலகுவாகி மேலெழும்பும் உடல் உயிர் பிரியும் தன்னுடல் நீங்கி பரகாயம் சேருமுன்’ என்ற பெயர் தெரியா சித்தரின் பாடல் ஒன்றும் குறிப்பில் இருந்தது. இப்போது பொறி தட்டியது. ஒருவேளை பறப்பதாக நினைத்துக்கொண்டு பரகாயப் பிரவேசப் பயிற்சியை அவரே அறியாமல் தற்செயலாகச் செய்து வருகிறாரோ. அதனால் லேசாக உடல் மேலெழுவதைப் பறப்பதாக தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார். ஆபத்தை உணராமல் செய்யும் அவரது நடவடிக்கையை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும். 

அதற்கு அடுத்த வாரம் ஒருநாள் திருநெல்வேலி டவுன் கடைத் தெருவில் நூறடி தூரத்தில் சற்குருநாதன் தள்ளு வண்டிக் கடையில் பழங்கள் வாங்கிக் கொண்டு இருப்பதைப் பார்த்தேன் அவர் அருகே நான் செல்லும்போது அவரும் என்னை கவனித்தது போல் இருந்தது. அவரை நெருங்குவதற்குள் சட்டென்று நழுவி எதிர் பக்கம் இருந்த ஒரு குறுக்கு சந்தில் நுழைந்து மாயமானார். மனுஷன் என்னைச் சந்திப்பதை தவிர்க்க முயல்கிறாரோ என்று தோன்றியது

மறுநாள் சனிக்கிழமை. காலையில் எப்போதும் போல சீக்கிரமாகவே கிளினிக் வந்துவிட்டேன். எங்கிருந்தோ சங்கு ஊதும் சத்தமும் சாவுக்கு அடிக்கும் மணியோசையும் விட்டுவிட்டுக் கேட்டது. கீழ் வீட்டுப் பையன் தான் கதவைத் தட்டி எனக்குத் தகவல் தந்தான்.  “அன்னைக்குக் கூட உங்களப் பாக்க வந்தாரே, அந்த தாத்தா தான்”. மூணாவது தெருமுக்கு பச்சை பெயிண்ட் என்று அன்றைக்கு சற்குருநாதன் சொன்னது நினைவிருந்தது. அவரது வீட்டுக் காம்பௌண்டுக்குள் ப்ரீசர் பாக்ஸ் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு மேல் பலவிதமான சைஸில் ரோஜா மாலைகள். நாமும் ஒரு மாலை வாங்கி வந்திருக்கலாமோ எனறு தோன்றியது. கை கூப்பியபடி மெல்ல அருகில் சென்று எட்டிப் பார்த்தேன். ப்ரீசர் பெட்டிக்குள் சற்குருநாதன் கண் மூடி சலனமற்றிருந்தாலும் ஏதோ கலவரம் அவர் முகத்தில் லேசாகப் படிந்திருந்தது. வாய் வலதுபக்கம் சற்று வலிப்பு வந்தது போல் கோணியிருந்தது.

“ஹார்ட் அட்டாக்காம். நேற்று கூட சாயங்காலம் அவர் கிட்ட பேசினேன். நல்லாத்தான் இருந்தார். ஒரே பையன். நியூடெல்லி விஞ்ஞான் பவன்ல வேலை செய்றான். அவன் வந்து சேர்ந்ததும் ஈமக்கிரியை ஆரம்பிக்க வேண்டியது தான்” என்று ஒருவர் விளக்கமாக சொல்லிக் கொண்டிருந்தார்.

வீட்டு ஹாலில் மூண்று பெண்கள் சுற்றி அமர்ந்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்க, நடுவில் புடவைத் தலைப்பால் அடிக்கடி முகத்தைப்  பொத்தியவாறு அழுதபடி இருந்தார் சற்குருநாதனின் மனைவி. என்னை அழைத்து வந்த நபர் அவர் அருகே போய் ஏதோ சொல்லத் தடுமாறியபடி எழுந்து கொண்டார். “நீங்க தான் டாக்டருங்களா? உங்களத்தான் வந்து பார்க்கனும்னு அடிக்கடி சொல்லிட்டே இருந்தார். ஏதோ யோகாசனம் பத்தி பேசனும்னு.”. 

“எப்படி ஆச்சு இது” என்று பொத்தாம் பொதுவாக நான் அவரிடம் கேட்டு வைக்க “எப்பவும் போல காலைல ஹால்ல யோகாசனம் பண்ணிட்டு இருந்தார். நான் சமையல் ரூம்ல எலிப்பொறியில் மாட்டி செத்துப்போன எலியோட வாலை துணியில சுத்திப் பிடிச்சிக்கிட்டு ‘இதப்பாருங்க! கடைசியா சிக்கிடுச்சின்னு’ சொல்ல,  யோகாசனத்துல உக்காந்திருந்தவரு தலைய மட்டும் திருப்பிப் பார்த்து ஒருமாதிரி முழிச்சி மூச்சுத் திணறி படார்னு சரிஞ்சிட்டாரு. நானும் மயக்கமாயிட்டேன்.”

“செத்துப் போன அந்த எலி எங்கே?”

“இதோ இங்க தான் போட்டேன்” என்று சொல்லி விசும்பியபடி அவர் அமர்ந்து கொள்ள மீண்டும் பெண்கள் ஒப்பாரி தொடர்ந்தது.

 “என்ன சார் பேசுறீங்க. எலியெல்லாம் ஒரு மேட்டரா. அத்த கர்மத்தை யாராவது தூக்கிப் போட்டுட்டு அங்க சுத்தம் பண்ணி இருப்பாங்க. செத்துப் போன எலி என்ன உயிர் வந்து ஓடியா போயிருக்கும்?” என்று கூட வந்தவர் என்னைக் கோபித்துக் கொண்டார்.

இந்தக் கதையின் கடைசி வாக்கியம் ஒரு திடுக்கிடும் திருப்பம் வேண்டி இட்டுக் கட்டப் பட்டதல்ல. எந்த ஒரு உள்ளர்த்தமும் இல்லாமல் நடந்த ஒரு சம்பவத்தை அப்படியே காட்சிப்படுத்திய விவரணை மட்டுமே. அதேசமயம், படித்த மருத்துவக் கோட்பாடுகள் மற்றும் அறிவியல் விதிகளின் மீதான அசாத்திய நம்பிக்கை கொண்டுள்ள நான் பகுத்தறிவுக்கு ஒப்பாத எந்த ஒரு முடிவுக்கும் வரவில்லை என்று இப்போதே திட்டவட்டமாக கூறிவிடுகிறேன். 

ஈமச்சடங்குகள் முடிய எப்படியும் நேரமாகும். சாவு வீட்டிலிருந்து யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கிளம்ப வேண்டும் என்பது சட்டென்று நழுவ எப்போதும் ஒரு வசதியான விதியாகவே படுகிறது. செருப்பை மாட்டிக்கொண்டு காம்பௌண்டை நான் நெருங்கியபோது புழக்கடைப் பக்கம் வைத்திருந்த தட்டுமுட்டு சாமான்களிடையே இருந்து ஒரு பெருத்த எலி குறுகுறுவென்று வெளியே வந்தது. அதன் மூக்குப் பகுதியில் லேசான ரத்தக்கசிவு. கண நேரம் தாமதித்துத் தலையை உயர்த்திய அதன் குட்டிக் கருவிழிகள் ஒருமுறை என்னை உற்றுப் பார்த்தது பிரமையா நிஜமா என்று நான் யோசித்த நொடியில் அது தெருவின் வெளிப்பக்கமாக வேகமாக ஓடி மறைந்தது.

பரகாயம்


Saturday, May 3, 2025

ஊழிப் பெருவெள்ளம்

ஊழிப் பெருவெள்ளம்  - சசி




ஏப்ரல் 30, 2025  - சொல்வனம்

ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகாமையில் தனி வீடு” என்று தொடங்கும் தினத்தந்தியின் நாலாம் பக்க, ஆறாம் பத்தி விளம்பரம் என் கண்ணில் பட்டபோதே விதி எங்கள் வாழ்க்கையில் தாயக்கட்டையை உருட்டத் தொடங்கிவிட்டது. 

