Saturday, May 3, 2025

ஊழிப் பெருவெள்ளம்

ஊழிப் பெருவெள்ளம்  - சசி




ஏப்ரல் 30, 2025  - சொல்வனம்

ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகாமையில் தனி வீடு” என்று தொடங்கும் தினத்தந்தியின் நாலாம் பக்க, ஆறாம் பத்தி விளம்பரம் என் கண்ணில் பட்டபோதே விதி எங்கள் வாழ்க்கையில் தாயக்கட்டையை உருட்டத் தொடங்கிவிட்டது. 

 -முதல் தவறு, அருகில் என்ற வார்த்தைக்கு எதிர்ப்பதம் தான் அருகாமை. உண்மையில் இதற்கு தூரத்தில் என்று தான் பொருள் என்று தமிழறிஞர்கள் பலர் இப்போது சொல்வதைக் கேட்டிருக்கவேண்டும். இல்லையென்றால் குறைந்தபட்சம் திருக்குறள் அதிகாரங்களின் பெயர்களாவது தெரிந்திருக்க வேண்டும். ‘ஆமை’யில் முடிகிற வார்த்தைகளெல்லாம் எதிர்ச்சொல் என்று இப்போதுதான் புரிகிறது. கொல்லாமை, கல்லாமை, வெகுளாமை.  இரண்டாவது தவறு, சைட்டைப் பார்க்க ஓசியில் ப்ளாட் ஏஜெண்ட் காரில் போகாமல் தன்னிச்சையாக கும்மிடிப்பூண்டிக்கு ரயிலில் போய் அங்கிருந்து ஆட்டோ பிடித்துப் போயிருக்கவேண்டும். 

சைட் புரோக்கர் மேகநாதன் வெள்ளை நிற இண்டிகா கார் கொண்டு வந்திருந்தார். மேற்கு மாம்பலம் போளி ஸ்டால் முன்பாக காலை ஏழு மணிக்கெல்லாம் எங்களை பிக் அப் செய்தார். ஏற்கனவே காரில் ஒரு பார்ட்டி பின் சீட்டில் அமர்ந்திருந்தார். கார்த்திக் அண்ணா, நான், அம்மா மூன்று பேரும் பின்பக்கம் அவரோடு அமர்ந்தோம், நான் கிட்டத்தட்ட கார்த்திக்  மடியில் உட்கார வேண்டியிருந்தது. நல்லவேளை, கல்பனா அண்ணியும் குழந்தையும் வரவில்லை. கும்மிடிப்பூண்டி ஸ்டேஷன் அருகே வந்ததும் முன்னால் டிரைவருக்குப் பக்கத்தில் ஹாயாக உட்கார்ந்திருந்த மேகநாதன் ஒரு டூர் கைடாகவே மாறிவிட்டார். ‘இதோ இங்க ஹாஸ்பிடல், அதோ அங்க ஸ்கூல், பக்கத்துல காலேஜ்’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். “இதெல்லாம் இங்க இருக்கா” என்று கேட்டதற்கு கூடிய சீக்கிரம் எல்லாம் அங்கே வரப்போவதாக சொன்னார். கும்மிடிப்பூண்டியிலிருந்து சைட்டுக்கு போகும் வழியில் ஓரிடத்தில் காலை டிபனுக்கு காரை நிறுத்தினார்.  இந்த நேர விரயம் மற்றும் காரில் இடநெருக்கடி போன்ற காரணங்களால் கும்மிடிபூண்டியிலிருந்து சைட்டுக்கு எவ்வளவு நேரம் என்று எங்களால் சரியாக அனுமானிக்க முடியவில்லை. எனக்கென்னவோ இது புரோக்கர் மேகநாதனின் மார்க்கெட்டிங் யுக்தி என்றே தோன்றியது.

இதற்குப் பிறகு அட்வான்ஸ் எல்லாம் கொடுத்து மனை புக்கிங் செய்தபிறகு ஒருநாள் நானும் அம்மாவும் ரயில் பிடித்து கும்மிடிப்பூண்டியில் இறங்கி ஆட்டோ ஸ்டாண்டில் விசாரித்தோம். 

“எந்த குமரன் நகர்.. இங்க மூணு இருக்கு”.  

“பிள்ளையார் கோயில் இருக்கே. அது..”

“ம்ம், ரெண்டு குமரன் நகர்ல பிள்ளையார் கோயில் இருக்கு.”

“என்ன அடையாளம் சொல்வது என்று யோசித்த எனக்கு சட்டென்று அது நினைவுக்கு வந்தது.

“ஆடிட்டர் வீடு.. வாட்டர் டாங்க்.. போட் மாதிரி இதுக்குமே, அங்க..”

“ஓ, அதுவா, பொட்டல் குமரன் நகர்னு சொல்லு”

“பொட்டலா?”

“காலியா இருக்குமில்ல, அதான்.. 250 ரூபா ஆவும்”

“என்னது 250 ஆ?”

“ஆமா, அவ்வளவு தூரம் போயிட்டு ரிட்டர்ன் காலியா வரணுமில்ல”

“நாங்க ரெண்டுமணி நேரத்துல ரிடர்ன் வந்திடுவோம்.” 

“அவ்ளோ நேரமா? ஆத்திர அவசரத்துக்கு அங்க ஒரு போன் கூட வேலை செய்யாது”

“ஏன், என் பிஎஸ்என்எல் போன் அங்க வேலை செஞ்சுதே”

“அது கவன்மெண்ட்டு போன். ஆளே இல்லன்னாலும் டவர் போடுவான். என் போனு ஏர்டெல்லு. கார்ப்பேட்டு.. உங்க அஞ்சி ஆறு பேருக்கெல்லாம் டவர் போடமாட்டான்”. 

இதைவிட எங்கள் ஏரியாவை அவமானப்படுத்த முடியாது. அன்று, தாங்கமுடியாத கோபத்தில் சைட் புரோக்கர் மேகநாதனுக்கு போன் செய்தேன். “ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து சைட்டு கூப்பிடுற தூரம்னு சொன்னீங்க”

“ஆமா சுகுமார், இப்ப நீங்க அங்கயிருந்து தானே கூப்பிடுறீங்க.” 

“ஓ, அதாவது போன்ல கூப்பிடற தூரமா? “ கோபமாகக் கேட்ட எனக்கே சிரிப்பு வந்தது.

பணியின்போது இறந்துபோன அப்பாவின் செட்டில்மெண்ட் பணத்தில் வீடு கட்டி அங்கே குடி போன பிற்பாடு அந்த ஆட்டோ டிரைவர் சொன்னது சரியென்று எங்களுக்கே புரிந்தது.

எப்படியானாலும் மேற்கு மாம்பலத்தில் ஜனசமுத்திரத்தில் நீந்திப் பழக்கப்பட்ட எங்களுக்கு அந்த வெட்டவெளிப் பொட்டல் பிடித்துப் போயிற்று. எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் அரை கிலோமீட்டர் தொலைவில். 

2015ல் டிசம்பர் மாத ஆரம்பம். இரண்டு நாள் முன்பாக அண்ணியும் குழந்தை நித்யாவுடன் திருவொற்றியூரில் அண்ணி வீட்டுக்கு போயிருந்தார்கள். ஒரு வாரம் கழித்து வருவதாக ப்ளான். அப்போது கார்த்திக் அண்ணாவுக்கு விம்கோ நகரில் வேலை. நான் வேலை தேடும் வேலையில் இருந்தேன். 

முதள் நாள் லேசான தூறலில் மழை ஆரம்பித்து பொட்டல்வெளியில் மழைவாசனை வீசவும் கார்த்திக் விசிலடித்தபடி ரூமை விட்டு வெளியே வந்தான். 

“சுகு, வெளிய பார்றா.. என்ன அழகான சீனரி..ரசிக்கனும்டா. அம்மா!  சூடா மிளகாபஜ்ஜி போடுமா. இந்த மழைக்கு சூப்பரா இருக்கும்.” 

மாலை ஐந்து மணிக்கெல்லாம் கொஞ்சம் மழை பலமாகவே பெய்யவே “நாளைக்கு ஆபீஸுக்கு லீவு சொல்லிடறேன். எனக்கு என்னமோ போக முடியும்னு தோணல.” என்றான் கார்த்திக்.

பஜ்ஜி சாப்பிட்ட தட்டை கிச்சன் சிங்கில் கார்த்திக் டொங்கென்று போட்டபோது அவன் போன் அடித்தது. டிவியில் வானிலை அறிக்கையில் சென்னையில் பலத்த மழைக்கு வாய்ப்பு என்று சொன்னதைக் கேட்டு அம்மாவை ஸ்டேஷன் வரை கொண்டு வந்து விட்டால் ராகவை அனுப்பி அவர்கள் வீட்டில் மழை ஓயும்வரை வைத்துக்கொள்வதாக அண்ணி கேட்டார்களாம். எப்போதும் முரண்டு பிடிக்கும் கார்த்திக் உடனே ஒப்புக்கொண்டான்.  அண்ணி வீடு திருவொற்றியூரில் மூன்றாவது மாடி. பக்கத்திலேயே ஹாஸ்பிட்டல். அது தவிர அவர்கள் குடியிருப்பிலேயே ஒரு டாக்டரும் இருக்கிறார். அம்மாவுக்கு மழைக்காலம் வந்தால் ஆஸ்துமா தொந்திரவு அதிகமாகி மூச்சிரைப்பு வந்துவிடும். அம்மாவை ஸ்கூட்டியில் ஸ்டேஷனுக்கு கொண்டுபோய் அண்ணியின் தம்பி ராகவிடம் ஒப்படைக்கும் வேலை எனக்கு என்று முடிவானது. 

