ஊழிப் பெருவெள்ளம் - சசி
ஏப்ரல் 30, 2025 - சொல்வனம்
ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன் “கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகாமையில் தனி வீடு” என்று தொடங்கும் தினத்தந்தியின் நாலாம் பக்க, ஆறாம் பத்தி விளம்பரம் என் கண்ணில் பட்டபோதே விதி எங்கள் வாழ்க்கையில் தாயக்கட்டையை உருட்டத் தொடங்கிவிட்டது.
-முதல் தவறு, அருகில் என்ற வார்த்தைக்கு எதிர்ப்பதம் தான் அருகாமை. உண்மையில் இதற்கு தூரத்தில் என்று தான் பொருள் என்று தமிழறிஞர்கள் பலர் இப்போது சொல்வதைக் கேட்டிருக்கவேண்டும். இல்லையென்றால் குறைந்தபட்சம் திருக்குறள் அதிகாரங்களின் பெயர்களாவது தெரிந்திருக்க வேண்டும். ‘ஆமை’யில் முடிகிற வார்த்தைகளெல்லாம் எதிர்ச்சொல் என்று இப்போதுதான் புரிகிறது. கொல்லாமை, கல்லாமை, வெகுளாமை. இரண்டாவது தவறு, சைட்டைப் பார்க்க ஓசியில் ப்ளாட் ஏஜெண்ட் காரில் போகாமல் தன்னிச்சையாக கும்மிடிப்பூண்டிக்கு ரயிலில் போய் அங்கிருந்து ஆட்டோ பிடித்துப் போயிருக்கவேண்டும்.
சைட் புரோக்கர் மேகநாதன் வெள்ளை நிற இண்டிகா கார் கொண்டு வந்திருந்தார். மேற்கு மாம்பலம் போளி ஸ்டால் முன்பாக காலை ஏழு மணிக்கெல்லாம் எங்களை பிக் அப் செய்தார். ஏற்கனவே காரில் ஒரு பார்ட்டி பின் சீட்டில் அமர்ந்திருந்தார். கார்த்திக் அண்ணா, நான், அம்மா மூன்று பேரும் பின்பக்கம் அவரோடு அமர்ந்தோம், நான் கிட்டத்தட்ட கார்த்திக் மடியில் உட்கார வேண்டியிருந்தது. நல்லவேளை, கல்பனா அண்ணியும் குழந்தையும் வரவில்லை. கும்மிடிப்பூண்டி ஸ்டேஷன் அருகே வந்ததும் முன்னால் டிரைவருக்குப் பக்கத்தில் ஹாயாக உட்கார்ந்திருந்த மேகநாதன் ஒரு டூர் கைடாகவே மாறிவிட்டார். ‘இதோ இங்க ஹாஸ்பிடல், அதோ அங்க ஸ்கூல், பக்கத்துல காலேஜ்’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். “இதெல்லாம் இங்க இருக்கா” என்று கேட்டதற்கு கூடிய சீக்கிரம் எல்லாம் அங்கே வரப்போவதாக சொன்னார். கும்மிடிப்பூண்டியிலிருந்து சைட்டுக்கு போகும் வழியில் ஓரிடத்தில் காலை டிபனுக்கு காரை நிறுத்தினார். இந்த நேர விரயம் மற்றும் காரில் இடநெருக்கடி போன்ற காரணங்களால் கும்மிடிபூண்டியிலிருந்து சைட்டுக்கு எவ்வளவு நேரம் என்று எங்களால் சரியாக அனுமானிக்க முடியவில்லை. எனக்கென்னவோ இது புரோக்கர் மேகநாதனின் மார்க்கெட்டிங் யுக்தி என்றே தோன்றியது.
இதற்குப் பிறகு அட்வான்ஸ் எல்லாம் கொடுத்து மனை புக்கிங் செய்தபிறகு ஒருநாள் நானும் அம்மாவும் ரயில் பிடித்து கும்மிடிப்பூண்டியில் இறங்கி ஆட்டோ ஸ்டாண்டில் விசாரித்தோம்.
“எந்த குமரன் நகர்.. இங்க மூணு இருக்கு”.
“பிள்ளையார் கோயில் இருக்கே. அது..”