 -முதல் தவறு, அருகில் என்ற வார்த்தைக்கு எதிர்ப்பதம் தான் அருகாமை. உண்மையில் இதற்கு தூரத்தில் என்று தான் பொருள் என்று தமிழறிஞர்கள் பலர் இப்போது சொல்வதைக் கேட்டிருக்கவேண்டும். இல்லையென்றால் குறைந்தபட்சம் திருக்குறள் அதிகாரங்களின் பெயர்களாவது தெரிந்திருக்க வேண்டும். ‘ஆமை’யில் முடிகிற வார்த்தைகளெல்லாம் எதிர்ச்சொல் என்று இப்போதுதான் புரிகிறது. கொல்லாமை, கல்லாமை, வெகுளாமை.  இரண்டாவது தவறு, சைட்டைப் பார்க்க ஓசியில் ப்ளாட் ஏஜெண்ட் காரில் போகாமல் தன்னிச்சையாக கும்மிடிப்பூண்டிக்கு ரயிலில் போய் அங்கிருந்து ஆட்டோ பிடித்துப் போயிருக்கவேண்டும். 

சைட் புரோக்கர் மேகநாதன் வெள்ளை நிற இண்டிகா கார் கொண்டு வந்திருந்தார். மேற்கு மாம்பலம் போளி ஸ்டால் முன்பாக காலை ஏழு மணிக்கெல்லாம் எங்களை பிக் அப் செய்தார். ஏற்கனவே காரில் ஒரு பார்ட்டி பின் சீட்டில் அமர்ந்திருந்தார். கார்த்திக் அண்ணா, நான், அம்மா மூன்று பேரும் பின்பக்கம் அவரோடு அமர்ந்தோம், நான் கிட்டத்தட்ட கார்த்திக்  மடியில் உட்கார வேண்டியிருந்தது. நல்லவேளை, கல்பனா அண்ணியும் குழந்தையும் வரவில்லை. கும்மிடிப்பூண்டி ஸ்டேஷன் அருகே வந்ததும் முன்னால் டிரைவருக்குப் பக்கத்தில் ஹாயாக உட்கார்ந்திருந்த மேகநாதன் ஒரு டூர் கைடாகவே மாறிவிட்டார். ‘இதோ இங்க ஹாஸ்பிடல், அதோ அங்க ஸ்கூல், பக்கத்துல காலேஜ்’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். “இதெல்லாம் இங்க இருக்கா” என்று கேட்டதற்கு கூடிய சீக்கிரம் எல்லாம் அங்கே வரப்போவதாக சொன்னார். கும்மிடிப்பூண்டியிலிருந்து சைட்டுக்கு போகும் வழியில் ஓரிடத்தில் காலை டிபனுக்கு காரை நிறுத்தினார்.  இந்த நேர விரயம் மற்றும் காரில் இடநெருக்கடி போன்ற காரணங்களால் கும்மிடிபூண்டியிலிருந்து சைட்டுக்கு எவ்வளவு நேரம் என்று எங்களால் சரியாக அனுமானிக்க முடியவில்லை. எனக்கென்னவோ இது புரோக்கர் மேகநாதனின் மார்க்கெட்டிங் யுக்தி என்றே தோன்றியது.

இதற்குப் பிறகு அட்வான்ஸ் எல்லாம் கொடுத்து மனை புக்கிங் செய்தபிறகு ஒருநாள் நானும் அம்மாவும் ரயில் பிடித்து கும்மிடிப்பூண்டியில் இறங்கி ஆட்டோ ஸ்டாண்டில் விசாரித்தோம். 

“எந்த குமரன் நகர்.. இங்க மூணு இருக்கு”.  

“பிள்ளையார் கோயில் இருக்கே. அது..”

“ம்ம், ரெண்டு குமரன் நகர்ல பிள்ளையார் கோயில் இருக்கு.”

“என்ன அடையாளம் சொல்வது என்று யோசித்த எனக்கு சட்டென்று அது நினைவுக்கு வந்தது.

“ஆடிட்டர் வீடு.. வாட்டர் டாங்க்.. போட் மாதிரி இதுக்குமே, அங்க..”

“ஓ, அதுவா, பொட்டல் குமரன் நகர்னு சொல்லு”

“பொட்டலா?”

“காலியா இருக்குமில்ல, அதான்.. 250 ரூபா ஆவும்”

“என்னது 250 ஆ?”

“ஆமா, அவ்வளவு தூரம் போயிட்டு ரிட்டர்ன் காலியா வரணுமில்ல”

“நாங்க ரெண்டுமணி நேரத்துல ரிடர்ன் வந்திடுவோம்.” 

“அவ்ளோ நேரமா? ஆத்திர அவசரத்துக்கு அங்க ஒரு போன் கூட வேலை செய்யாது”

“ஏன், என் பிஎஸ்என்எல் போன் அங்க வேலை செஞ்சுதே”

“அது கவன்மெண்ட்டு போன். ஆளே இல்லன்னாலும் டவர் போடுவான். என் போனு ஏர்டெல்லு. கார்ப்பேட்டு.. உங்க அஞ்சி ஆறு பேருக்கெல்லாம் டவர் போடமாட்டான்”. 

இதைவிட எங்கள் ஏரியாவை அவமானப்படுத்த முடியாது. அன்று, தாங்கமுடியாத கோபத்தில் சைட் புரோக்கர் மேகநாதனுக்கு போன் செய்தேன். “ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து சைட்டு கூப்பிடுற தூரம்னு சொன்னீங்க”

“ஆமா சுகுமார், இப்ப நீங்க அங்கயிருந்து தானே கூப்பிடுறீங்க.” 

“ஓ, அதாவது போன்ல கூப்பிடற தூரமா? “ கோபமாகக் கேட்ட எனக்கே சிரிப்பு வந்தது.

பணியின்போது இறந்துபோன அப்பாவின் செட்டில்மெண்ட் பணத்தில் வீடு கட்டி அங்கே குடி போன பிற்பாடு அந்த ஆட்டோ டிரைவர் சொன்னது சரியென்று எங்களுக்கே புரிந்தது.

எப்படியானாலும் மேற்கு மாம்பலத்தில் ஜனசமுத்திரத்தில் நீந்திப் பழக்கப்பட்ட எங்களுக்கு அந்த வெட்டவெளிப் பொட்டல் பிடித்துப் போயிற்று. எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் அரை கிலோமீட்டர் தொலைவில். 

2015ல் டிசம்பர் மாத ஆரம்பம். இரண்டு நாள் முன்பாக அண்ணியும் குழந்தை நித்யாவுடன் திருவொற்றியூரில் அண்ணி வீட்டுக்கு போயிருந்தார்கள். ஒரு வாரம் கழித்து வருவதாக ப்ளான். அப்போது கார்த்திக் அண்ணாவுக்கு விம்கோ நகரில் வேலை. நான் வேலை தேடும் வேலையில் இருந்தேன். 

முதள் நாள் லேசான தூறலில் மழை ஆரம்பித்து பொட்டல்வெளியில் மழைவாசனை வீசவும் கார்த்திக் விசிலடித்தபடி ரூமை விட்டு வெளியே வந்தான். 

“சுகு, வெளிய பார்றா.. என்ன அழகான சீனரி..ரசிக்கனும்டா. அம்மா!  சூடா மிளகாபஜ்ஜி போடுமா. இந்த மழைக்கு சூப்பரா இருக்கும்.” 

மாலை ஐந்து மணிக்கெல்லாம் கொஞ்சம் மழை பலமாகவே பெய்யவே “நாளைக்கு ஆபீஸுக்கு லீவு சொல்லிடறேன். எனக்கு என்னமோ போக முடியும்னு தோணல.” என்றான் கார்த்திக்.

பஜ்ஜி சாப்பிட்ட தட்டை கிச்சன் சிங்கில் கார்த்திக் டொங்கென்று போட்டபோது அவன் போன் அடித்தது. டிவியில் வானிலை அறிக்கையில் சென்னையில் பலத்த மழைக்கு வாய்ப்பு என்று சொன்னதைக் கேட்டு அம்மாவை ஸ்டேஷன் வரை கொண்டு வந்து விட்டால் ராகவை அனுப்பி அவர்கள் வீட்டில் மழை ஓயும்வரை வைத்துக்கொள்வதாக அண்ணி கேட்டார்களாம். எப்போதும் முரண்டு பிடிக்கும் கார்த்திக் உடனே ஒப்புக்கொண்டான்.  அண்ணி வீடு திருவொற்றியூரில் மூன்றாவது மாடி. பக்கத்திலேயே ஹாஸ்பிட்டல். அது தவிர அவர்கள் குடியிருப்பிலேயே ஒரு டாக்டரும் இருக்கிறார். அம்மாவுக்கு மழைக்காலம் வந்தால் ஆஸ்துமா தொந்திரவு அதிகமாகி மூச்சிரைப்பு வந்துவிடும். அம்மாவை ஸ்கூட்டியில் ஸ்டேஷனுக்கு கொண்டுபோய் அண்ணியின் தம்பி ராகவிடம் ஒப்படைக்கும் வேலை எனக்கு என்று முடிவானது. 