சாயந்திரம் அம்மாவைக் கூட்டிக் கொண்டு போகும்போது ஒன்றும் சிரமம் தெரியவில்லை. கும்மிடிபூண்டி ஸ்டேஷன் அருகில் ஒரு பேக்கரியில் நித்யா குட்டிக்கு கேக், பிஸ்கட் வாங்கி அம்மாவிடம் கொடுக்கும் போது எங்களுக்கும் கொஞ்சம் ஸ்நாக்ஸ் வாங்கிக் கொண்டேன். மறக்காமல் மெழுகுவத்தி வாங்கச் சொன்னான் கார்த்திக். எதற்கு என்று புரியவில்லை. கரண்ட் போனால் பயன்படுத்த வீட்டில் இன்வெர்ட்டர் பொருத்தியிருந்தோம். அது கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்திற்கு வரும். அதற்குள் மழை நின்றால் கரண்டும் வந்துவிடுமே.

அம்மாவை ராகவிடம் சேர்ததுவிட்டு  திரும்பி வரும்போது காட்சிகள் முற்றிலுமாக  மாறியிருந்தது. வழியெல்லாம் வெள்ளக்காடு. ஸ்கூட்டி தண்ணீரில் தத்தளித்துத் தடுமாறியது. கார்த்திக்கை தொடர்பு கொள்ள முயற்சித்த போது நெட்வொர்க் சுத்தமாக இல்லை. பக்கத்தில் ஏதோ ஏரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் விளைவாக செல்போன் டவர் சரிந்து விட்டதாக வழியில் பேசிக் கொண்டார்கள். வீட்டு வாசலில் ஸ்கூட்டி நிறுத்தும் வெராண்டாவில் கணுக்கால் அளவு தண்ணீர் தேங்கியிருந்தது. வீட்டுக்குள்ளே நுழைந்தபோது கரண்ட் இல்லை. இன்வெர்டர் ஓடிக்கொண்டிருந்தது. 

“இந்த வீட்டுக்கு வந்து நாம பண்ண ஒரே புத்திசாலித்தனமான விஷயம் இந்த இன்வெர்ட்டர் வாங்கினது தான்.ஒரு பேன் ரெண்டு லைட் போட்டா நாலு மணி நேரம் பேக் அப் வரும்” என்று சொன்னான் கார்த்திக். ஏழு மணிக்கு டிவியை போட்டு ஆதித்யா டிவியிம் வடிவேலு காமெடி பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான். ‘ஒரு நிமிஷம் நியூஸ்’ என்று டிவி சேனலை மாற்றினேன். ‘இப்போதைக்கு மழை குறையாது. இரண்டு நாட்களுக்கு மிக கனமழை தொடரும்’ என்று செய்தியாளர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே டிவி அணைந்தது. இன்வெர்ட்டர் காலி. 

“என்னடா இது, இப்படி ஆயிடுச்சு. இன்னைக்கு கரெண்ட் வராது போல இருக்கு” என்ற நான் டார்ச் லைட்டைத் தேடி எடுத்தேன். கார்த்திக் பேட்டரியைக் கண்டுபிடித்து அதில் போட்டு உதறினான். இரண்டு மூன்று முறை உதறினால் தான் அது வேலை செய்யும்.  

மறுநாள் மழை பலத்தது. பிசுபிசு என்று எங்கே பார்த்தாலும் தண்ணீர். அன்று முழுதும் நான் காப்பி போட்டேன். கார்த்திக் சுடச்சுட உப்புமா செய்தான். ப்ரிட்ஜில் மிச்சமிருந்த மாவில் தோசை வார்த்தான். டிவி, ட்யூப்லைட் இல்லாத அன்றைய பேய்மழை இரவில், மெழுகுவத்தி வெளிச்சத்தில் திடீரென்று எங்கள் பேச்சு மழைப் பாடல்களைப் பற்றிய க்விஸ்ஸாக உருமாறியது. 

“ரேவதி மழையில டான்ஸ் ஆடுற பாட்டு என்னன்னு சொல்லு பாப்போம்” நான் கேட்க

“வான்.. மேகம். பூப்பூவாய்.. தூவும்.. புன்னகை மன்னன் படத்துல” பட்டென்று சொன்னான் கார்த்திக்.

“இன்னொன்று?”

“ரேவதியேவா? எனக்கு ஞாபகம் வரல”

“ஓஹோ.. மேகம் வந்ததோ.. மௌனராகம்.  சரி, இப்ப கமல் படத்தில?”

“அந்தி மழை மேகம்… நாயகன்ல. அப்புறம் அடடா மழடா..அட மழடா. தமன்னா சூப்பர் டான்ஸ், என்ன படம் சொல்லு.”

“ம்ம்., பையா..கார்த்திக் படம்” 

பேசி ஓய்ந்தபின் இரவு டார்ச் வெளிச்சத்தில் வாசல் கதவைப் பார்த்தபோது லேசாகத் தண்ணீர் ஹாலுக்குள் வந்து கொண்டிருந்தது. “அடக்கடவுளே.. இப்ப என்னடா பண்றது” கார்த்திக் தலையைப்ப் பிடித்தபடி சோபாவில் அமர்ந்தான். 

நாங்கள் இருவரும் வெளியே வந்து பார்த்தபோது வாசலில் வெள்ளம் குபுகுபுவென்று ஓடிக்கொண்டிருந்தது. “ஏரி வெள்ளம் தான் ஊருக்குள்ள நுழைஞ்சிருக்கு. போனும் வேலை செய்யல. கரண்டும் இல்ல. நாம ஏதாவது முன்னேற்பாடு செய்துக்கனும்” என்றான் கார்த்திக்.

எல்லா கதவு ஜன்னல்களை இறுக்கமாக சாத்தினோம். “நான் இங்க ஹால்ல சோபால படுத்துக்கிறேன். நீ ரூம்ல படுத்துக்கோ. அலெர்ட்டா இரு. எதுன்னாலும் கூப்பிடறேன்” என்று சொல்லி கார்த்திக்கை ரூமுக்கு அனுப்பி சோபாவில் சாய்ந்தேன்.

ஏதேதோ கலவையாகக் கனவுகள். என்னை யாரோ தூக்கி தொப்பென்று தண்ணீரில் போடுவது போல.. நான் ‘காப்பாத்துங்க காப்பாத்துங்க’ என்று அலற எங்கள் ஏரியாவுக்கு பொட்டல் என்று பேர் வைத்த ஆட்டோக்காரர் முண்டாசு கட்டியபடி படகு துழாவுகிறார். ‘அய்ய.. உங்க அஞ்சு பேருக்கோசுரம் அங்கெல்லாம் போட் வராது சார்’ என்று சிரிக்கிறான். மூச்சுத் திணற கண் திறந்தால் வலது கை சிலீரென்றது. சோபா உயரத்திற்கு ஹாலில் தண்ணீர். ஹாலில் இருந்த விதவிதமான பொருள்கள் நீரில் வட்டமடித்தபடி மிதந்து கொண்டிருந்தன. கார்த்திக்கை தட்டி எழுப்பினேன். ஹாலுக்குள் முட்டியளவு தண்ணீரை பார்த்ததும் மிரண்டு போனான். 

நிலைமை சீரியஸ் என்று இருவருக்குமே புரிந்தது.  மொட்டைமாடியில் இருக்கும் ஸ்டோர் ரூமுக்கு முக்கியமான பொருள்களை எடுத்துச் செல்ல திட்டமிட்டோம். லிஸ்ட் பெரிதானது. டிவி, துணிமணி, கியாஸ் ஸ்டவ், கொஞ்சம் பாத்திரங்கள், குடை, மிச்சமிருக்கும் சாப்பிடத் தகுந்த திண்பண்டங்கள், மளிகைப்பொருள், கயிறு, டார்ச், பழைய பேப்பர், கந்தல் துணி, மெழுகுவத்தி, தீப்பெட்டி, முக்கியமாக பீரோவிலிருந்த கொஞ்சம் பணம், நகை, என் டிகிரி சர்டிபிகேட்.

மழைக்கு மறைவாக தண்ணீர் தொட்டிக்கு அடியில் மொட்டைமாடியில் நாங்கள் செட்டிலான இரண்டு மணி நேரத்தில் தரைத்தளம் முழுவதும் மூழ்கி விட்டிருந்தது.  இரவு ஒரு மணிக்கு மொட்டைமாடி ஸ்டோர் ரூமுக்குள் தண்ணீர் வரத் தொடங்கியது. கார்த்திக் “எனக்கென்னமோ நாம சேஃபா வாட்டர் டேங்க் மேல ஏறிடலாமுனு தோணுது சுகு” என்றான். 

சரி என்று நான் ஆமோதிக்க

“இந்த டேங்க கட்டுறதுக்கு பதில் சிண்டெக்ஸ் தொட்டி வைக்கலாம்னு நீ சொன்னியே. ஞாபகமிருக்கா?” மழைநீரை முகத்திலிருந்து வழித்தபடி கார்த்திக் கேட்டான். 