“ம்ம், ரெண்டு குமரன் நகர்ல பிள்ளையார் கோயில் இருக்கு.”
“என்ன அடையாளம் சொல்வது என்று யோசித்த எனக்கு சட்டென்று அது நினைவுக்கு வந்தது.
“ஆடிட்டர் வீடு.. வாட்டர் டாங்க்.. போட் மாதிரி இதுக்குமே, அங்க..”
“ஓ, அதுவா, பொட்டல் குமரன் நகர்னு சொல்லு”
“பொட்டலா?”
“காலியா இருக்குமில்ல, அதான்.. 250 ரூபா ஆவும்”
“என்னது 250 ஆ?”
“ஆமா, அவ்வளவு தூரம் போயிட்டு ரிட்டர்ன் காலியா வரணுமில்ல”
“நாங்க ரெண்டுமணி நேரத்துல ரிடர்ன் வந்திடுவோம்.”
“அவ்ளோ நேரமா? ஆத்திர அவசரத்துக்கு அங்க ஒரு போன் கூட வேலை செய்யாது”
“ஏன், என் பிஎஸ்என்எல் போன் அங்க வேலை செஞ்சுதே”
“அது கவன்மெண்ட்டு போன். ஆளே இல்லன்னாலும் டவர் போடுவான். என் போனு ஏர்டெல்லு. கார்ப்பேட்டு.. உங்க அஞ்சி ஆறு பேருக்கெல்லாம் டவர் போடமாட்டான்”.
இதைவிட எங்கள் ஏரியாவை அவமானப்படுத்த முடியாது. அன்று, தாங்கமுடியாத கோபத்தில் சைட் புரோக்கர் மேகநாதனுக்கு போன் செய்தேன். “ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து சைட்டு கூப்பிடுற தூரம்னு சொன்னீங்க”
“ஆமா சுகுமார், இப்ப நீங்க அங்கயிருந்து தானே கூப்பிடுறீங்க.”
“ஓ, அதாவது போன்ல கூப்பிடற தூரமா? “ கோபமாகக் கேட்ட எனக்கே சிரிப்பு வந்தது.
பணியின்போது இறந்துபோன அப்பாவின் செட்டில்மெண்ட் பணத்தில் வீடு கட்டி அங்கே குடி போன பிற்பாடு அந்த ஆட்டோ டிரைவர் சொன்னது சரியென்று எங்களுக்கே புரிந்தது.
எப்படியானாலும் மேற்கு மாம்பலத்தில் ஜனசமுத்திரத்தில் நீந்திப் பழக்கப்பட்ட எங்களுக்கு அந்த வெட்டவெளிப் பொட்டல் பிடித்துப் போயிற்று. எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் அரை கிலோமீட்டர் தொலைவில்.
2015ல் டிசம்பர் மாத ஆரம்பம். இரண்டு நாள் முன்பாக அண்ணியும் குழந்தை நித்யாவுடன் திருவொற்றியூரில் அண்ணி வீட்டுக்கு போயிருந்தார்கள். ஒரு வாரம் கழித்து வருவதாக ப்ளான். அப்போது கார்த்திக் அண்ணாவுக்கு விம்கோ நகரில் வேலை. நான் வேலை தேடும் வேலையில் இருந்தேன்.
முதள் நாள் லேசான தூறலில் மழை ஆரம்பித்து பொட்டல்வெளியில் மழைவாசனை வீசவும் கார்த்திக் விசிலடித்தபடி ரூமை விட்டு வெளியே வந்தான்.
“சுகு, வெளிய பார்றா.. என்ன அழகான சீனரி..ரசிக்கனும்டா. அம்மா! சூடா மிளகாபஜ்ஜி போடுமா. இந்த மழைக்கு சூப்பரா இருக்கும்.”
மாலை ஐந்து மணிக்கெல்லாம் கொஞ்சம் மழை பலமாகவே பெய்யவே “நாளைக்கு ஆபீஸுக்கு லீவு சொல்லிடறேன். எனக்கு என்னமோ போக முடியும்னு தோணல.” என்றான் கார்த்திக்.