சாயந்திரம் அம்மாவைக் கூட்டிக் கொண்டு போகும்போது ஒன்றும் சிரமம் தெரியவில்லை. கும்மிடிபூண்டி ஸ்டேஷன் அருகில் ஒரு பேக்கரியில் நித்யா குட்டிக்கு கேக், பிஸ்கட் வாங்கி அம்மாவிடம் கொடுக்கும் போது எங்களுக்கும் கொஞ்சம் ஸ்நாக்ஸ் வாங்கிக் கொண்டேன். மறக்காமல் மெழுகுவத்தி வாங்கச் சொன்னான் கார்த்திக். எதற்கு என்று புரியவில்லை. கரண்ட் போனால் பயன்படுத்த வீட்டில் இன்வெர்ட்டர் பொருத்தியிருந்தோம். அது கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்திற்கு வரும். அதற்குள் மழை நின்றால் கரண்டும் வந்துவிடுமே.

அம்மாவை ராகவிடம் சேர்ததுவிட்டு  திரும்பி வரும்போது காட்சிகள் முற்றிலுமாக  மாறியிருந்தது. வழியெல்லாம் வெள்ளக்காடு. ஸ்கூட்டி தண்ணீரில் தத்தளித்துத் தடுமாறியது. கார்த்திக்கை தொடர்பு கொள்ள முயற்சித்த போது நெட்வொர்க் சுத்தமாக இல்லை. பக்கத்தில் ஏதோ ஏரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் விளைவாக செல்போன் டவர் சரிந்து விட்டதாக வழியில் பேசிக் கொண்டார்கள். வீட்டு வாசலில் ஸ்கூட்டி நிறுத்தும் வெராண்டாவில் கணுக்கால் அளவு தண்ணீர் தேங்கியிருந்தது. வீட்டுக்குள்ளே நுழைந்தபோது கரண்ட் இல்லை. இன்வெர்டர் ஓடிக்கொண்டிருந்தது. 

“இந்த வீட்டுக்கு வந்து நாம பண்ண ஒரே புத்திசாலித்தனமான விஷயம் இந்த இன்வெர்ட்டர் வாங்கினது தான்.ஒரு பேன் ரெண்டு லைட் போட்டா நாலு மணி நேரம் பேக் அப் வரும்” என்று சொன்னான் கார்த்திக். ஏழு மணிக்கு டிவியை போட்டு ஆதித்யா டிவியிம் வடிவேலு காமெடி பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான். ‘ஒரு நிமிஷம் நியூஸ்’ என்று டிவி சேனலை மாற்றினேன். ‘இப்போதைக்கு மழை குறையாது. இரண்டு நாட்களுக்கு மிக கனமழை தொடரும்’ என்று செய்தியாளர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே டிவி அணைந்தது. இன்வெர்ட்டர் காலி. 

“என்னடா இது, இப்படி ஆயிடுச்சு. இன்னைக்கு கரெண்ட் வராது போல இருக்கு” என்ற நான் டார்ச் லைட்டைத் தேடி எடுத்தேன். கார்த்திக் பேட்டரியைக் கண்டுபிடித்து அதில் போட்டு உதறினான். இரண்டு மூன்று முறை உதறினால் தான் அது வேலை செய்யும்.  

மறுநாள் மழை பலத்தது. பிசுபிசு என்று எங்கே பார்த்தாலும் தண்ணீர். அன்று முழுதும் நான் காப்பி போட்டேன். கார்த்திக் சுடச்சுட உப்புமா செய்தான். ப்ரிட்ஜில் மிச்சமிருந்த மாவில் தோசை வார்த்தான். டிவி, ட்யூப்லைட் இல்லாத அன்றைய பேய்மழை இரவில், மெழுகுவத்தி வெளிச்சத்தில் திடீரென்று எங்கள் பேச்சு மழைப் பாடல்களைப் பற்றிய க்விஸ்ஸாக உருமாறியது. 

“ரேவதி மழையில டான்ஸ் ஆடுற பாட்டு என்னன்னு சொல்லு பாப்போம்” நான் கேட்க

“வான்.. மேகம். பூப்பூவாய்.. தூவும்.. புன்னகை மன்னன் படத்துல” பட்டென்று சொன்னான் கார்த்திக்.

“இன்னொன்று?”

“ரேவதியேவா? எனக்கு ஞாபகம் வரல”

“ஓஹோ.. மேகம் வந்ததோ.. மௌனராகம்.  சரி, இப்ப கமல் படத்தில?”

“அந்தி மழை மேகம்… நாயகன்ல. அப்புறம் அடடா மழடா..அட மழடா. தமன்னா சூப்பர் டான்ஸ், என்ன படம் சொல்லு.”

“ம்ம்., பையா..கார்த்திக் படம்” 

பேசி ஓய்ந்தபின் இரவு டார்ச் வெளிச்சத்தில் வாசல் கதவைப் பார்த்தபோது லேசாகத் தண்ணீர் ஹாலுக்குள் வந்து கொண்டிருந்தது. “அடக்கடவுளே.. இப்ப என்னடா பண்றது” கார்த்திக் தலையைப்ப் பிடித்தபடி சோபாவில் அமர்ந்தான். 

நாங்கள் இருவரும் வெளியே வந்து பார்த்தபோது வாசலில் வெள்ளம் குபுகுபுவென்று ஓடிக்கொண்டிருந்தது. “ஏரி வெள்ளம் தான் ஊருக்குள்ள நுழைஞ்சிருக்கு. போனும் வேலை செய்யல. கரண்டும் இல்ல. நாம ஏதாவது முன்னேற்பாடு செய்துக்கனும்” என்றான் கார்த்திக்.

எல்லா கதவு ஜன்னல்களை இறுக்கமாக சாத்தினோம். “நான் இங்க ஹால்ல சோபால படுத்துக்கிறேன். நீ ரூம்ல படுத்துக்கோ. அலெர்ட்டா இரு. எதுன்னாலும் கூப்பிடறேன்” என்று சொல்லி கார்த்திக்கை ரூமுக்கு அனுப்பி சோபாவில் சாய்ந்தேன்.

ஏதேதோ கலவையாகக் கனவுகள். என்னை யாரோ தூக்கி தொப்பென்று தண்ணீரில் போடுவது போல.. நான் ‘காப்பாத்துங்க காப்பாத்துங்க’ என்று அலற எங்கள் ஏரியாவுக்கு பொட்டல் என்று பேர் வைத்த ஆட்டோக்காரர் முண்டாசு கட்டியபடி படகு துழாவுகிறார். ‘அய்ய.. உங்க அஞ்சு பேருக்கோசுரம் அங்கெல்லாம் போட் வராது சார்’ என்று சிரிக்கிறான். மூச்சுத் திணற கண் திறந்தால் வலது கை சிலீரென்றது. சோபா உயரத்திற்கு ஹாலில் தண்ணீர். ஹாலில் இருந்த விதவிதமான பொருள்கள் நீரில் வட்டமடித்தபடி மிதந்து கொண்டிருந்தன. கார்த்திக்கை தட்டி எழுப்பினேன். ஹாலுக்குள் முட்டியளவு தண்ணீரை பார்த்ததும் மிரண்டு போனான். 

நிலைமை சீரியஸ் என்று இருவருக்குமே புரிந்தது.  மொட்டைமாடியில் இருக்கும் ஸ்டோர் ரூமுக்கு முக்கியமான பொருள்களை எடுத்துச் செல்ல திட்டமிட்டோம். லிஸ்ட் பெரிதானது. டிவி, துணிமணி, கியாஸ் ஸ்டவ், கொஞ்சம் பாத்திரங்கள், குடை, மிச்சமிருக்கும் சாப்பிடத் தகுந்த திண்பண்டங்கள், மளிகைப்பொருள், கயிறு, டார்ச், பழைய பேப்பர், கந்தல் துணி, மெழுகுவத்தி, தீப்பெட்டி, முக்கியமாக பீரோவிலிருந்த கொஞ்சம் பணம், நகை, என் டிகிரி சர்டிபிகேட்.