“அதுக்கென்ன இப்போ?”

“சிண்டெக்ஸ் தொட்டிக்கு மேல எப்படி ஏறி உக்காருவ?”

“இப்ப கூட நக்கல்டா  உனக்கு” என்றேன் கோபமாக.

“இடுக்கண் வருங்கால் நகுக” என்றவன்  “மறுபடி லிஸ்ட்., இந்தமுறை ஷார்ட் லிஸ்ட்”

வாட்டர் டேங்க் இரும்பு ஏணியில் குடையுடன் “தண்ணித்தொட்டித் தேடிவந்த கன்னுக்குட்டி நான்” என்று பாடிக்கொண்டே கார்த்திக் ஏற மிக முக்கியமான ஷார்ட் லிஸ்ட் பொருள்களுடன் நான் அவனைப் பின் தொடர்ந்தேன்.

நாங்கள் இருவரும் வாழ்க்கையில் எங்களுக்குள் இவ்வளவு விஷயங்கள் பேசினதேயில்லை. அப்பாவைப் பற்றி, காலேஜ் அனுபவங்கள், கார்த்திக் ஆபிஸ் கலீக்ஸ் பற்றி, எங்கள் சின்ன வயசு கதைகள் ரிவைண்ட். வாழ்க்கையின் கடைசி நாள் போல பேசிக்கொண்டே இருந்தோம். மழை வெள்ளம் இன்னும் நாலடி உயர்ந்தால் ஆபத்து என்ற நிலைமையை உணர்ந்தபின்னும் சிரித்துக்கொண்டிருந்தோம்.

மிதமாக மழை பெய்தால்தான் அழகு, ரசனை, ரம்மியம், கவிதை எல்லாம். அதுவே அதிகமாகி பெருமழையாகத் தொடர்ந்தால் அழகியல் மாறி அழிவியல் ஆரம்பமாகி விடுகிறது. 

கடைசி மெழுகுவத்தியை ஏற்றி அது அணையாமலிருக்க சர்பிகேட் இருந்த ப்ளாஸ்டிக் கவரால் மறைத்த போது தான் அதை நான் கவனித்தேன். “கார்த்திக், என்னடா இது, என்னோட சர்டிபிகேட் இருக்கிற ப்ளாஸ்டிக் கவருக்குள்ள ஏதோ நியூஸ் பேப்பர் இருக்கு”  

“அது வந்து.. பழைய தினத்தந்தி பேப்பர். நான் டென்த்ல ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்தது என் போட்டோவோட இதுல போட்டாங்க. அப்பா தாண்டா இத பத்திரமா எடுத்து வெச்சார்” என்று சொன்ன கார்த்திக்கின் கண்களில் நீர் துளிர்த்தது.

அரைமயக்கத்தில் இருந்த எங்களை படபடவென்ற சத்தம் பதறியடித்தபடி மேலே வானத்தைப் பார்க்க வைத்தது. வட்டமிட்டபடி ஒரு ஹெலிகாப்டர். “ ஹெலிகாப்டர நாம இதுக்கு முன்ப சினிமாவிலத் தான் பாத்திருக்கோம், அதுவும் இவ்வளவு கிட்டக்க.. நம்மள காப்பாத்த வந்தாங்களோ?”

“ப்ச்.. சாப்பாடு போடறாங்க போல. ஏதாச்சும் பண்ணி அவங்கள பார்க்க வச்சா தான் பொட்டலத்தை போடுவாங்க. என்ன பண்ணலாம், நனையாத காகிதம், துணி ஏதாச்சும் இருக்கா” என்று நான் பரபரக்க ஒன்றும் யோசிக்காமல் கார்த்திக் பட்டென்று பிளாடிக் உறையில் என் சர்டிபிகேட் கவரில் வைத்திருந்த அவன் போட்டோ வெளியான நியூஸ் பேப்பரை வெளியே எடுத்தான். பத்து வருடத்து முந்திய மக்கிப்போன அந்த செய்தித்தாள் கபகபவென்று பற்றி எரிந்தது. வெளிச்சம் பார்த்து உயரத்தில் வட்டமடித்த ஹெலிகாப்டர் ப்ளாஸ்டிக் பொட்டலம் ஒன்றை வீசியெறிய அது தண்ணீர்த்தொட்டி அருகில் விழுந்து மிதந்தது. நான்கு மில்க் பிக்கீஸ் பேக்கெட், மூன்று மினி வாட்டர் பாட்டில், இரண்டு புளிசாதப் பொட்டலம். ப்ரூட்டீஸ் இரண்டு, அத்துடன் அரை டஜன் வாழைப்பழம். 

“கொஞ்சமாவது யோசனை இருந்திருந்தா இதுல ஒரு மெழுகுவத்தியும் தீப்பொட்டியும் வெச்சிருப்பானுங்க” என்றேன்.

“ம்ம்..சரிதான்,  நெருப்புல மாட்டிக்கிட்டா நம்மள காப்பாத்த தண்ணி தேவைப்படுது. அதேபோல தண்ணியில சிக்கிட்டா நமக்கு நெருப்பு தான் துணை போல.. இந்த தீப்பெட்டிய,  சர்டிபிகேட் இருக்குற பிளாஸ்டிக் உறைக்குள்ள பத்திரமா வை.” பேண்ட் பாக்கெட்டிலிருந்த தீப்பெட்டியை என்னிடம் நீட்டி “கரண்ட், டார்ச், மெழுகுவத்தின்னு அப்படியே பின்னோக்கி வந்து இப்ப ஆதிமனுஷன் மாதிரி தீப்பந்தம் ஏந்தி நிக்கிறோம்” என்றான் கார்த்திக்

“சுடச்சுட மிளகா பஜ்ஜியிலிருந்து நமுத்துப் போன மில்க் பிக்கீஸ்க்கு வந்துட்டோம். கார்த்திக், ஒரு குட்டிக் கவிதை ஒண்ணு சொல்லட்டா.. சடசடவென பெய்தது மழை. உடன் படபடவென விரிந்தது குடை, மழையைப் புறக்கணிக்கும் கருப்புக் கொடியாய்” 

“நல்லா இருக்குடா. சொல்லும்போதே மழ பெய்யுற மாதிரி சத்தம், யார் எழுதினது, வைரமுத்துவா?”

“ஹிஹி.. நான் தான்,” 

“டேய் சுகு,  நீ கவிதை எல்லாம் கூட எழுதிவியா?  இவ்வளவு நாளா எனக்கு தெரியாதேடா.”

“எனக்கும் தான் நீ தத்துவமெல்லாம் பேசுவேன்னு தெரியாது” என்றேன். 

“மில்க் பிக்கீஸ் பிஸ்கெட் இதுக்குமுன்ன எப்ப சாப்பிட்டோம்னு ஞாபகம் இல்ல. இவ்ளோ டேஸ்டா இருக்கே“

“ஆனாப் பாரு, இந்த புளி சாதம் மட்டும் எவ்வளவு பசியில சாப்பிட்டாலும் ருசிக்கல. ஏதோ கடமைக்குன்னு சாப்பிடற மாதிரிதான் இருக்கு.” அலுத்துக் கொண்டான் கார்த்திக். 

ஒரு கட்டத்தில் எங்களுக்கு இந்த இரவே கடைசி என்றுதான் தோன்றியது. மழை நின்றுவிட்டபோதும் நீர்மட்டம் உயர்ந்துகொண்டே இருந்தது. நாங்கள் நின்றுகொண்டிருந்த தண்ணீர்த் தொட்டி இப்போது பாதிக்குமேல் மூழ்கியிருந்தது. “நாம செத்துடுவமா சுகு” என்று கேட்டு கார்த்திக் சிறிது நேரம் மெளனமாக இருந்தான். பிறகு திடீரென்று என் தோள்களைப் பற்றிக்கொண்டுக் குலுங்கி அழுதான். “சாகறதப் பத்திக் கவலையில்லடா. அதுக்கு முன்ன அம்மா கிட்ட ஒரு சாரி சொல்லனும். போன்ல பேச முடிஞ்சாக்கூட இப்பவே சொல்லிடுவேன்”. எதற்காக என்று அவனும் சொல்லவில்லை. நானும் கேட்கவில்லை. யோசித்துப் பார்த்தபோது எனக்கு அப்படி எதுவும் சாகிறதுக்கு முன் செய்ய என்று ஒன்றுமில்லை என்றே தோன்றியது. என்ன, செத்துப் போவதுக்கு முன் ஒரு வேலை கிடைத்திருக்கலாம். 

மழையிலும் வெள்ளத்திலும் நனைந்து கார்த்திக்கும் நானும் கோழிக்குஞ்சுகள் போல் வெடவெடத்தபடி ஒருவரையொருவர் பற்றிக்கொணடு நின்றிருந்தோம்.

தூரத்தில் இருட்டில் படகு ஒன்று மிதந்து வருவதை கார்த்திக் தான் முதலில் பார்த்தான். அதில் கைலி கட்டிய இரண்டு தெய்வங​கள். ஒருவர் கையில் இருந்த டார்ச் லைட் வெளிச்சத்தால் இருட்டில் அங்குமிங்கும் துழாவிக் கொண்டிருந்தார். இன்னொருவர் துடுப்பு போட்டுக் கொண்டிருந்தார். குடியிருப்பில் யாராவது மிச்சமீதி உயிரோடு இருக்கிறார்களா என்று பார்க்க வந்திருப்பார்கள் போல.