பஜ்ஜி சாப்பிட்ட தட்டை கிச்சன் சிங்கில் கார்த்திக் டொங்கென்று போட்டபோது அவன் போன் அடித்தது. டிவியில் வானிலை அறிக்கையில் சென்னையில் பலத்த மழைக்கு வாய்ப்பு என்று சொன்னதைக் கேட்டு அம்மாவை ஸ்டேஷன் வரை கொண்டு வந்து விட்டால் ராகவை அனுப்பி அவர்கள் வீட்டில் மழை ஓயும்வரை வைத்துக்கொள்வதாக அண்ணி கேட்டார்களாம். எப்போதும் முரண்டு பிடிக்கும் கார்த்திக் உடனே ஒப்புக்கொண்டான். அண்ணி வீடு திருவொற்றியூரில் மூன்றாவது மாடி. பக்கத்திலேயே ஹாஸ்பிட்டல். அது தவிர அவர்கள் குடியிருப்பிலேயே ஒரு டாக்டரும் இருக்கிறார். அம்மாவுக்கு மழைக்காலம் வந்தால் ஆஸ்துமா தொந்திரவு அதிகமாகி மூச்சிரைப்பு வந்துவிடும். அம்மாவை ஸ்கூட்டியில் ஸ்டேஷனுக்கு கொண்டுபோய் அண்ணியின் தம்பி ராகவிடம் ஒப்படைக்கும் வேலை எனக்கு என்று முடிவானது.
சாயந்திரம் அம்மாவைக் கூட்டிக் கொண்டு போகும்போது ஒன்றும் சிரமம் தெரியவில்லை. கும்மிடிபூண்டி ஸ்டேஷன் அருகில் ஒரு பேக்கரியில் நித்யா குட்டிக்கு கேக், பிஸ்கட் வாங்கி அம்மாவிடம் கொடுக்கும் போது எங்களுக்கும் கொஞ்சம் ஸ்நாக்ஸ் வாங்கிக் கொண்டேன். மறக்காமல் மெழுகுவத்தி வாங்கச் சொன்னான் கார்த்திக். எதற்கு என்று புரியவில்லை. கரண்ட் போனால் பயன்படுத்த வீட்டில் இன்வெர்ட்டர் பொருத்தியிருந்தோம். அது கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்திற்கு வரும். அதற்குள் மழை நின்றால் கரண்டும் வந்துவிடுமே.
அம்மாவை ராகவிடம் சேர்ததுவிட்டு திரும்பி வரும்போது காட்சிகள் முற்றிலுமாக மாறியிருந்தது. வழியெல்லாம் வெள்ளக்காடு. ஸ்கூட்டி தண்ணீரில் தத்தளித்துத் தடுமாறியது. கார்த்திக்கை தொடர்பு கொள்ள முயற்சித்த போது நெட்வொர்க் சுத்தமாக இல்லை. பக்கத்தில் ஏதோ ஏரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் விளைவாக செல்போன் டவர் சரிந்து விட்டதாக வழியில் பேசிக் கொண்டார்கள். வீட்டு வாசலில் ஸ்கூட்டி நிறுத்தும் வெராண்டாவில் கணுக்கால் அளவு தண்ணீர் தேங்கியிருந்தது. வீட்டுக்குள்ளே நுழைந்தபோது கரண்ட் இல்லை. இன்வெர்டர் ஓடிக்கொண்டிருந்தது.
“இந்த வீட்டுக்கு வந்து நாம பண்ண ஒரே புத்திசாலித்தனமான விஷயம் இந்த இன்வெர்ட்டர் வாங்கினது தான்.ஒரு பேன் ரெண்டு லைட் போட்டா நாலு மணி நேரம் பேக் அப் வரும்” என்று சொன்னான் கார்த்திக். ஏழு மணிக்கு டிவியை போட்டு ஆதித்யா டிவியிம் வடிவேலு காமெடி பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான். ‘ஒரு நிமிஷம் நியூஸ்’ என்று டிவி சேனலை மாற்றினேன். ‘இப்போதைக்கு மழை குறையாது. இரண்டு நாட்களுக்கு மிக கனமழை தொடரும்’ என்று செய்தியாளர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே டிவி அணைந்தது. இன்வெர்ட்டர் காலி.