மழைக்கு மறைவாக தண்ணீர் தொட்டிக்கு அடியில் மொட்டைமாடியில் நாங்கள் செட்டிலான இரண்டு மணி நேரத்தில் தரைத்தளம் முழுவதும் மூழ்கி விட்டிருந்தது.  இரவு ஒரு மணிக்கு மொட்டைமாடி ஸ்டோர் ரூமுக்குள் தண்ணீர் வரத் தொடங்கியது. கார்த்திக் “எனக்கென்னமோ நாம சேஃபா வாட்டர் டேங்க் மேல ஏறிடலாமுனு தோணுது சுகு” என்றான். 

சரி என்று நான் ஆமோதிக்க

“இந்த டேங்க கட்டுறதுக்கு பதில் சிண்டெக்ஸ் தொட்டி வைக்கலாம்னு நீ சொன்னியே. ஞாபகமிருக்கா?” மழைநீரை முகத்திலிருந்து வழித்தபடி கார்த்திக் கேட்டான். 

“அதுக்கென்ன இப்போ?”

“சிண்டெக்ஸ் தொட்டிக்கு மேல எப்படி ஏறி உக்காருவ?”

“இப்ப கூட நக்கல்டா  உனக்கு” என்றேன் கோபமாக.

“இடுக்கண் வருங்கால் நகுக” என்றவன்  “மறுபடி லிஸ்ட்., இந்தமுறை ஷார்ட் லிஸ்ட்”

வாட்டர் டேங்க் இரும்பு ஏணியில் குடையுடன் “தண்ணித்தொட்டித் தேடிவந்த கன்னுக்குட்டி நான்” என்று பாடிக்கொண்டே கார்த்திக் ஏற மிக முக்கியமான ஷார்ட் லிஸ்ட் பொருள்களுடன் நான் அவனைப் பின் தொடர்ந்தேன்.

நாங்கள் இருவரும் வாழ்க்கையில் எங்களுக்குள் இவ்வளவு விஷயங்கள் பேசினதேயில்லை. அப்பாவைப் பற்றி, காலேஜ் அனுபவங்கள், கார்த்திக் ஆபிஸ் கலீக்ஸ் பற்றி, எங்கள் சின்ன வயசு கதைகள் ரிவைண்ட். வாழ்க்கையின் கடைசி நாள் போல பேசிக்கொண்டே இருந்தோம். மழை வெள்ளம் இன்னும் நாலடி உயர்ந்தால் ஆபத்து என்ற நிலைமையை உணர்ந்தபின்னும் சிரித்துக்கொண்டிருந்தோம்.

மிதமாக மழை பெய்தால்தான் அழகு, ரசனை, ரம்மியம், கவிதை எல்லாம். அதுவே அதிகமாகி பெருமழையாகத் தொடர்ந்தால் அழகியல் மாறி அழிவியல் ஆரம்பமாகி விடுகிறது. 

கடைசி மெழுகுவத்தியை ஏற்றி அது அணையாமலிருக்க சர்பிகேட் இருந்த ப்ளாஸ்டிக் கவரால் மறைத்த போது தான் அதை நான் கவனித்தேன். “கார்த்திக், என்னடா இது, என்னோட சர்டிபிகேட் இருக்கிற ப்ளாஸ்டிக் கவருக்குள்ள ஏதோ நியூஸ் பேப்பர் இருக்கு”  

“அது வந்து.. பழைய தினத்தந்தி பேப்பர். நான் டென்த்ல ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்தது என் போட்டோவோட இதுல போட்டாங்க. அப்பா தாண்டா இத பத்திரமா எடுத்து வெச்சார்” என்று சொன்ன கார்த்திக்கின் கண்களில் நீர் துளிர்த்தது.

அரைமயக்கத்தில் இருந்த எங்களை படபடவென்ற சத்தம் பதறியடித்தபடி மேலே வானத்தைப் பார்க்க வைத்தது. வட்டமிட்டபடி ஒரு ஹெலிகாப்டர். “ ஹெலிகாப்டர நாம இதுக்கு முன்ப சினிமாவிலத் தான் பாத்திருக்கோம், அதுவும் இவ்வளவு கிட்டக்க.. நம்மள காப்பாத்த வந்தாங்களோ?”

“ப்ச்.. சாப்பாடு போடறாங்க போல. ஏதாச்சும் பண்ணி அவங்கள பார்க்க வச்சா தான் பொட்டலத்தை போடுவாங்க. என்ன பண்ணலாம், நனையாத காகிதம், துணி ஏதாச்சும் இருக்கா” என்று நான் பரபரக்க ஒன்றும் யோசிக்காமல் கார்த்திக் பட்டென்று பிளாடிக் உறையில் என் சர்டிபிகேட் கவரில் வைத்திருந்த அவன் போட்டோ வெளியான நியூஸ் பேப்பரை வெளியே எடுத்தான். பத்து வருடத்து முந்திய மக்கிப்போன அந்த செய்தித்தாள் கபகபவென்று பற்றி எரிந்தது. வெளிச்சம் பார்த்து உயரத்தில் வட்டமடித்த ஹெலிகாப்டர் ப்ளாஸ்டிக் பொட்டலம் ஒன்றை வீசியெறிய அது தண்ணீர்த்தொட்டி அருகில் விழுந்து மிதந்தது. நான்கு மில்க் பிக்கீஸ் பேக்கெட், மூன்று மினி வாட்டர் பாட்டில், இரண்டு புளிசாதப் பொட்டலம். ப்ரூட்டீஸ் இரண்டு, அத்துடன் அரை டஜன் வாழைப்பழம். 

“கொஞ்சமாவது யோசனை இருந்திருந்தா இதுல ஒரு மெழுகுவத்தியும் தீப்பொட்டியும் வெச்சிருப்பானுங்க” என்றேன்.

“ம்ம்..சரிதான்,  நெருப்புல மாட்டிக்கிட்டா நம்மள காப்பாத்த தண்ணி தேவைப்படுது. அதேபோல தண்ணியில சிக்கிட்டா நமக்கு நெருப்பு தான் துணை போல.. இந்த தீப்பெட்டிய,  சர்டிபிகேட் இருக்குற பிளாஸ்டிக் உறைக்குள்ள பத்திரமா வை.” பேண்ட் பாக்கெட்டிலிருந்த தீப்பெட்டியை என்னிடம் நீட்டி “கரண்ட், டார்ச், மெழுகுவத்தின்னு அப்படியே பின்னோக்கி வந்து இப்ப ஆதிமனுஷன் மாதிரி தீப்பந்தம் ஏந்தி நிக்கிறோம்” என்றான் கார்த்திக்

“சுடச்சுட மிளகா பஜ்ஜியிலிருந்து நமுத்துப் போன மில்க் பிக்கீஸ்க்கு வந்துட்டோம். கார்த்திக், ஒரு குட்டிக் கவிதை ஒண்ணு சொல்லட்டா.. சடசடவென பெய்தது மழை. உடன் படபடவென விரிந்தது குடை, மழையைப் புறக்கணிக்கும் கருப்புக் கொடியாய்” 

“நல்லா இருக்குடா. சொல்லும்போதே மழ பெய்யுற மாதிரி சத்தம், யார் எழுதினது, வைரமுத்துவா?”

“ஹிஹி.. நான் தான்,” 

“டேய் சுகு,  நீ கவிதை எல்லாம் கூட எழுதிவியா?  இவ்வளவு நாளா எனக்கு தெரியாதேடா.”

“எனக்கும் தான் நீ தத்துவமெல்லாம் பேசுவேன்னு தெரியாது” என்றேன். 

“மில்க் பிக்கீஸ் பிஸ்கெட் இதுக்குமுன்ன எப்ப சாப்பிட்டோம்னு ஞாபகம் இல்ல. இவ்ளோ டேஸ்டா இருக்கே“

“ஆனாப் பாரு, இந்த புளி சாதம் மட்டும் எவ்வளவு பசியில சாப்பிட்டாலும் ருசிக்கல. ஏதோ கடமைக்குன்னு சாப்பிடற மாதிரிதான் இருக்கு.” அலுத்துக் கொண்டான் கார்த்திக். 