கும்மிருட்டு. எங்களால் படகை மங்கலாக பார்க்கமுடிந்ததே தவிர அதிலிருந்தவர்கள் மொட்டைமாடி நீர்த்தொட்டியின் மேல் வெடவெடத்தபடி நிற்கும் எங்களைப் பார்த்திருக்க சாத்தியமேயில்லை.  இன்னும் ஒருசில நிமிடங்களில் படகு வந்தவழியே திரும்பி விடலாம். எப்படியாவது அதற்குள் அவர்கள் கவனத்தை எங்கள் பக்கம் ஈர்க்க வேண்டும். எப்படி? 

கார்த்திக் என்னைப் பார்த்த பார்வையிலே  எனக்குப் புரிந்தது. ஒன்றும் பேசாமல் ப்ளாஸ்டிக் உறையை திறந்து என் டிகிரி சர்டிபிகேட்டை வெளியில் எடுத்து அவனிடம் நீட்டினேன். “கவலைப்படாதே, டூப்ளிகேட் அப்ளை பண்ணி வாங்கிடலாம்” என்ற கார்த்திக் அதை வாங்கி உருட்டிப் பதட்டத்துடன் தீக்குச்சியால் பற்றவைத்தான். என் டிகிரி சர்டிபிகேட் மக்கிப்போன செய்தித்தாள் போல் இல்லாமல் சட்டென்று பற்றிக்கொண்டு ஜெகஜோதியாக எரிந்தது. அதைப் பார்த்தபோது எனக்கு அது ஏதோ வார்த்தைகளேயில்லாத ஒரு கவிதை போல இருந்தது. 

இப்போது படகு மெதுவாக எங்களை நோக்கித் திரும்பி நகரத் தொடங்கியது. படகு எங்களை நெருங்கியதும் பரபரப்பு ஓய்ந்து நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டேன்.

 “கார்த்திக், புளிசாதம் பாக்கெட் ஒண்ணு மிச்சமிருக்கு. எடுத்துக்கிடலாமா” என்று கேட்டேன். கோபமாகப் பார்ப்பது போல் முறைத்துப் பின் சிரித்தான். “உனக்கு வேனும்னா மில்க் பிக்கீஸ் அரை பாக்கெட் இருக்கு. அதையும் எடுத்துக்கோ” 

“கண்டிப்பா எடுத்துப்பேன்”

படகில் வரும்போது நான் தான் கவனித்து கார்த்திக்கிடம் காட்டினேன். ஆடிட்டர் வீட்டு போட் வாட்டர் டாங்க் மொத்தமும் மூழ்கி மஞ்சள் பெயிண்ட் அடித்த போட்டின் வளைவான மேல் நுனி மட்டுமே தெரிந்தது. “அட, இந்த இடத்தை விட நம்ம ஏரியா கொஞ்சம் மேடு போல” என்று அந்த இக்கட்டிலும் மெலிதாக மகிழ்ச்சியை கார்த்திக் வெளிப்படுத்தினான். 

பெருவெள்ளம் வரும்போது கண்டிப்பாக பத்திரப்படுத்த வேண்டிய பொருள்களின் பட்டியலில் முதலில் இருப்பது சர்டிபிகேட்ஸ் என்றுதான் எல்லோரும் சொல்வார்கள். என் டிகிரி எனக்கு வேலை வாங்கித்தந்து சோறு போடும் என்றெல்லாம் நினைத்தேன். கடைசியில் அது ஆபத்துக்கு உதவும் தீப்பந்தமாகத் தான் மாறியது. இந்த வரிசையில் இரண்டாவது முக்கிய பொருள் தீப்பெட்டி என்பது எங்கள் அனுபவம் தந்த பாடம்.

கதையை முடிக்கும் வரை எந்த இடையூறும் செய்யாமல் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த என் நண்பர்கள் மத்தியிலிருந்து டீம் லீடர் சரவணன் சொன்னான். “கிளைமாக்ஸ்ல, டிகிரி பத்திக்கிட்டு உங்க உயிரையில்ல காப்பாத்தியிருக்கு. மொத்தத்தில கதை, ரொம்ப திரில்லிங்கா இருந்துது” 

“என்ன கொடுமை சரவணன் இது? கதையா?” அதிர்ச்சியானேன்.

“சாரி சுகுமார், பட், ட்ரூத் இஸ் ஸ்ட்ரேஞ்சர் தென் பிக்‌ஷன். சரி, அதுக்கப்புறம் மழை சீசன் வரும்போதெல்லாம் உங்களுக்கு பயமா இருந்திருக்கும்ல?”

“நிச்சயமா இல்ல. பயமெல்லாம் முதல் தடவை தான். ஒருமுறை பட்ட அவஸ்தை, கிடைச்ச அனுபவம் இதெல்லாம் எங்களுக்கு எந்த வெள்ளத்தையும் சமாளிக்கிற மன உறுதியைக் கொடுத்திருக்கு.”

“இந்தமுறை உங்க ஏரியா மழை வெள்ளத்தை எப்படி சமாளிச்சீங்க?”

“அதுவா? ரொம்ப சிம்பிள்.. வாசல்ல கணுக்கால் அளவுக்கு தண்ணி தேங்கினதுமே உஷாரா வீட்டைப் பூட்டிட்டு குடும்பத்தோட அங்கிருந்து ஜூட் விட்டுட்டோம். உயிர் முக்கியமில்ல”.


ஊழிப் பெருவெள்ளம்







Monday, February 3, 2025

நேர்காணல்

நேர்காணல்       -சசி 

சொல்வனம்-   ஜனவரி 12, 2025


“கூகுள்ல லொகேஷன் சர்விஸ்னு ஒன்னு இருக்கும். அதில நாம கடைசியா எங்கெல்லாம் இருந்தோம்னு பார்க்க முடியும்.” 

“நீங்க சொல்றது கரெக்ட் தான் சார். ஆனா அது நம்ம ப்ரைவஸிக்கு பாதுகாப்பானது இல்லைன்றதால அதை நான் என் போன் செட்டிங்ஸ்ல ஆஃப் பண்ணி வெச்சிருக்கேன்”


நானாக வலியச் சென்று இந்த சக்கர வியூகத்தில் மாட்டிக் கொண்டு விட்டேனோ என்று தோன்றியது. பதில் ஏதும் சொல்ல முடியாமல் வாயடைத்துப் போய் நின்று இருந்தேன். என் முன்னே இருந்த அந்த இளைஞன் நான் அடுத்து என்ன கேள்வி கேட்கப் போகிறேன் என்று காத்துக் கொண்டிருக்கும் முகபாவனையில் இருந்தான்.

தனியாக இருக்கும் எல்லா ஞாயிற்றுக்கிழமை போல இன்றும் சாவகாசமாக கண்விழித்து தி நகர் இண்டியன் காபி ஹவுஸில் காலை டிபன் சாப்பிட ஆஜரானேன். இன்று மதிய உணவு என் மாமியார் வீட்டில், வேளச்சேரியில்.  டிபனுக்கு பின் காபியைக் குடித்து விட்டு பஸ் நிலையத்திலிருந்து 5B பஸ்ஸை பிடித்துச் செல்ல வேண்டியதுதான். ஏற்கனவே நேற்று முன்தினம் என் மனைவி குழந்தை மீனாவுடன் வேளச்சேரி சென்று இருந்தாள். வெளியே வந்து தம் பற்ற வைத்தபோது, 30 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞன் தயக்கத்துடன் என்னைப் பார்த்துக் கொண்டே மெதுவாக நெருங்குவதை உணரமுடிந்தது. அவன் ஏதாவது இடத்திற்கு வழி கேட்கப் போகிறானா என்று யோசித்த நொடியில் அவன் கையில் பெட்டியோ பையோ ஏதும் இல்லாததை கவனித்தேன். கண்டிப்பாக ஏதாவது பொய் சொல்லி உதவி கேட்டு நூதன வழிப்பறி செய்யும் ஒரு ஆசாமியாக இருக்கும் வாய்ப்பே அதிகம்.

“எக்ஸ்க்யூஸ் மி சார், ஒரு நிமிஷம்”

ஊருக்கு வந்த இடத்தில் பணம் கொள்ளை அடித்து விட்டார்கள் என்று பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இந்த இளைஞன் சொன்ன கதை முற்றிலும் வினோதமாக இருந்தது. ஆங்காங்கு நான் கேட்ட எதிர் கேள்விகளை எல்லாம் வெகு சுலபமாக உடைத்துச் சுக்கு நூறாக்கி விட்டு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தான்.

“சார், என் பேரு பிரேம் குமார், இங்க கோடம்பாக்கத்தில் ஒரு பைனான்ஸ் கம்பெனியில திங்கட்கிழமை எனக்கு இண்டர்வியு. அதுக்காக காலைல கோவையிலிருந்து எக்ஸ்பிரஸ்ல சென்னை சென்ட்ரல் வந்து சேர்ந்தேன். சென்னை எனக்கு அவ்வளவா பழக்கம் இல்லாததால ஆட்டோக்காரர் கிட்டயே இன்டர்வியூ நடக்கிற இடத்தை சொல்லி அதுக்குப் பக்கமா ஏதாவது ஒரு நல்ல லாட்ஜுக்கு கூட்டிட்டு போகச் சொன்னேன்.”