“என்னடா இது, இப்படி ஆயிடுச்சு. இன்னைக்கு கரெண்ட் வராது போல இருக்கு” என்ற நான் டார்ச் லைட்டைத் தேடி எடுத்தேன். கார்த்திக் பேட்டரியைக் கண்டுபிடித்து அதில் போட்டு உதறினான். இரண்டு மூன்று முறை உதறினால் தான் அது வேலை செய்யும்.
மறுநாள் மழை பலத்தது. பிசுபிசு என்று எங்கே பார்த்தாலும் தண்ணீர். அன்று முழுதும் நான் காப்பி போட்டேன். கார்த்திக் சுடச்சுட உப்புமா செய்தான். ப்ரிட்ஜில் மிச்சமிருந்த மாவில் தோசை வார்த்தான். டிவி, ட்யூப்லைட் இல்லாத அன்றைய பேய்மழை இரவில், மெழுகுவத்தி வெளிச்சத்தில் திடீரென்று எங்கள் பேச்சு மழைப் பாடல்களைப் பற்றிய க்விஸ்ஸாக உருமாறியது.
“ரேவதி மழையில டான்ஸ் ஆடுற பாட்டு என்னன்னு சொல்லு பாப்போம்” நான் கேட்க
“வான்.. மேகம். பூப்பூவாய்.. தூவும்.. புன்னகை மன்னன் படத்துல” பட்டென்று சொன்னான் கார்த்திக்.
“இன்னொன்று?”
“ரேவதியேவா? எனக்கு ஞாபகம் வரல”
“ஓஹோ.. மேகம் வந்ததோ.. மௌனராகம். சரி, இப்ப கமல் படத்தில?”
“அந்தி மழை மேகம்… நாயகன்ல. அப்புறம் அடடா மழடா..அட மழடா. தமன்னா சூப்பர் டான்ஸ், என்ன படம் சொல்லு.”
“ம்ம்., பையா..கார்த்திக் படம்”
பேசி ஓய்ந்தபின் இரவு டார்ச் வெளிச்சத்தில் வாசல் கதவைப் பார்த்தபோது லேசாகத் தண்ணீர் ஹாலுக்குள் வந்து கொண்டிருந்தது. “அடக்கடவுளே.. இப்ப என்னடா பண்றது” கார்த்திக் தலையைப்ப் பிடித்தபடி சோபாவில் அமர்ந்தான்.
நாங்கள் இருவரும் வெளியே வந்து பார்த்தபோது வாசலில் வெள்ளம் குபுகுபுவென்று ஓடிக்கொண்டிருந்தது. “ஏரி வெள்ளம் தான் ஊருக்குள்ள நுழைஞ்சிருக்கு. போனும் வேலை செய்யல. கரண்டும் இல்ல. நாம ஏதாவது முன்னேற்பாடு செய்துக்கனும்” என்றான் கார்த்திக்.
எல்லா கதவு ஜன்னல்களை இறுக்கமாக சாத்தினோம். “நான் இங்க ஹால்ல சோபால படுத்துக்கிறேன். நீ ரூம்ல படுத்துக்கோ. அலெர்ட்டா இரு. எதுன்னாலும் கூப்பிடறேன்” என்று சொல்லி கார்த்திக்கை ரூமுக்கு அனுப்பி சோபாவில் சாய்ந்தேன்.
ஏதேதோ கலவையாகக் கனவுகள். என்னை யாரோ தூக்கி தொப்பென்று தண்ணீரில் போடுவது போல.. நான் ‘காப்பாத்துங்க காப்பாத்துங்க’ என்று அலற எங்கள் ஏரியாவுக்கு பொட்டல் என்று பேர் வைத்த ஆட்டோக்காரர் முண்டாசு கட்டியபடி படகு துழாவுகிறார். ‘அய்ய.. உங்க அஞ்சு பேருக்கோசுரம் அங்கெல்லாம் போட் வராது சார்’ என்று சிரிக்கிறான். மூச்சுத் திணற கண் திறந்தால் வலது கை சிலீரென்றது. சோபா உயரத்திற்கு ஹாலில் தண்ணீர். ஹாலில் இருந்த விதவிதமான பொருள்கள் நீரில் வட்டமடித்தபடி மிதந்து கொண்டிருந்தன. கார்த்திக்கை தட்டி எழுப்பினேன். ஹாலுக்குள் முட்டியளவு தண்ணீரை பார்த்ததும் மிரண்டு போனான்.