ஒரு கட்டத்தில் எங்களுக்கு இந்த இரவே கடைசி என்றுதான் தோன்றியது. மழை நின்றுவிட்டபோதும் நீர்மட்டம் உயர்ந்துகொண்டே இருந்தது. நாங்கள் நின்றுகொண்டிருந்த தண்ணீர்த் தொட்டி இப்போது பாதிக்குமேல் மூழ்கியிருந்தது. “நாம செத்துடுவமா சுகு” என்று கேட்டு கார்த்திக் சிறிது நேரம் மெளனமாக இருந்தான். பிறகு திடீரென்று என் தோள்களைப் பற்றிக்கொண்டுக் குலுங்கி அழுதான். “சாகறதப் பத்திக் கவலையில்லடா. அதுக்கு முன்ன அம்மா கிட்ட ஒரு சாரி சொல்லனும். போன்ல பேச முடிஞ்சாக்கூட இப்பவே சொல்லிடுவேன்”. எதற்காக என்று அவனும் சொல்லவில்லை. நானும் கேட்கவில்லை. யோசித்துப் பார்த்தபோது எனக்கு அப்படி எதுவும் சாகிறதுக்கு முன் செய்ய என்று ஒன்றுமில்லை என்றே தோன்றியது. என்ன, செத்துப் போவதுக்கு முன் ஒரு வேலை கிடைத்திருக்கலாம். 

மழையிலும் வெள்ளத்திலும் நனைந்து கார்த்திக்கும் நானும் கோழிக்குஞ்சுகள் போல் வெடவெடத்தபடி ஒருவரையொருவர் பற்றிக்கொணடு நின்றிருந்தோம்.

தூரத்தில் இருட்டில் படகு ஒன்று மிதந்து வருவதை கார்த்திக் தான் முதலில் பார்த்தான். அதில் கைலி கட்டிய இரண்டு தெய்வங​கள். ஒருவர் கையில் இருந்த டார்ச் லைட் வெளிச்சத்தால் இருட்டில் அங்குமிங்கும் துழாவிக் கொண்டிருந்தார். இன்னொருவர் துடுப்பு போட்டுக் கொண்டிருந்தார். குடியிருப்பில் யாராவது மிச்சமீதி உயிரோடு இருக்கிறார்களா என்று பார்க்க வந்திருப்பார்கள் போல.

கும்மிருட்டு. எங்களால் படகை மங்கலாக பார்க்கமுடிந்ததே தவிர அதிலிருந்தவர்கள் மொட்டைமாடி நீர்த்தொட்டியின் மேல் வெடவெடத்தபடி நிற்கும் எங்களைப் பார்த்திருக்க சாத்தியமேயில்லை.  இன்னும் ஒருசில நிமிடங்களில் படகு வந்தவழியே திரும்பி விடலாம். எப்படியாவது அதற்குள் அவர்கள் கவனத்தை எங்கள் பக்கம் ஈர்க்க வேண்டும். எப்படி? 

கார்த்திக் என்னைப் பார்த்த பார்வையிலே  எனக்குப் புரிந்தது. ஒன்றும் பேசாமல் ப்ளாஸ்டிக் உறையை திறந்து என் டிகிரி சர்டிபிகேட்டை வெளியில் எடுத்து அவனிடம் நீட்டினேன். “கவலைப்படாதே, டூப்ளிகேட் அப்ளை பண்ணி வாங்கிடலாம்” என்ற கார்த்திக் அதை வாங்கி உருட்டிப் பதட்டத்துடன் தீக்குச்சியால் பற்றவைத்தான். என் டிகிரி சர்டிபிகேட் மக்கிப்போன செய்தித்தாள் போல் இல்லாமல் சட்டென்று பற்றிக்கொண்டு ஜெகஜோதியாக எரிந்தது. அதைப் பார்த்தபோது எனக்கு அது ஏதோ வார்த்தைகளேயில்லாத ஒரு கவிதை போல இருந்தது. 

இப்போது படகு மெதுவாக எங்களை நோக்கித் திரும்பி நகரத் தொடங்கியது. படகு எங்களை நெருங்கியதும் பரபரப்பு ஓய்ந்து நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டேன்.

 “கார்த்திக், புளிசாதம் பாக்கெட் ஒண்ணு மிச்சமிருக்கு. எடுத்துக்கிடலாமா” என்று கேட்டேன். கோபமாகப் பார்ப்பது போல் முறைத்துப் பின் சிரித்தான். “உனக்கு வேனும்னா மில்க் பிக்கீஸ் அரை பாக்கெட் இருக்கு. அதையும் எடுத்துக்கோ” 

“கண்டிப்பா எடுத்துப்பேன்”

படகில் வரும்போது நான் தான் கவனித்து கார்த்திக்கிடம் காட்டினேன். ஆடிட்டர் வீட்டு போட் வாட்டர் டாங்க் மொத்தமும் மூழ்கி மஞ்சள் பெயிண்ட் அடித்த போட்டின் வளைவான மேல் நுனி மட்டுமே தெரிந்தது. “அட, இந்த இடத்தை விட நம்ம ஏரியா கொஞ்சம் மேடு போல” என்று அந்த இக்கட்டிலும் மெலிதாக மகிழ்ச்சியை கார்த்திக் வெளிப்படுத்தினான். 

பெருவெள்ளம் வரும்போது கண்டிப்பாக பத்திரப்படுத்த வேண்டிய பொருள்களின் பட்டியலில் முதலில் இருப்பது சர்டிபிகேட்ஸ் என்றுதான் எல்லோரும் சொல்வார்கள். என் டிகிரி எனக்கு வேலை வாங்கித்தந்து சோறு போடும் என்றெல்லாம் நினைத்தேன். கடைசியில் அது ஆபத்துக்கு உதவும் தீப்பந்தமாகத் தான் மாறியது. இந்த வரிசையில் இரண்டாவது முக்கிய பொருள் தீப்பெட்டி என்பது எங்கள் அனுபவம் தந்த பாடம்.

கதையை முடிக்கும் வரை எந்த இடையூறும் செய்யாமல் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த என் நண்பர்கள் மத்தியிலிருந்து டீம் லீடர் சரவணன் சொன்னான். “கிளைமாக்ஸ்ல, டிகிரி பத்திக்கிட்டு உங்க உயிரையில்ல காப்பாத்தியிருக்கு. மொத்தத்தில கதை, ரொம்ப திரில்லிங்கா இருந்துது” 

“என்ன கொடுமை சரவணன் இது? கதையா?” அதிர்ச்சியானேன்.

“சாரி சுகுமார், பட், ட்ரூத் இஸ் ஸ்ட்ரேஞ்சர் தென் பிக்‌ஷன். சரி, அதுக்கப்புறம் மழை சீசன் வரும்போதெல்லாம் உங்களுக்கு பயமா இருந்திருக்கும்ல?”

“நிச்சயமா இல்ல. பயமெல்லாம் முதல் தடவை தான். ஒருமுறை பட்ட அவஸ்தை, கிடைச்ச அனுபவம் இதெல்லாம் எங்களுக்கு எந்த வெள்ளத்தையும் சமாளிக்கிற மன உறுதியைக் கொடுத்திருக்கு.”

“இந்தமுறை உங்க ஏரியா மழை வெள்ளத்தை எப்படி சமாளிச்சீங்க?”

“அதுவா? ரொம்ப சிம்பிள்.. வாசல்ல கணுக்கால் அளவுக்கு தண்ணி தேங்கினதுமே உஷாரா வீட்டைப் பூட்டிட்டு குடும்பத்தோட அங்கிருந்து ஜூட் விட்டுட்டோம். உயிர் முக்கியமில்ல”.


ஊழிப் பெருவெள்ளம்







Monday, February 3, 2025

நேர்காணல்

நேர்காணல்       -சசி 

சொல்வனம்-   ஜனவரி 12, 2025


“கூகுள்ல லொகேஷன் சர்விஸ்னு ஒன்னு இருக்கும். அதில நாம கடைசியா எங்கெல்லாம் இருந்தோம்னு பார்க்க முடியும்.” 

“நீங்க சொல்றது கரெக்ட் தான் சார். ஆனா அது நம்ம ப்ரைவஸிக்கு பாதுகாப்பானது இல்லைன்றதால அதை நான் என் போன் செட்டிங்ஸ்ல ஆஃப் பண்ணி வெச்சிருக்கேன்”


நானாக வலியச் சென்று இந்த சக்கர வியூகத்தில் மாட்டிக் கொண்டு விட்டேனோ என்று தோன்றியது. பதில் ஏதும் சொல்ல முடியாமல் வாயடைத்துப் போய் நின்று இருந்தேன். என் முன்னே இருந்த அந்த இளைஞன் நான் அடுத்து என்ன கேள்வி கேட்கப் போகிறேன் என்று காத்துக் கொண்டிருக்கும் முகபாவனையில் இருந்தான்.