“ம்ம்?”

“கோடம்பாக்கத்தில் இண்டர்வியு  நடக்கிற ஆபீஸ் பக்கம் சரியான லாட்ஜ் ஏதும் இல்லாததால் அதற்கும் தி நகருக்கும் இடைபட்ட இடத்தில ஒரு லாட்ஜில் விடுவதாகவும் மேலும் அங்கிருந்து சுளுவா தி நகருக்கு ஆட்டோவில் சாப்பிட வரலாம்னு ஆட்டோ டிரைவர் சொன்னார்”.

“சரி?”

“ஆட்டோவை லாட்ஜுக்கு உள்பக்க வராண்டால நிறுத்திட்டு அப்படியே பத்து நிமிஷத்தில வந்தீங்கன்னா டிபனுக்கு ட்ராப் பண்றேன்னு ஆட்டோ டிரைவர் சொல்ல.. நானும் உள்ளே போய் ரிசப்ஷன்ல வாடகையை கூகுள்பே பண்ணிட்டு சாவியோட ரூமுக்கு ஓடினேன். அவசர அவசரமாக கீழே ஓடி வந்து மறுபடியும் ஆட்டோல ஏறி உட்கார்ந்தேன். தி நகர் சரவண பவன் முன்னாடி இறக்கிவிட்டு  டிரைவர் கிளம்பினார். சாப்பாடு டோக்கன் வாங்க பர்ஸை தேடின போதுதான் எனக்கு விஷயமே புரிந்தது“

“என்ன ஆச்சு. பர்ஸ் காணாம போயிடுச்சா.. இல்ல, திருட்டு போயிடுச்சா?”  

“ரெண்டும் இல்ல சார். ரூம்ல முகம் அலம்ப பாத்ரூமுக்கு போகும் போது டேபிள் மேல பர்ஸையும் மொபைலையும் வெளியே எடுத்து வெச்சிருந்தேன். அதை எடுத்துட்டு வர மறந்துட்டேன்.”

“பர்ஸ் உங்க கிட்ட இல்லன்னா ஆட்டோ டிரைவருக்கு எப்படி பணம் கொடுத்தீங்க?”

“ஷர்ட் பாக்கெட்ல 200 ரூபா சில்லறை இருந்தது.” 

“ஆட்டோவுக்கு எவ்வளவு கொடுத்தீங்க”

“மொத்தம் 170 ரூபாய்?”

வசமாக மாட்டிக் கொண்டு விட்டான்.  “சரி, அப்போ உங்க பாக்கெட்டுக்குள் இப்ப மிச்சம் 30 ரூபாய் இருக்குமா?” 

மேல் சட்டை பாக்கெட்டில் கைவிட்டு சரியாக 30 ரூபாய் சில்லறை எடுத்துக் காட்டினான் அந்த இளைஞன். பக்காவாக பிளான் செய்து வந்திருக்கிறானோ?

சரவண பவனில் 11 மணிக்கு மேல் தான் சாப்பாடு ஆரம்பம் என்பது சட்டென்று நினைவுக்கு வந்தது. ஆட்டோ டிரைவர் இவனை டிபனுக்கு விடுவதாகத் தானே சொன்னார். “நீங்க சரவண பவன் போய் சேர்ந்தப்ப மணி என்ன?”

“பதினோரு மணிக்கு மேல ஆயிடுத்து. இன்னைக்கு நான் வந்த ரயில் அரை மணி நேரம் லேட்டு. நீங்க நான் சொல்றது உண்மையான்னு டெஸ்ட் பண்ணுறீங்கன்னு தெரியுது. பரவாயில்ல. ஆனா நான் சொல்றது எல்லாமே உண்மை தான் சார்.”

“இபபவும் ஒரு பிரச்சனையும் இல்லை. இங்கே இருந்து ஒரு ஆட்டோ பிடிச்சு நேரா லாட்ஜுக்கு போயிடுங்க. ரூமுக்கு போய் பர்ஸை எடுத்துட்டு வந்து ஆட்டோவுக்கு செட்டில் பண்ணிடலாம். அவ்வளவு தானே?.”

“சிக்கலே அங்க தான் சார்.  நான் ஒரு பெரிய தப்பு பண்ணிட்டேன். நான் அதை சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க.”

 “ஏன், என்ன ஆச்சு?” 

“உண்மையிலேயே அந்த லாட்ஜ் எங்க இருக்குன்னு எனக்குத் தெரியாது. ஆட்டோ அங்க என்னை உள்ளுக்குள்ளார விட்டதால வெளியே லாட்ஜ் பெயரை நான் கவனிக்கவும் இல்லை. ரிசப்ஷன்ல இருந்தவரை ஞாபகம் இருக்கு. ஆனா அங்கயும் நேம் போர்ட் ஏதும் இல்லை. நிஜமாகவே எனக்கு இப்ப மறுபடியும் அங்க எப்படிப் போய் சேருவது என்று புரியவில்லை. அந்த லாட்ஜை கண்டுபிடிக்க நீங்க தான் எனக்கு உதவி பண்ணனும் சார்.  நாளைக்கு இண்டர்வியுக்கு தேவையான சர்டிபிகேட் பைல் எல்லாம் அங்க தான் இருக்கு. முக்கியமா என்னோட மொபைல் போன்..”

என்னையும் அறியாமல் “அடப்பாவி!” என்று கத்தினேன். அவன் உண்மையைத் தான் சொல்கிறானா இல்லை என்னை ஏமாற்றி பணம் வாங்க ஏதாவது முயற்சி செய்கிறானா என்று புரியவில்லை. ஆனால் ஒருவேளை இது உண்மையாக இருந்தால் அவனுடைய லாட்ஜை எப்படி கண்டுபிடிப்பது என்பது எனக்கும் ஒரு சவாலாகத் தோன்றியது. 

“லாட்ஜ் ரூம் சாவி எங்க?”

“வரும்போது அதை ரிசப்ஷன்ல கொடுத்திட்டேன். எப்படியும் அதுல பேர் எதுவும் இல்ல சார்.”

“இன்னொரு யோசனை, இண்டர்வியு நடத்துற கம்பனிக்கே போய் விவரத்தைச் சொல்லி உதவி கேட்கலாமே.”

“சார், இன்னைக்கு ஞாயிற்றுக் கிழமை. அதுவுமில்லாம என் கதையை கேட்ட பிறகு எவனாவது எனக்கு வேலை குடுப்பானா?”

“அதுவும் சரிதான், உங்க மொபைல் நம்பர் சொல்லுங்க. முதல்ல அதுக்கு ரிங் பண்ணி பார்ப்போம்.” 

“ரூமுக்குள்ள இருக்கிற மொபைல் சத்தம் வெளியே கேட்க சான்ஸ் இல்ல. இருந்தாலும் நம்பர் சொல்றேன். ட்ரை பண்ணிப் பாக்கலாம்.”

அவன் தந்த மொபைல் நம்பருக்கு போன்  செய்தேன். எடுக்கப்படாமல் ரிங் போய்க்கொண்டிருந்தது. அவன் சொல்வது ஒருவேளை நிஜம் என்றால் அவன் லாட்ஜை எப்படிக் கண்டு பிடிப்பது?

“சரி, லாட்ஜிலிருந்து இங்க ஆட்டோல வர எவ்வளவு நேரம் ஆச்சு?”

“கிட்டத்தட்ட அரை மணி நேரமிருக்கும்”

“இன்னைக்கு சண்டே. டிராபிக் குறைவு. கோடம்பாக்கத்துக்கும் திநகருக்கும் இடையிலன்னா..மேற்கு மாம்பலம், பாண்டிபஜார்..ரங்கராஜபுரம்.. எது வேணாலும் இருக்கலாம். ஒரு ஆட்டோ எடுத்து ரவுண்ட் அடிக்கலாம். ஆனா அப்படி கண்டுபுடிக்க முடியுமான்னு தெரியல, ஒருவேளை போலிஸ் கிட்ட போனா..”

“சார், என்ன சொல்றீங்க, ஏதாவது தொலைஞ்சு போச்சு இல்ல திருட்டு போச்சுன்னா, அவங்க கிட்ட போய் சொல்லலாம். என் கதைய போய் அவங்க கிட்ட சொன்னா சிரிப்பாங்க.”

“சரி, லாட்ஜுக்கு எவ்வளவு வாடகை குடுத்தீங்க”

“ஆயிரத்து நானூறு ரூபா” 

“இண்டர்நெட்ல இங்க அக்கம்பக்கத்தில அந்த வாடகை ரேஞ்ச் இருக்கிற லாட்ஜுக்கு எல்லாம் போன் போட்டு பாக்கலாம். அதுவும் சரிப்படுமான்னு தெரியல. சரி, உங்களுக்கு என்ன வழி தோணுது?”

“நான் யோசிச்சு ஒரு வழி தான் இருக்கு சார். என்னோட போன் இருந்தா போதும். லாட்ஜுக்கு ஜிபே பண்ணி இருக்கேன். அந்த போன் நம்பருக்கு பேசினா லாட்ஜை கண்டுபிடித்து விடலாம்.”