நிலைமை சீரியஸ் என்று இருவருக்குமே புரிந்தது. மொட்டைமாடியில் இருக்கும் ஸ்டோர் ரூமுக்கு முக்கியமான பொருள்களை எடுத்துச் செல்ல திட்டமிட்டோம். லிஸ்ட் பெரிதானது. டிவி, துணிமணி, கியாஸ் ஸ்டவ், கொஞ்சம் பாத்திரங்கள், குடை, மிச்சமிருக்கும் சாப்பிடத் தகுந்த திண்பண்டங்கள், மளிகைப்பொருள், கயிறு, டார்ச், பழைய பேப்பர், கந்தல் துணி, மெழுகுவத்தி, தீப்பெட்டி, முக்கியமாக பீரோவிலிருந்த கொஞ்சம் பணம், நகை, என் டிகிரி சர்டிபிகேட்.
மழைக்கு மறைவாக தண்ணீர் தொட்டிக்கு அடியில் மொட்டைமாடியில் நாங்கள் செட்டிலான இரண்டு மணி நேரத்தில் தரைத்தளம் முழுவதும் மூழ்கி விட்டிருந்தது. இரவு ஒரு மணிக்கு மொட்டைமாடி ஸ்டோர் ரூமுக்குள் தண்ணீர் வரத் தொடங்கியது. கார்த்திக் “எனக்கென்னமோ நாம சேஃபா வாட்டர் டேங்க் மேல ஏறிடலாமுனு தோணுது சுகு” என்றான்.
சரி என்று நான் ஆமோதிக்க
“இந்த டேங்க கட்டுறதுக்கு பதில் சிண்டெக்ஸ் தொட்டி வைக்கலாம்னு நீ சொன்னியே. ஞாபகமிருக்கா?” மழைநீரை முகத்திலிருந்து வழித்தபடி கார்த்திக் கேட்டான்.
“அதுக்கென்ன இப்போ?”
“சிண்டெக்ஸ் தொட்டிக்கு மேல எப்படி ஏறி உக்காருவ?”
“இப்ப கூட நக்கல்டா உனக்கு” என்றேன் கோபமாக.
“இடுக்கண் வருங்கால் நகுக” என்றவன் “மறுபடி லிஸ்ட்., இந்தமுறை ஷார்ட் லிஸ்ட்”
வாட்டர் டேங்க் இரும்பு ஏணியில் குடையுடன் “தண்ணித்தொட்டித் தேடிவந்த கன்னுக்குட்டி நான்” என்று பாடிக்கொண்டே கார்த்திக் ஏற மிக முக்கியமான ஷார்ட் லிஸ்ட் பொருள்களுடன் நான் அவனைப் பின் தொடர்ந்தேன்.
நாங்கள் இருவரும் வாழ்க்கையில் எங்களுக்குள் இவ்வளவு விஷயங்கள் பேசினதேயில்லை. அப்பாவைப் பற்றி, காலேஜ் அனுபவங்கள், கார்த்திக் ஆபிஸ் கலீக்ஸ் பற்றி, எங்கள் சின்ன வயசு கதைகள் ரிவைண்ட். வாழ்க்கையின் கடைசி நாள் போல பேசிக்கொண்டே இருந்தோம். மழை வெள்ளம் இன்னும் நாலடி உயர்ந்தால் ஆபத்து என்ற நிலைமையை உணர்ந்தபின்னும் சிரித்துக்கொண்டிருந்தோம்.

மிதமாக மழை பெய்தால்தான் அழகு, ரசனை, ரம்மியம், கவிதை எல்லாம். அதுவே அதிகமாகி பெருமழையாகத் தொடர்ந்தால் அழகியல் மாறி அழிவியல் ஆரம்பமாகி விடுகிறது.