தனியாக இருக்கும் எல்லா ஞாயிற்றுக்கிழமை போல இன்றும் சாவகாசமாக கண்விழித்து தி நகர் இண்டியன் காபி ஹவுஸில் காலை டிபன் சாப்பிட ஆஜரானேன். இன்று மதிய உணவு என் மாமியார் வீட்டில், வேளச்சேரியில்.  டிபனுக்கு பின் காபியைக் குடித்து விட்டு பஸ் நிலையத்திலிருந்து 5B பஸ்ஸை பிடித்துச் செல்ல வேண்டியதுதான். ஏற்கனவே நேற்று முன்தினம் என் மனைவி குழந்தை மீனாவுடன் வேளச்சேரி சென்று இருந்தாள். வெளியே வந்து தம் பற்ற வைத்தபோது, 30 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞன் தயக்கத்துடன் என்னைப் பார்த்துக் கொண்டே மெதுவாக நெருங்குவதை உணரமுடிந்தது. அவன் ஏதாவது இடத்திற்கு வழி கேட்கப் போகிறானா என்று யோசித்த நொடியில் அவன் கையில் பெட்டியோ பையோ ஏதும் இல்லாததை கவனித்தேன். கண்டிப்பாக ஏதாவது பொய் சொல்லி உதவி கேட்டு நூதன வழிப்பறி செய்யும் ஒரு ஆசாமியாக இருக்கும் வாய்ப்பே அதிகம்.

“எக்ஸ்க்யூஸ் மி சார், ஒரு நிமிஷம்”

ஊருக்கு வந்த இடத்தில் பணம் கொள்ளை அடித்து விட்டார்கள் என்று பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இந்த இளைஞன் சொன்ன கதை முற்றிலும் வினோதமாக இருந்தது. ஆங்காங்கு நான் கேட்ட எதிர் கேள்விகளை எல்லாம் வெகு சுலபமாக உடைத்துச் சுக்கு நூறாக்கி விட்டு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தான்.

“சார், என் பேரு பிரேம் குமார், இங்க கோடம்பாக்கத்தில் ஒரு பைனான்ஸ் கம்பெனியில திங்கட்கிழமை எனக்கு இண்டர்வியு. அதுக்காக காலைல கோவையிலிருந்து எக்ஸ்பிரஸ்ல சென்னை சென்ட்ரல் வந்து சேர்ந்தேன். சென்னை எனக்கு அவ்வளவா பழக்கம் இல்லாததால ஆட்டோக்காரர் கிட்டயே இன்டர்வியூ நடக்கிற இடத்தை சொல்லி அதுக்குப் பக்கமா ஏதாவது ஒரு நல்ல லாட்ஜுக்கு கூட்டிட்டு போகச் சொன்னேன்.”

“ம்ம்?”

“கோடம்பாக்கத்தில் இண்டர்வியு  நடக்கிற ஆபீஸ் பக்கம் சரியான லாட்ஜ் ஏதும் இல்லாததால் அதற்கும் தி நகருக்கும் இடைபட்ட இடத்தில ஒரு லாட்ஜில் விடுவதாகவும் மேலும் அங்கிருந்து சுளுவா தி நகருக்கு ஆட்டோவில் சாப்பிட வரலாம்னு ஆட்டோ டிரைவர் சொன்னார்”.

“சரி?”

“ஆட்டோவை லாட்ஜுக்கு உள்பக்க வராண்டால நிறுத்திட்டு அப்படியே பத்து நிமிஷத்தில வந்தீங்கன்னா டிபனுக்கு ட்ராப் பண்றேன்னு ஆட்டோ டிரைவர் சொல்ல.. நானும் உள்ளே போய் ரிசப்ஷன்ல வாடகையை கூகுள்பே பண்ணிட்டு சாவியோட ரூமுக்கு ஓடினேன். அவசர அவசரமாக கீழே ஓடி வந்து மறுபடியும் ஆட்டோல ஏறி உட்கார்ந்தேன். தி நகர் சரவண பவன் முன்னாடி இறக்கிவிட்டு  டிரைவர் கிளம்பினார். சாப்பாடு டோக்கன் வாங்க பர்ஸை தேடின போதுதான் எனக்கு விஷயமே புரிந்தது“

“என்ன ஆச்சு. பர்ஸ் காணாம போயிடுச்சா.. இல்ல, திருட்டு போயிடுச்சா?”  

“ரெண்டும் இல்ல சார். ரூம்ல முகம் அலம்ப பாத்ரூமுக்கு போகும் போது டேபிள் மேல பர்ஸையும் மொபைலையும் வெளியே எடுத்து வெச்சிருந்தேன். அதை எடுத்துட்டு வர மறந்துட்டேன்.”

“பர்ஸ் உங்க கிட்ட இல்லன்னா ஆட்டோ டிரைவருக்கு எப்படி பணம் கொடுத்தீங்க?”

“ஷர்ட் பாக்கெட்ல 200 ரூபா சில்லறை இருந்தது.” 

“ஆட்டோவுக்கு எவ்வளவு கொடுத்தீங்க”

“மொத்தம் 170 ரூபாய்?”

வசமாக மாட்டிக் கொண்டு விட்டான்.  “சரி, அப்போ உங்க பாக்கெட்டுக்குள் இப்ப மிச்சம் 30 ரூபாய் இருக்குமா?” 

மேல் சட்டை பாக்கெட்டில் கைவிட்டு சரியாக 30 ரூபாய் சில்லறை எடுத்துக் காட்டினான் அந்த இளைஞன். பக்காவாக பிளான் செய்து வந்திருக்கிறானோ?

சரவண பவனில் 11 மணிக்கு மேல் தான் சாப்பாடு ஆரம்பம் என்பது சட்டென்று நினைவுக்கு வந்தது. ஆட்டோ டிரைவர் இவனை டிபனுக்கு விடுவதாகத் தானே சொன்னார். “நீங்க சரவண பவன் போய் சேர்ந்தப்ப மணி என்ன?”

“பதினோரு மணிக்கு மேல ஆயிடுத்து. இன்னைக்கு நான் வந்த ரயில் அரை மணி நேரம் லேட்டு. நீங்க நான் சொல்றது உண்மையான்னு டெஸ்ட் பண்ணுறீங்கன்னு தெரியுது. பரவாயில்ல. ஆனா நான் சொல்றது எல்லாமே உண்மை தான் சார்.”

“இபபவும் ஒரு பிரச்சனையும் இல்லை. இங்கே இருந்து ஒரு ஆட்டோ பிடிச்சு நேரா லாட்ஜுக்கு போயிடுங்க. ரூமுக்கு போய் பர்ஸை எடுத்துட்டு வந்து ஆட்டோவுக்கு செட்டில் பண்ணிடலாம். அவ்வளவு தானே?.”

“சிக்கலே அங்க தான் சார்.  நான் ஒரு பெரிய தப்பு பண்ணிட்டேன். நான் அதை சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க.”

 “ஏன், என்ன ஆச்சு?” 

“உண்மையிலேயே அந்த லாட்ஜ் எங்க இருக்குன்னு எனக்குத் தெரியாது. ஆட்டோ அங்க என்னை உள்ளுக்குள்ளார விட்டதால வெளியே லாட்ஜ் பெயரை நான் கவனிக்கவும் இல்லை. ரிசப்ஷன்ல இருந்தவரை ஞாபகம் இருக்கு. ஆனா அங்கயும் நேம் போர்ட் ஏதும் இல்லை. நிஜமாகவே எனக்கு இப்ப மறுபடியும் அங்க எப்படிப் போய் சேருவது என்று புரியவில்லை. அந்த லாட்ஜை கண்டுபிடிக்க நீங்க தான் எனக்கு உதவி பண்ணனும் சார்.  நாளைக்கு இண்டர்வியுக்கு தேவையான சர்டிபிகேட் பைல் எல்லாம் அங்க தான் இருக்கு. முக்கியமா என்னோட மொபைல் போன்..”

என்னையும் அறியாமல் “அடப்பாவி!” என்று கத்தினேன். அவன் உண்மையைத் தான் சொல்கிறானா இல்லை என்னை ஏமாற்றி பணம் வாங்க ஏதாவது முயற்சி செய்கிறானா என்று புரியவில்லை. ஆனால் ஒருவேளை இது உண்மையாக இருந்தால் அவனுடைய லாட்ஜை எப்படி கண்டுபிடிப்பது என்பது எனக்கும் ஒரு சவாலாகத் தோன்றியது. 

“லாட்ஜ் ரூம் சாவி எங்க?”

“வரும்போது அதை ரிசப்ஷன்ல கொடுத்திட்டேன். எப்படியும் அதுல பேர் எதுவும் இல்ல சார்.”