“போன் தான் இல்லையே. லாட்ஜுல மாட்டிக்கிச்சே”

“கரெக்ட், ஆனா ஒரு ஆதார் காப்பி இருந்தா போன் சிம் டூப்ளிகேட் வாங்கிடலாம். அப்புறம் ஒரு பேசிக் மாடல் மொபைல் போன் ஒன்னு வாங்கிட்டா.. அதுல கூகுள் பே பதிவிறக்கம் பண்ணி அதிலிருந்து லாட்ஜ் போன் நம்பரை புடிச்சிடலாம்.”

இப்போது எனக்கு விளங்கி விட்டது. ஒரு பேசிக் மாடல் போன். அத்தோடு ஒரு டூப்ளிகேட் சிம் கார்டு வாங்கத் தேவையான பணம். அதற்குத் தான் இவன் என்னிடம் அடிபோடுகிறான் அல்லது இந்த சம்பவத்தைக் கட்டமைத்து என்னிடம் பணம் பறிக்கத் திட்டமிடுகிறான். வித்தியாசமாக இருந்த இந்தக் கதையை நம்புவதா வேண்டாமா? என் புத்திசாலித்தனத்தின் மீதான நம்பிக்கையில் அவன் ஏதாவது ஒரு இடத்தில் இடறுவான், தடுமாறுவான் என்று நினைத்தேன். அவனோ எல்லா கேள்விகளுக்கும் சரியான பதில் வைத்திருந்தான். கொஞ்சமும் யோசிக்காமல் பட்டென்று பதிலும் சொன்னான்.

“இப்ப ஒரு நாலாயிரம் ரூபா இருந்தா பிரச்னை தீர்ந்திடும் சார்.”

“சரி, இப்ப அதுக்கு நான் என்ன செய்யனும்”

“நான் சொன்னத எல்லாம் நீங்க நம்புனா எனக்கு உதவி செய்யலாம். போன், புது சிம் கைக்கு வந்துட்டா பணத்தை உடனே திருப்பிக் கொடுத்திட முடியும். நாளைக்கு மட்டும் எனக்கு இண்டர்வியு இல்லன்னா கவலைப்பட மாட்டேன். இந்த ரோட்டோரமா கூட படுத்துட்டு எப்படியாவது திரும்பி வீடு போய் சேர்ந்திடுவேன்.”

இப்படிச் சொல்லிவிட்டு என் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். 

சட்டென்று பொறி தட்டியது போல் தோன்றிய எனது கடைசி அஸ்திரத்தை இறக்கினேன். “எல்லாம் சரி. இப்போ உங்களுக்குத் தேவையானது பணம் தானே. நான் என்னுடைய போன் தரேன். அதுல உங்க வீட்டுல யாரையாவது கால் பண்ணி என் நம்பருக்கு ஜிபே பண்ண சொல்லுங்க. அதை நான் ஏடிஎம்ல இருந்து எடுத்துத் தந்திடறேன்.“ 

“நீங்க சொல்றது சரிதான் சார். எனக்கும் அது தோணுச்சு. என் அப்பா உயிரோட இல்லை. உண்மையிலேயே எனக்கு எங்க அம்மா நம்பரைத் தவிர வேறு எதுவும் ஞாபகத்துக்கு வரல. எல்லாமே போன்ல தான் இருக்கு. அம்மாவுக்கு போன் பண்ணி பிரயோஜனமே இல்லை. அவங்களுக்கு பணம் அனுப்பவும் தெரியாது. அதைத் தவிர இப்ப இதெல்லாம் தெரிஞ்சா அவங்க ரொம்ப டென்ஷன் ஆயிடுவாங்க. ஹார்ட் பேஷண்ட் வேற.”

சொல்லும் கதையில் கொஞ்சம் சோகம் கொண்டு வருகிறானோ? ஒரு நொடி யோசித்துப் பார்த்தபோது அவன் சொல்வதும் சரிதான் என்று தோன்றியது. எனக்கும் என் மனைவி நம்பரைத் தவிர வேறு எந்த மொபைல் நம்பரும் ஞாபகத்துக்கு வருமா என்பது சந்தேகமே. நாம் எல்லோருமே மொபைல் போனுடன் ஆதார் எண்ணை மட்டுமல்ல. நம் மொத்த வாழ்க்கையையும்  லிங்க் செய்து வைத்திருக்கிறோம். எல்லோருமே போனுக்கு அடிமைதான். கையில் மொபைல் இல்லை என்றால் நம் எல்லார் கதையும் கந்தல் தான். 

“என்னால இதை நம்ப முடியல, அவசரத்துக்கு உங்களோட ஒரு நண்பன் போன் நம்பர் கூட தெரியாதா?”

சட்டென்று ஏதோ ஞாபகம் வந்தது போல் “சார் ஒரு நிமிஷம் உங்க போனை குடுங்க” என்று வாங்கி சிறிது தொலைவில் சென்று கால் செய்து பேசிவிட்டுத் திரும்பி வந்தான். 

“ஒன்னும் பிரயோஜனம் இல்ல சார்”

“ஏன்? என்ன ஆச்சு, பேசிட்டு இருந்த மாதிரி கேட்டதே!”

“அவனெல்லாம் ஒரு நண்பனே இல்லை சார்.  நிலைமையை விளக்கிச் சொன்ன பிறகும் அஞ்சு பைசா இல்லைன்னு கைய விரிச்சுட்டான்”. 

தொடர்ச்சியாக ஒருவரால் பொய் சொல்ல முடியாது என்ற எனது அதீத நம்பிக்கையை அவன் உடைத்து விட்டான் அல்லது தொடர்ந்து அவன் சொல்வதெல்லாம் உண்மை என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வளவு விசாரணைக்குப் பிறகு அவன் கேட்ட உதவியை செய்ய வேண்டும் என்பதைத் தவிர வேறு வழி இல்லை. ஒருவேளை ஏமாற்றுப் பேர்வழி என்றாலும் அவன் என்னைக் களத்தில் வென்று விட்டான். அதற்கான பரிசு அது.  

ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொடுத்தபோது என் இரு கைகளைப் பற்றி நன்றி சொன்னான். என் போன் நம்பரை வாங்கிக்கொண்டு “போன் சிம் வாங்கினதும் உடனே உங்களுக்கு பணம் அனுப்பிடறேன் சார்” என்றான். 

வேளச்சேரியில் நடுராத்திரி அரைமயக்கத் தூக்கத்தில் திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. அவன் புரட்டு ஆசாமி இல்லையென்றால் சரவண பவன் வாசலில் ஆட்டோ அவனை விட்டுச் சென்ற காட்சி கண்டிப்பாக ஓட்டலின் சிசிடிவி கேமராவில் பதிவாயிருக்கும். அதன் மூலமாக ஆட்டோ நம்பரைக் கண்டுபிடித்து டிரைவரை தொடர்பு கொள்ள முடியுமே. எப்படியும் பணம் என் கையை விட்டு போனபின் இனி இதெல்லாம் இப்போது யோசித்துப் பயனில்லை. 

காலையில் எழுந்ததும் மனைவி கேட்டாள். “என்னங்க ஆச்சு, ராத்திரி முழுக்கத் தூக்கத்துல லாட்ஜ் ஆட்டோன்னு பினாத்திட்டே இருந்தீங்களே?” விஷயத்தை சொன்னால் கட்டித் தொங்க விட்டு விடுவாள். ‘அஞ்சு ரூபாய்க்கு ஆயிரம் நொள்ளை கேள்வி கேப்பீங்க. எவனோ ப்ராடு ஒருத்தனுக்கு சுளையா நாலாயிரம் அழுதுட்டு வந்திருக்கீங்க’

திங்கட்கிழமை காலையிலிருந்தே அவன் நினைப்பாகவே இருந்தது. இதுவரை அவன் பணம் ஏதும் அனுப்பவில்லை. இன்று இண்டர்வியு என்றானே. கொஞ்சம் காத்திருப்போம் என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். இருப்பு கொள்ளாமல் மதியம் மூன்று மணியளவில் போன் அழைப்புப் பதிவிலிருந்த அவன் நம்பருக்கு ரிங் செய்தேன். பதில் ஏதுமில்லை. இதற்கென்ன அர்த்தம்? பயனில் இல்லாத மொபைல் எண் ஒன்றை அவனுடையது என்று சொல்லியிருக்கிறான். நேற்று அழைப்புப் பதிவில் இருந்த இன்னொரு எண் அவனுடைய நண்பனை அழைத்ததாக அவன் சொன்னது. அந்த நம்பருக்கு அழைப்பு விடுத்தேன். ஒரு நொடியில் யாரோ மறுமுனையில் எடுக்க. “ஹலோ யாரு பேசறது” என்று நான் கேட்டதற்கு பதில் வந்தது. 

“சங்கர் பஞ்சர் கடை சார்” 

“என்னது? பஞ்சர் கடையா, எங்க இருக்கு உங்க கடை?” 