கடைசி மெழுகுவத்தியை ஏற்றி அது அணையாமலிருக்க சர்பிகேட் இருந்த ப்ளாஸ்டிக் கவரால் மறைத்த போது தான் அதை நான் கவனித்தேன். “கார்த்திக், என்னடா இது, என்னோட சர்டிபிகேட் இருக்கிற ப்ளாஸ்டிக் கவருக்குள்ள ஏதோ நியூஸ் பேப்பர் இருக்கு”
“அது வந்து.. பழைய தினத்தந்தி பேப்பர். நான் டென்த்ல ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்தது என் போட்டோவோட இதுல போட்டாங்க. அப்பா தாண்டா இத பத்திரமா எடுத்து வெச்சார்” என்று சொன்ன கார்த்திக்கின் கண்களில் நீர் துளிர்த்தது.
அரைமயக்கத்தில் இருந்த எங்களை படபடவென்ற சத்தம் பதறியடித்தபடி மேலே வானத்தைப் பார்க்க வைத்தது. வட்டமிட்டபடி ஒரு ஹெலிகாப்டர். “ ஹெலிகாப்டர நாம இதுக்கு முன்ப சினிமாவிலத் தான் பாத்திருக்கோம், அதுவும் இவ்வளவு கிட்டக்க.. நம்மள காப்பாத்த வந்தாங்களோ?”
“ப்ச்.. சாப்பாடு போடறாங்க போல. ஏதாச்சும் பண்ணி அவங்கள பார்க்க வச்சா தான் பொட்டலத்தை போடுவாங்க. என்ன பண்ணலாம், நனையாத காகிதம், துணி ஏதாச்சும் இருக்கா” என்று நான் பரபரக்க ஒன்றும் யோசிக்காமல் கார்த்திக் பட்டென்று பிளாடிக் உறையில் என் சர்டிபிகேட் கவரில் வைத்திருந்த அவன் போட்டோ வெளியான நியூஸ் பேப்பரை வெளியே எடுத்தான். பத்து வருடத்து முந்திய மக்கிப்போன அந்த செய்தித்தாள் கபகபவென்று பற்றி எரிந்தது. வெளிச்சம் பார்த்து உயரத்தில் வட்டமடித்த ஹெலிகாப்டர் ப்ளாஸ்டிக் பொட்டலம் ஒன்றை வீசியெறிய அது தண்ணீர்த்தொட்டி அருகில் விழுந்து மிதந்தது. நான்கு மில்க் பிக்கீஸ் பேக்கெட், மூன்று மினி வாட்டர் பாட்டில், இரண்டு புளிசாதப் பொட்டலம். ப்ரூட்டீஸ் இரண்டு, அத்துடன் அரை டஜன் வாழைப்பழம்.
“கொஞ்சமாவது யோசனை இருந்திருந்தா இதுல ஒரு மெழுகுவத்தியும் தீப்பொட்டியும் வெச்சிருப்பானுங்க” என்றேன்.
“ம்ம்..சரிதான், நெருப்புல மாட்டிக்கிட்டா நம்மள காப்பாத்த தண்ணி தேவைப்படுது. அதேபோல தண்ணியில சிக்கிட்டா நமக்கு நெருப்பு தான் துணை போல.. இந்த தீப்பெட்டிய, சர்டிபிகேட் இருக்குற பிளாஸ்டிக் உறைக்குள்ள பத்திரமா வை.” பேண்ட் பாக்கெட்டிலிருந்த தீப்பெட்டியை என்னிடம் நீட்டி “கரண்ட், டார்ச், மெழுகுவத்தின்னு அப்படியே பின்னோக்கி வந்து இப்ப ஆதிமனுஷன் மாதிரி தீப்பந்தம் ஏந்தி நிக்கிறோம்” என்றான் கார்த்திக்
“சுடச்சுட மிளகா பஜ்ஜியிலிருந்து நமுத்துப் போன மில்க் பிக்கீஸ்க்கு வந்துட்டோம். கார்த்திக், ஒரு குட்டிக் கவிதை ஒண்ணு சொல்லட்டா.. சடசடவென பெய்தது மழை. உடன் படபடவென விரிந்தது குடை, மழையைப் புறக்கணிக்கும் கருப்புக் கொடியாய்”
“நல்லா இருக்குடா. சொல்லும்போதே மழ பெய்யுற மாதிரி சத்தம், யார் எழுதினது, வைரமுத்துவா?”
“ஹிஹி.. நான் தான்,”
“டேய் சுகு, நீ கவிதை எல்லாம் கூட எழுதிவியா? இவ்வளவு நாளா எனக்கு தெரியாதேடா.”