“இன்னொரு யோசனை, இண்டர்வியு நடத்துற கம்பனிக்கே போய் விவரத்தைச் சொல்லி உதவி கேட்கலாமே.”

“சார், இன்னைக்கு ஞாயிற்றுக் கிழமை. அதுவுமில்லாம என் கதையை கேட்ட பிறகு எவனாவது எனக்கு வேலை குடுப்பானா?”

“அதுவும் சரிதான், உங்க மொபைல் நம்பர் சொல்லுங்க. முதல்ல அதுக்கு ரிங் பண்ணி பார்ப்போம்.” 

“ரூமுக்குள்ள இருக்கிற மொபைல் சத்தம் வெளியே கேட்க சான்ஸ் இல்ல. இருந்தாலும் நம்பர் சொல்றேன். ட்ரை பண்ணிப் பாக்கலாம்.”

அவன் தந்த மொபைல் நம்பருக்கு போன்  செய்தேன். எடுக்கப்படாமல் ரிங் போய்க்கொண்டிருந்தது. அவன் சொல்வது ஒருவேளை நிஜம் என்றால் அவன் லாட்ஜை எப்படிக் கண்டு பிடிப்பது?

“சரி, லாட்ஜிலிருந்து இங்க ஆட்டோல வர எவ்வளவு நேரம் ஆச்சு?”

“கிட்டத்தட்ட அரை மணி நேரமிருக்கும்”

“இன்னைக்கு சண்டே. டிராபிக் குறைவு. கோடம்பாக்கத்துக்கும் திநகருக்கும் இடையிலன்னா..மேற்கு மாம்பலம், பாண்டிபஜார்..ரங்கராஜபுரம்.. எது வேணாலும் இருக்கலாம். ஒரு ஆட்டோ எடுத்து ரவுண்ட் அடிக்கலாம். ஆனா அப்படி கண்டுபுடிக்க முடியுமான்னு தெரியல, ஒருவேளை போலிஸ் கிட்ட போனா..”

“சார், என்ன சொல்றீங்க, ஏதாவது தொலைஞ்சு போச்சு இல்ல திருட்டு போச்சுன்னா, அவங்க கிட்ட போய் சொல்லலாம். என் கதைய போய் அவங்க கிட்ட சொன்னா சிரிப்பாங்க.”

“சரி, லாட்ஜுக்கு எவ்வளவு வாடகை குடுத்தீங்க”

“ஆயிரத்து நானூறு ரூபா” 

“இண்டர்நெட்ல இங்க அக்கம்பக்கத்தில அந்த வாடகை ரேஞ்ச் இருக்கிற லாட்ஜுக்கு எல்லாம் போன் போட்டு பாக்கலாம். அதுவும் சரிப்படுமான்னு தெரியல. சரி, உங்களுக்கு என்ன வழி தோணுது?”

“நான் யோசிச்சு ஒரு வழி தான் இருக்கு சார். என்னோட போன் இருந்தா போதும். லாட்ஜுக்கு ஜிபே பண்ணி இருக்கேன். அந்த போன் நம்பருக்கு பேசினா லாட்ஜை கண்டுபிடித்து விடலாம்.”

“போன் தான் இல்லையே. லாட்ஜுல மாட்டிக்கிச்சே”

“கரெக்ட், ஆனா ஒரு ஆதார் காப்பி இருந்தா போன் சிம் டூப்ளிகேட் வாங்கிடலாம். அப்புறம் ஒரு பேசிக் மாடல் மொபைல் போன் ஒன்னு வாங்கிட்டா.. அதுல கூகுள் பே பதிவிறக்கம் பண்ணி அதிலிருந்து லாட்ஜ் போன் நம்பரை புடிச்சிடலாம்.”

இப்போது எனக்கு விளங்கி விட்டது. ஒரு பேசிக் மாடல் போன். அத்தோடு ஒரு டூப்ளிகேட் சிம் கார்டு வாங்கத் தேவையான பணம். அதற்குத் தான் இவன் என்னிடம் அடிபோடுகிறான் அல்லது இந்த சம்பவத்தைக் கட்டமைத்து என்னிடம் பணம் பறிக்கத் திட்டமிடுகிறான். வித்தியாசமாக இருந்த இந்தக் கதையை நம்புவதா வேண்டாமா? என் புத்திசாலித்தனத்தின் மீதான நம்பிக்கையில் அவன் ஏதாவது ஒரு இடத்தில் இடறுவான், தடுமாறுவான் என்று நினைத்தேன். அவனோ எல்லா கேள்விகளுக்கும் சரியான பதில் வைத்திருந்தான். கொஞ்சமும் யோசிக்காமல் பட்டென்று பதிலும் சொன்னான்.

“இப்ப ஒரு நாலாயிரம் ரூபா இருந்தா பிரச்னை தீர்ந்திடும் சார்.”

“சரி, இப்ப அதுக்கு நான் என்ன செய்யனும்”

“நான் சொன்னத எல்லாம் நீங்க நம்புனா எனக்கு உதவி செய்யலாம். போன், புது சிம் கைக்கு வந்துட்டா பணத்தை உடனே திருப்பிக் கொடுத்திட முடியும். நாளைக்கு மட்டும் எனக்கு இண்டர்வியு இல்லன்னா கவலைப்பட மாட்டேன். இந்த ரோட்டோரமா கூட படுத்துட்டு எப்படியாவது திரும்பி வீடு போய் சேர்ந்திடுவேன்.”

இப்படிச் சொல்லிவிட்டு என் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். 

சட்டென்று பொறி தட்டியது போல் தோன்றிய எனது கடைசி அஸ்திரத்தை இறக்கினேன். “எல்லாம் சரி. இப்போ உங்களுக்குத் தேவையானது பணம் தானே. நான் என்னுடைய போன் தரேன். அதுல உங்க வீட்டுல யாரையாவது கால் பண்ணி என் நம்பருக்கு ஜிபே பண்ண சொல்லுங்க. அதை நான் ஏடிஎம்ல இருந்து எடுத்துத் தந்திடறேன்.“ 

“நீங்க சொல்றது சரிதான் சார். எனக்கும் அது தோணுச்சு. என் அப்பா உயிரோட இல்லை. உண்மையிலேயே எனக்கு எங்க அம்மா நம்பரைத் தவிர வேறு எதுவும் ஞாபகத்துக்கு வரல. எல்லாமே போன்ல தான் இருக்கு. அம்மாவுக்கு போன் பண்ணி பிரயோஜனமே இல்லை. அவங்களுக்கு பணம் அனுப்பவும் தெரியாது. அதைத் தவிர இப்ப இதெல்லாம் தெரிஞ்சா அவங்க ரொம்ப டென்ஷன் ஆயிடுவாங்க. ஹார்ட் பேஷண்ட் வேற.”

சொல்லும் கதையில் கொஞ்சம் சோகம் கொண்டு வருகிறானோ? ஒரு நொடி யோசித்துப் பார்த்தபோது அவன் சொல்வதும் சரிதான் என்று தோன்றியது. எனக்கும் என் மனைவி நம்பரைத் தவிர வேறு எந்த மொபைல் நம்பரும் ஞாபகத்துக்கு வருமா என்பது சந்தேகமே. நாம் எல்லோருமே மொபைல் போனுடன் ஆதார் எண்ணை மட்டுமல்ல. நம் மொத்த வாழ்க்கையையும்  லிங்க் செய்து வைத்திருக்கிறோம். எல்லோருமே போனுக்கு அடிமைதான். கையில் மொபைல் இல்லை என்றால் நம் எல்லார் கதையும் கந்தல் தான். 

“என்னால இதை நம்ப முடியல, அவசரத்துக்கு உங்களோட ஒரு நண்பன் போன் நம்பர் கூட தெரியாதா?”

சட்டென்று ஏதோ ஞாபகம் வந்தது போல் “சார் ஒரு நிமிஷம் உங்க போனை குடுங்க” என்று வாங்கி சிறிது தொலைவில் சென்று கால் செய்து பேசிவிட்டுத் திரும்பி வந்தான். 

“ஒன்னும் பிரயோஜனம் இல்ல சார்”

“ஏன்? என்ன ஆச்சு, பேசிட்டு இருந்த மாதிரி கேட்டதே!”

“அவனெல்லாம் ஒரு நண்பனே இல்லை சார்.  நிலைமையை விளக்கிச் சொன்ன பிறகும் அஞ்சு பைசா இல்லைன்னு கைய விரிச்சுட்டான்”. 