“தி நகர் பஸ் ஸ்டாண்ட் எதிர்பக்கம் சார்”

இப்போது எனக்கு எல்லாம் தெளிவாகப் புரிந்தது. அவன் என்னிடம் நேற்று போனை வாங்கி அவன் நண்பனிடம் பேசுவது போல எதிர்புறம் இருக்கும் பஞ்சர் கடையின் போர்டில் இருந்த போன் நம்பருக்குப் பேசி இருக்கிறான் போல. 

மொத்தத்தில் என்னை சுத்தமாக ஏமாற்றி விட்டிருக்கிறான். நானும் வடிகட்டிய மடையனாக நாலாயிரம் ரூபாய் அவனுக்கு அள்ளிக் கொடுத்திருக்கிறேன். பணம் விரயமென்றால் எள்ளு அல்லது காந்தி கணக்கு என்பார்கள். இதை எட்டு காந்தி கணக்கு என்று வைத்துக் கொள்ள வேண்டும். ஏடிஎம்மில் எடுத்த புத்தம் புதிய எட்டு ஐநூறு ரூபாய் நோட்டுகள்

மாலை ஒரு ஏழு மணி இருக்கும். மொபைல் போன் அடித்தது. “சார், நான் பிரேம்குமார் பேசுறேன்”  சட்டென்று புரியவில்லை. பிறகு நினைவுக்கு வந்துவிட்டது. அவன் தான். 

“மதியம் போன் செய்தேன். எடுக்கவே இல்லையே” கோபத்துடன் கேட்டேன்.

“அது ஒரு பெரிய கதை சார்” 

அடப்பாவி மறுபடியும் ஆரம்பித்து விட்டானா? 

“நேத்து நீங்க போன பிறகு உடனடியாக ஒரு மொபைல் போன் அங்கேயே வாங்க முடிந்தது. ஆனால் சிம்கார்டு தான் பிரச்சனை ஆயிடுச்சு. ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிம்கார்டு டூப்ளிகேட் வாங்க முடியல. திங்கட்கிழமை தான் கிடைக்கும்னு சொல்லிட்டாங்க. என்ன செய்யறதுன்னு புரியாம அங்கேயே பக்கத்துல ஒரு சின்ன லாட்ஜில் நைட்டு தங்கிட்டேன். காலையில முதல் வேலையா கடை திறந்ததும் டூப்ளிகேட் சிம் வாங்கிட்டு லாட்ஜை கண்டுபிடிச்சு போய் சேர்ந்துட்டேன். அதுக்கே பதினோரு மணி ஆயிடுச்சு. அதனால கம்பெனிக்கு போன் பண்ணி இண்டர்வியூவ மதியம் மாத்தி வைக்கச் சொல்லி கேட்டதால மூணு மணிக்கு தான் நடந்தது. அதனால் தான் உங்க போன் கால் அட்டென்ட் பண்ண முடியல..”

“அது சரி, நேற்று உங்க பிரண்டுக்கு போன் செஞ்சீங்களே. அது என்ன பஞ்சர் கடையா?”

“மன்னிச்சுக்கோங்க சார். அந்தக் கடைக்கு மேல ஒரு இன்டர்நெட் பிரவுசிங் சென்டர் இருந்தது. அது மூடி இருந்ததால, ஆதார் கார்ட் காப்பி எடுக்க அது எப்ப திறக்கும்னு அவர் கிட்ட கேட்டேன். ஆனா என் ப்ரண்டு கிட்ட பேசினதா சொன்னது தப்புதான். எனக்கு வேற வழியும் தெரியல. எனக்கு அப்படி பணம் கொடுத்து உதவுகிற மாதிரி நண்பர்கள் யாரும் கிடையாது சார்.”

“சரி தான்”

“உங்களைத் தவிர அவ்வளவு பெரிய தொகையை வேற யாராவது கொடுத்து இருப்பாங்களான்னு எனக்கு தெரியல. நீங்க எனக்கு செய்த உதவி ரொம்ப பெருசு சார். சொல்லப்போனால் எனக்கு வேலையே அதனாலதான் கிடைச்சது.”

இப்போது என்னை நினைத்து எனக்கே பெருமையாக இருந்தது. “அதெல்லாம் விடுங்க. இன்டர்வியூ எப்படி போச்சு.”

“சுலபமா தான் இருந்தது. உண்மையிலே நீங்க நேற்று எனக்கு எடுத்த இண்டர்வியு தான் கஷ்டமா இருந்தது.” இதைச் சொல்லும்போது அவனது நமட்டுச் சிரிப்பை போனில் உணரமுடிந்தது. “அடுத்த ஞாயிற்றுக்கிழமை நான் உங்களை அதே இடத்தில் பார்த்து நேரடியா தேங்க்ஸ் சொல்லணும் சார்.” சிரித்துக் கொண்டே சரி என்றேன். போனை கட் செய்த ஓரிரு நிமிடத்தில் டொங் என்ற சத்தத்துடன் குறுஞ்செய்தி ஒன்று வந்தது. ‘உங்கள் வங்கிக் கணக்கில் ரூபாய் 4000 வரவு வைக்கப்பட்டது’



நேர்காணல்

Saturday, December 28, 2024

கண்ணம்மா

கண்ணம்மா – சசி

சிறுகதை | வாசகசாலை    October 6, 2024  



அகிலனின் நூற்றி நாற்பத்தி மூன்றாம் தளத்தில் அமைந்த வீட்டு முகப்பில் ‘அகி அபி அதி’ என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட விர்ச்சுவல் நியான் பெயர்ப்பலகை இன்னும் நீலத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. அதை கைப்பட்டித் திரையின் உதவியால் அணைத்துவிட்டு வாசல் வரவேற்பறையில் அமர்ந்து அபிராமிக்கு குரல் கொடுத்தான் அகிலன். 

இந்த இருபத்தி மூன்றாம் நூற்றாண்டில் பேச, நேரம் நிர்வகிக்க, பொழுது போக்க, பொருள்கள் வாங்க, பணப் பரிமாற்றம், அடையாளம் என்று எல்லாவற்றுக்கும் கைப்பட்டிதான். “அபி, இதோ நான் கிளம்பறேன். அதிபனை தூங்க வெச்சிடடு எனக்கு மதிய உணவை பன்னிரண்டு மணிக்கு ம்யூல்ல போடு”

‘ம்யூல்’ என்பது மின்காந்தப் பின்னல் அலைவரிசையில் கிளைடர் துணையோடு இயங்கும் கூரியர் வசதி. இதில் நமக்குரிய ம்யூல் பெட்டியில் உணவு அல்லது பார்சல் சடுதியில் அனுப்பலாம். அந்தக்கால பாம்பே டப்பாவாலா மாடல்தான். ஆனால், இதில் மனித உழைப்போ, இடையூறோ துளியும் இல்லை. அத்தனையும் அரசாங்கம் நிர்வகிக்கும் கணினி மயமாக்கபட்ட தபால் சேவை. 

“அகில், வீட்டு வேலைக்கு ஆள் ஏற்பாடு செய்யுற நிறுவனத்துக்கு ஃபார்ம் சப்மிஷன் இன்னைக்கு முடிச்சிடு” என்றாள் அபிராமி.

“அதை நேற்றே உன் கைப்பட்டிக்கு பார்வார்ட் பண்ணிட்டேன். கடைசி கேள்விக்கு மட்டும் பதில் போட்டு நீயே அனுப்பிடு’ என்றான் அகிலன். கைப்பட்டியின் மூலம் தன் வீட்டின் அனைத்து பாதுகாப்பு அரண்களையும் சொடுக்கி சேஃப் மோடில் வைத்து வெளிவாசல் வந்தபின் அபிராமிக்கு ‘லவ் யூ’ இமோஜி அனுப்பினான். அவனது அலுவலகம் இருப்பது மும்பை மகாநகரில். சென்னை வைரம் சர்க்கிளில் இருந்து விவியோ பஸ் பிடித்து மும்பை தானேவுக்கு செல்ல பதிமூன்று நிமிட நேரம் ஆகும். சரியாகச் சொன்னால் 12 நிமிடம் 46 நொடிகள். ம்யூல் பெட்டியில் மதியம் பன்னிரண்டு மணியளவில் அபிராமி உணவு அனுப்பினால் அதிகபட்சம் ஒரு மணிக்குள் அவனுக்குப் போய்ச் சேர்ந்துவிடும்.

அகிலன் அனுப்பிய சிவப்பு ஹார்ட் இமோஜி, அபிராமி தலையைச் சுற்றிவந்து மூன்று நொடிகள் டான்ஸ் ஆடிவிட்டு மறைந்தது. வீட்டு வேலைக்குப் பணிப்பெண் கோரும் விண்ணப்பம் இப்போது அவள் கைப்பட்டியில் காத்திருந்தது. அதிலிருந்த கடைசி கேள்வி. 

உங்கள் விருப்பத்துக்குரிய பணியாளரை (பெயர் மற்றும் வட்டார மொழி) தேர்ந்தெடுக்கவும்.