“எனக்கும் தான் நீ தத்துவமெல்லாம் பேசுவேன்னு தெரியாது” என்றேன்.
“மில்க் பிக்கீஸ் பிஸ்கெட் இதுக்குமுன்ன எப்ப சாப்பிட்டோம்னு ஞாபகம் இல்ல. இவ்ளோ டேஸ்டா இருக்கே“
“ஆனாப் பாரு, இந்த புளி சாதம் மட்டும் எவ்வளவு பசியில சாப்பிட்டாலும் ருசிக்கல. ஏதோ கடமைக்குன்னு சாப்பிடற மாதிரிதான் இருக்கு.” அலுத்துக் கொண்டான் கார்த்திக்.
ஒரு கட்டத்தில் எங்களுக்கு இந்த இரவே கடைசி என்றுதான் தோன்றியது. மழை நின்றுவிட்டபோதும் நீர்மட்டம் உயர்ந்துகொண்டே இருந்தது. நாங்கள் நின்றுகொண்டிருந்த தண்ணீர்த் தொட்டி இப்போது பாதிக்குமேல் மூழ்கியிருந்தது. “நாம செத்துடுவமா சுகு” என்று கேட்டு கார்த்திக் சிறிது நேரம் மெளனமாக இருந்தான். பிறகு திடீரென்று என் தோள்களைப் பற்றிக்கொண்டுக் குலுங்கி அழுதான். “சாகறதப் பத்திக் கவலையில்லடா. அதுக்கு முன்ன அம்மா கிட்ட ஒரு சாரி சொல்லனும். போன்ல பேச முடிஞ்சாக்கூட இப்பவே சொல்லிடுவேன்”. எதற்காக என்று அவனும் சொல்லவில்லை. நானும் கேட்கவில்லை. யோசித்துப் பார்த்தபோது எனக்கு அப்படி எதுவும் சாகிறதுக்கு முன் செய்ய என்று ஒன்றுமில்லை என்றே தோன்றியது. என்ன, செத்துப் போவதுக்கு முன் ஒரு வேலை கிடைத்திருக்கலாம்.
மழையிலும் வெள்ளத்திலும் நனைந்து கார்த்திக்கும் நானும் கோழிக்குஞ்சுகள் போல் வெடவெடத்தபடி ஒருவரையொருவர் பற்றிக்கொணடு நின்றிருந்தோம்.
தூரத்தில் இருட்டில் படகு ஒன்று மிதந்து வருவதை கார்த்திக் தான் முதலில் பார்த்தான். அதில் கைலி கட்டிய இரண்டு தெய்வஙகள். ஒருவர் கையில் இருந்த டார்ச் லைட் வெளிச்சத்தால் இருட்டில் அங்குமிங்கும் துழாவிக் கொண்டிருந்தார். இன்னொருவர் துடுப்பு போட்டுக் கொண்டிருந்தார். குடியிருப்பில் யாராவது மிச்சமீதி உயிரோடு இருக்கிறார்களா என்று பார்க்க வந்திருப்பார்கள் போல.
கும்மிருட்டு. எங்களால் படகை மங்கலாக பார்க்கமுடிந்ததே தவிர அதிலிருந்தவர்கள் மொட்டைமாடி நீர்த்தொட்டியின் மேல் வெடவெடத்தபடி நிற்கும் எங்களைப் பார்த்திருக்க சாத்தியமேயில்லை. இன்னும் ஒருசில நிமிடங்களில் படகு வந்தவழியே திரும்பி விடலாம். எப்படியாவது அதற்குள் அவர்கள் கவனத்தை எங்கள் பக்கம் ஈர்க்க வேண்டும். எப்படி?
கார்த்திக் என்னைப் பார்த்த பார்வையிலே எனக்குப் புரிந்தது. ஒன்றும் பேசாமல் ப்ளாஸ்டிக் உறையை திறந்து என் டிகிரி சர்டிபிகேட்டை வெளியில் எடுத்து அவனிடம் நீட்டினேன். “கவலைப்படாதே, டூப்ளிகேட் அப்ளை பண்ணி வாங்கிடலாம்” என்ற கார்த்திக் அதை வாங்கி உருட்டிப் பதட்டத்துடன் தீக்குச்சியால் பற்றவைத்தான். என் டிகிரி சர்டிபிகேட் மக்கிப்போன செய்தித்தாள் போல் இல்லாமல் சட்டென்று பற்றிக்கொண்டு ஜெகஜோதியாக எரிந்தது. அதைப் பார்த்தபோது எனக்கு அது ஏதோ வார்த்தைகளேயில்லாத ஒரு கவிதை போல இருந்தது.