தொடர்ச்சியாக ஒருவரால் பொய் சொல்ல முடியாது என்ற எனது அதீத நம்பிக்கையை அவன் உடைத்து விட்டான் அல்லது தொடர்ந்து அவன் சொல்வதெல்லாம் உண்மை என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வளவு விசாரணைக்குப் பிறகு அவன் கேட்ட உதவியை செய்ய வேண்டும் என்பதைத் தவிர வேறு வழி இல்லை. ஒருவேளை ஏமாற்றுப் பேர்வழி என்றாலும் அவன் என்னைக் களத்தில் வென்று விட்டான். அதற்கான பரிசு அது.  

ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொடுத்தபோது என் இரு கைகளைப் பற்றி நன்றி சொன்னான். என் போன் நம்பரை வாங்கிக்கொண்டு “போன் சிம் வாங்கினதும் உடனே உங்களுக்கு பணம் அனுப்பிடறேன் சார்” என்றான். 

வேளச்சேரியில் நடுராத்திரி அரைமயக்கத் தூக்கத்தில் திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. அவன் புரட்டு ஆசாமி இல்லையென்றால் சரவண பவன் வாசலில் ஆட்டோ அவனை விட்டுச் சென்ற காட்சி கண்டிப்பாக ஓட்டலின் சிசிடிவி கேமராவில் பதிவாயிருக்கும். அதன் மூலமாக ஆட்டோ நம்பரைக் கண்டுபிடித்து டிரைவரை தொடர்பு கொள்ள முடியுமே. எப்படியும் பணம் என் கையை விட்டு போனபின் இனி இதெல்லாம் இப்போது யோசித்துப் பயனில்லை. 

காலையில் எழுந்ததும் மனைவி கேட்டாள். “என்னங்க ஆச்சு, ராத்திரி முழுக்கத் தூக்கத்துல லாட்ஜ் ஆட்டோன்னு பினாத்திட்டே இருந்தீங்களே?” விஷயத்தை சொன்னால் கட்டித் தொங்க விட்டு விடுவாள். ‘அஞ்சு ரூபாய்க்கு ஆயிரம் நொள்ளை கேள்வி கேப்பீங்க. எவனோ ப்ராடு ஒருத்தனுக்கு சுளையா நாலாயிரம் அழுதுட்டு வந்திருக்கீங்க’

திங்கட்கிழமை காலையிலிருந்தே அவன் நினைப்பாகவே இருந்தது. இதுவரை அவன் பணம் ஏதும் அனுப்பவில்லை. இன்று இண்டர்வியு என்றானே. கொஞ்சம் காத்திருப்போம் என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். இருப்பு கொள்ளாமல் மதியம் மூன்று மணியளவில் போன் அழைப்புப் பதிவிலிருந்த அவன் நம்பருக்கு ரிங் செய்தேன். பதில் ஏதுமில்லை. இதற்கென்ன அர்த்தம்? பயனில் இல்லாத மொபைல் எண் ஒன்றை அவனுடையது என்று சொல்லியிருக்கிறான். நேற்று அழைப்புப் பதிவில் இருந்த இன்னொரு எண் அவனுடைய நண்பனை அழைத்ததாக அவன் சொன்னது. அந்த நம்பருக்கு அழைப்பு விடுத்தேன். ஒரு நொடியில் யாரோ மறுமுனையில் எடுக்க. “ஹலோ யாரு பேசறது” என்று நான் கேட்டதற்கு பதில் வந்தது. 

“சங்கர் பஞ்சர் கடை சார்” 

“என்னது? பஞ்சர் கடையா, எங்க இருக்கு உங்க கடை?” 

“தி நகர் பஸ் ஸ்டாண்ட் எதிர்பக்கம் சார்”

இப்போது எனக்கு எல்லாம் தெளிவாகப் புரிந்தது. அவன் என்னிடம் நேற்று போனை வாங்கி அவன் நண்பனிடம் பேசுவது போல எதிர்புறம் இருக்கும் பஞ்சர் கடையின் போர்டில் இருந்த போன் நம்பருக்குப் பேசி இருக்கிறான் போல. 

மொத்தத்தில் என்னை சுத்தமாக ஏமாற்றி விட்டிருக்கிறான். நானும் வடிகட்டிய மடையனாக நாலாயிரம் ரூபாய் அவனுக்கு அள்ளிக் கொடுத்திருக்கிறேன். பணம் விரயமென்றால் எள்ளு அல்லது காந்தி கணக்கு என்பார்கள். இதை எட்டு காந்தி கணக்கு என்று வைத்துக் கொள்ள வேண்டும். ஏடிஎம்மில் எடுத்த புத்தம் புதிய எட்டு ஐநூறு ரூபாய் நோட்டுகள்

மாலை ஒரு ஏழு மணி இருக்கும். மொபைல் போன் அடித்தது. “சார், நான் பிரேம்குமார் பேசுறேன்”  சட்டென்று புரியவில்லை. பிறகு நினைவுக்கு வந்துவிட்டது. அவன் தான். 

“மதியம் போன் செய்தேன். எடுக்கவே இல்லையே” கோபத்துடன் கேட்டேன்.

“அது ஒரு பெரிய கதை சார்” 

அடப்பாவி மறுபடியும் ஆரம்பித்து விட்டானா? 

“நேத்து நீங்க போன பிறகு உடனடியாக ஒரு மொபைல் போன் அங்கேயே வாங்க முடிந்தது. ஆனால் சிம்கார்டு தான் பிரச்சனை ஆயிடுச்சு. ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிம்கார்டு டூப்ளிகேட் வாங்க முடியல. திங்கட்கிழமை தான் கிடைக்கும்னு சொல்லிட்டாங்க. என்ன செய்யறதுன்னு புரியாம அங்கேயே பக்கத்துல ஒரு சின்ன லாட்ஜில் நைட்டு தங்கிட்டேன். காலையில முதல் வேலையா கடை திறந்ததும் டூப்ளிகேட் சிம் வாங்கிட்டு லாட்ஜை கண்டுபிடிச்சு போய் சேர்ந்துட்டேன். அதுக்கே பதினோரு மணி ஆயிடுச்சு. அதனால கம்பெனிக்கு போன் பண்ணி இண்டர்வியூவ மதியம் மாத்தி வைக்கச் சொல்லி கேட்டதால மூணு மணிக்கு தான் நடந்தது. அதனால் தான் உங்க போன் கால் அட்டென்ட் பண்ண முடியல..”

“அது சரி, நேற்று உங்க பிரண்டுக்கு போன் செஞ்சீங்களே. அது என்ன பஞ்சர் கடையா?”

“மன்னிச்சுக்கோங்க சார். அந்தக் கடைக்கு மேல ஒரு இன்டர்நெட் பிரவுசிங் சென்டர் இருந்தது. அது மூடி இருந்ததால, ஆதார் கார்ட் காப்பி எடுக்க அது எப்ப திறக்கும்னு அவர் கிட்ட கேட்டேன். ஆனா என் ப்ரண்டு கிட்ட பேசினதா சொன்னது தப்புதான். எனக்கு வேற வழியும் தெரியல. எனக்கு அப்படி பணம் கொடுத்து உதவுகிற மாதிரி நண்பர்கள் யாரும் கிடையாது சார்.”

“சரி தான்”

“உங்களைத் தவிர அவ்வளவு பெரிய தொகையை வேற யாராவது கொடுத்து இருப்பாங்களான்னு எனக்கு தெரியல. நீங்க எனக்கு செய்த உதவி ரொம்ப பெருசு சார். சொல்லப்போனால் எனக்கு வேலையே அதனாலதான் கிடைச்சது.”

இப்போது என்னை நினைத்து எனக்கே பெருமையாக இருந்தது. “அதெல்லாம் விடுங்க. இன்டர்வியூ எப்படி போச்சு.”

“சுலபமா தான் இருந்தது. உண்மையிலே நீங்க நேற்று எனக்கு எடுத்த இண்டர்வியு தான் கஷ்டமா இருந்தது.” இதைச் சொல்லும்போது அவனது நமட்டுச் சிரிப்பை போனில் உணரமுடிந்தது. “அடுத்த ஞாயிற்றுக்கிழமை நான் உங்களை அதே இடத்தில் பார்த்து நேரடியா தேங்க்ஸ் சொல்லணும் சார்.” சிரித்துக் கொண்டே சரி என்றேன். போனை கட் செய்த ஓரிரு நிமிடத்தில் டொங் என்ற சத்தத்துடன் குறுஞ்செய்தி ஒன்று வந்தது. ‘உங்கள் வங்கிக் கணக்கில் ரூபாய் 4000 வரவு வைக்கப்பட்டது’



நேர்காணல்