இப்போது படகு மெதுவாக எங்களை நோக்கித் திரும்பி நகரத் தொடங்கியது. படகு எங்களை நெருங்கியதும் பரபரப்பு ஓய்ந்து நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டேன்.
“கார்த்திக், புளிசாதம் பாக்கெட் ஒண்ணு மிச்சமிருக்கு. எடுத்துக்கிடலாமா” என்று கேட்டேன். கோபமாகப் பார்ப்பது போல் முறைத்துப் பின் சிரித்தான். “உனக்கு வேனும்னா மில்க் பிக்கீஸ் அரை பாக்கெட் இருக்கு. அதையும் எடுத்துக்கோ”
“கண்டிப்பா எடுத்துப்பேன்”
படகில் வரும்போது நான் தான் கவனித்து கார்த்திக்கிடம் காட்டினேன். ஆடிட்டர் வீட்டு போட் வாட்டர் டாங்க் மொத்தமும் மூழ்கி மஞ்சள் பெயிண்ட் அடித்த போட்டின் வளைவான மேல் நுனி மட்டுமே தெரிந்தது. “அட, இந்த இடத்தை விட நம்ம ஏரியா கொஞ்சம் மேடு போல” என்று அந்த இக்கட்டிலும் மெலிதாக மகிழ்ச்சியை கார்த்திக் வெளிப்படுத்தினான்.
பெருவெள்ளம் வரும்போது கண்டிப்பாக பத்திரப்படுத்த வேண்டிய பொருள்களின் பட்டியலில் முதலில் இருப்பது சர்டிபிகேட்ஸ் என்றுதான் எல்லோரும் சொல்வார்கள். என் டிகிரி எனக்கு வேலை வாங்கித்தந்து சோறு போடும் என்றெல்லாம் நினைத்தேன். கடைசியில் அது ஆபத்துக்கு உதவும் தீப்பந்தமாகத் தான் மாறியது. இந்த வரிசையில் இரண்டாவது முக்கிய பொருள் தீப்பெட்டி என்பது எங்கள் அனுபவம் தந்த பாடம்.
கதையை முடிக்கும் வரை எந்த இடையூறும் செய்யாமல் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த என் நண்பர்கள் மத்தியிலிருந்து டீம் லீடர் சரவணன் சொன்னான். “கிளைமாக்ஸ்ல, டிகிரி பத்திக்கிட்டு உங்க உயிரையில்ல காப்பாத்தியிருக்கு. மொத்தத்தில கதை, ரொம்ப திரில்லிங்கா இருந்துது”
“என்ன கொடுமை சரவணன் இது? கதையா?” அதிர்ச்சியானேன்.
“சாரி சுகுமார், பட், ட்ரூத் இஸ் ஸ்ட்ரேஞ்சர் தென் பிக்ஷன். சரி, அதுக்கப்புறம் மழை சீசன் வரும்போதெல்லாம் உங்களுக்கு பயமா இருந்திருக்கும்ல?”
“நிச்சயமா இல்ல. பயமெல்லாம் முதல் தடவை தான். ஒருமுறை பட்ட அவஸ்தை, கிடைச்ச அனுபவம் இதெல்லாம் எங்களுக்கு எந்த வெள்ளத்தையும் சமாளிக்கிற மன உறுதியைக் கொடுத்திருக்கு.”
“இந்தமுறை உங்க ஏரியா மழை வெள்ளத்தை எப்படி சமாளிச்சீங்க?”
“அதுவா? ரொம்ப சிம்பிள்.. வாசல்ல கணுக்கால் அளவுக்கு தண்ணி தேங்கினதுமே உஷாரா வீட்டைப் பூட்டிட்டு குடும்பத்தோட அங்கிருந்து ஜூட் விட்டுட்டோம். உயிர் முக்கியமில்ல”.