லெட்சுமி -கோவை/ கண்ணம்மா -சென்னை/ அலமேலு -மதுரை                                                      

சில நிமிடங்கள் யோசனைக்கு பின்னர் அபிராமி கண்ணம்மாவை டிக் செய்து தேர்ந்தெடுத்தாள். பணியாளருக்கு உரிய மரியாதை அளிப்பது மற்றும் அவரது கண்ணியத்திற்கு எந்த ஊறும் ஏற்படாதவாறு நடந்து கொள்வது போன்ற நிபந்தனைகளுக்கு சம்மதம் அளித்து டிஜிட்டல் கையொப்பமிட்டாள். அபிராமியின் தலைமுறை முழுக்கச் சென்னையைச் சேர்ந்தவர்கள். வேலைக்கு வருபவரின் முக்கியமான பணி கைக்குழந்தை அதிபனை பார்த்துக் கொள்வதுதான். எனவே பேச்சுவழக்கு எளிதாக இருக்கட்டுமென்று சென்னைத்தமிழ் பேசும் கண்ணம்மாவைத் தேர்வு செய்தாள். 

குழந்தையை கவனித்துக்கொள்ள ‘டோட்டல் பேபி கேர்’ என்ற முற்றிலும் இயந்திரமயமான தொட்டிலை வாங்குவதாகவே முதலில் தீர்மானித்திருந்தார்கள். ஆனால், இடையில் அபிராமியின் அலுவலகத் தோழி சூசன் வீட்டில் நிகழ்ந்த ஒரு சம்பவம் அவர்கள் முடிவை மாற்றியது. சூசன் வைத்திருந்த இயந்திரத் தொட்டிலின் டயப்பர் சென்ஸாரில் திடீர் கோளாறு ஏற்பட்டிருக்கிறது. படுக்கையை ஈரமாக்கிவிட்டு குழந்தை அலற, ‘தொட்டில்’ டயப்பரை மாற்றாமல் குழந்தையின் அழுகையை நிறுத்தவதற்காக, தொடர்ந்து பால் புகட்டியும் தாலாட்டு பாடிக் கொண்டும் இருந்ததாம். அதிர்ஷ்டவசமாக அங்கு வந்த சூசன் தொட்டிலில் இருந்து குழந்தையை விடுவித்து டயப்பரை மாற்றி குழந்தையின் இரண்டு மணி நேர அழுகையை நிறுத்தியிருக்கிறாள். இந்த விஷயம் கேள்விப்பட்ட அபிராமி தொட்டில் வேண்டவே வேண்டாம் என்று சொல்லி விட்டாள். அதன் பிறகே இவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாளரை அமர்த்தும் நிறுவனத்தை அணுகினார்கள். 

இன்னும் ஓரிரு தினங்களில் கண்ணம்மா வீட்டு வேலைக்கு வந்துவிடுவாள். கண்ணம்மாவை என்னவெல்லாம் வேலைக்கு பயன்படுத்துவது என்பதில் அபிராமி மிகத் தெளிவாக இருந்தாள். முக்கியமாக குழந்தை அதிபனை பார்த்துக் கொள்வது, காலைச் சிற்றுண்டி தயாரிப்பது, மதிய உணவு சமைத்து அதை மேல்தளத்தில் உள்ள கிளைடரில் இணைத்து ம்யூலில் அகிலனுக்கு அனுப்புவது அவ்வளவே.

அபிராமிக்கு வீட்டிலிருந்தபடி தான் அலுவலக வேலை. ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ போய் தற்போது ‘ஆபிஸ் இன் ஹோம்.’ அதாவது வீட்டிலேயே விர்ச்சுவல் ஹாலோகிராஃபிக்ஸ் அலுவலகம். அபிராமி கிண்டலாக அகிலனிடம் சொல்வதுண்டு. “அப்படியே வீட்டிலேயே ஆபிஸ் அட்மாஸ்பியர். வீட்டில இருந்துக்கிட்டே நேரடியா பாஸ் கிட்ட திட்டு வாங்கலாம்” ஆனாலும் ஒரு வசதி, ஆபிஸ் ப்ளோர் ப்ளானை ஓரளவு நம் விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளலாம். நமக்கு பிடிக்காத மானேஜர் கேபினை கடைசி மூலையில் தள்ளிவிடலாம். 

இரண்டு நாள் கழித்து காலையில் அகிலன் அலுவலகம் செல்ல வாசல் வந்தபோது, வெளியே சேலையணிந்த ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி கும்பிட்டு, “சார், நான் கண்ணம்மா. உங்க வீட்டு வேலைக்காரம்மா” என்றாள்.

“அப்படியா. வணக்கம், உள்ளே போங்க, அபிராமி இருப்பாள், அவளோடு நீங்கள் தீர்க்கமாக கலந்தாலோசித்து..”

“சார், நீ இன்னா சொல்ற, ஒண்ணுமே பிரியில. நீ ஆபீஸ் கெளம்பு. அல்லாம் நான் பாத்துக்கிறேன். அப்புறம், வீட்ல டிவி பொட்டி கீதா?”

பழஞ்சென்னைத் தமிழில் “கீது” என்றான் அகிலன். “டிவியில்ல, ஹாலோவிஷன்”

“அதுல பழய தமிழ் படம். மெட்டி ஒலி சீரியல், அப்பாலிக்கா, ஹாட் ஸ்டார்லாம் வருமா..”

“அதெல்லாம் தெரியாது, ஹாலோவில விண்டேஜ் சிப் பொருத்தி இருக்கு. அதுல கடந்த முந்நூறு வருஷ டிவி ப்ரோக்ராம்லாம் வரும். எதுக்கும் அபியை கேட்டுக்கோங்க. எனக்கு நேரமாச்சு” என்று சொல்லி நழுவினான் அகிலன். 

அன்று அகிலனுக்கு ம்யூலில் வந்த மதிய உணவு ஒரு புதுமாதிரியான சுவை. அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அபிராமி ம்யூல் பெட்டியில் குறிப்பு எழுதி வைத்திருந்தாள். ‘இன்று மெனு கண்ணம்மா சமையல். பச்சரிசி சாதம், கத்திரிக்காய் காரக்குழம்பு, அப்பளம், அவித்த முட்டை வறுவல்.’ 

கண்ணம்மா தினமும் உருண்டைக் குழம்பு, இடியாப்பம் குருமா, செட்டிநாடு சீர கசம்பா பிரியாணி என்று இவர்கள் அறிந்திராத, வித்தியாசமான பழந்தமிழ் சமையல் செய்து அசத்தினாள். ஓய்வு நேரங்களில் எப்போதும் ஹாலோவியில் பழைய தமிழ் படம், பாடல்கள், சமையல் நிகழ்ச்சிகள் பார்த்துக் கொண்டிருப்பாள். அபிராமிக்கும் மகிழ்ச்சி. “கண்ணம்மா அதிபனை நல்லா பாத்துக்கிறா. அழகான தமிழ்ப் பாட்டெல்லாம் பாடி தூங்க வைக்கிறா. அன்னைக்கு கூட ஏதோ பாடினாளே.. ‘அத்தை மடி மெத்தையடி.. ஆடி விளையாடம்மா’ன்னு.. சூப்பர்பா. அப்புறம் கண்ணாம்மா அவனைக் குளிப்பாட்டுற ஸ்டைலே வேற லெவல். ரெண்டு காலையும் நீட்டிக் குந்திக்கினு இடையில கொழந்தய மல்லாக்காப் போட்டு, சுடுதண்ணி விளாவி..”

“ஏய்! வரவர உன் பேச்சு கூட கண்ணம்மா பேசுற மாதிரி இருக்கு.. ஒண்ணுமே பிரில” என்று சொல்லிச் சிரித்தான் அகிலன். அவனுக்கும் மகிழ்ச்சி. மதியம் ம்யூலில் விதவிதமான சாப்பாடு வந்தது. மாலை வீடு திரும்பியதும் பெயர் தெரியாத அந்த உணவுப் பதார்த்தங்கள் என்னவென்று கேட்டால் கண்ணம்மா ஹாலோவியில் பழைய தமிழ் பாட்டை ஓடவிட்டு கூடவே பாடியபடி பதில் சொல்வாள். 

“நேற்று மதியம் என்ன குழம்பு கண்ணம்மா? ரொம்ப ருசியா இருந்தது.”

“நித்தம் நித்தம் நெல்லு சோறு.. நெய் மணக்கும் கத்திரிக்கா.. நேத்து வெச்ச மீன் குழம்பு என்ன மயக்குதையா.”

“இன்னக்கு காலை டிபன் என்ன?” 

“உட்டாலங்கடி கிரி கிரி.. சைதாப்பேட்ட வடகறி…” 

“என்னது?”

“இட்லி வடகறி சார்” உடனே ஹாலோவியில் அர்த்தம் விளங்காத ஒரு அரதப் பழசானத் தமிழ் சினிமாப் பாட்டு ஒலிக்க வைப்பாள்.. “வா வாத்யாரே வூட்டாண்டே.. நீ வராங்காட்டி நான் உடமாட்டேன். ஜாம்பஜார் ஜக்கு.. நான் சைதாப்பேட்டை கொக்கு!”

அகிலனுக்கு என்றாவது அலுவலகம் செல்ல நேரமாகிவிட்டதென்று காலைச் சிற்றுண்டி சாப்பிடாமல் கிளம்ப முற்பட்டால் அபிராமி விட்டாலும் கண்ணம்மா அனுமதிக்க மாட்டாள். “இம்மாந்தூரம் போய்ட்டு வர.. லைட்டா ஏதாச்சும் நாஷ்டா துன்னுட்டு போ சார்.”

ஒருநாள் குழந்தை அதி ஏதோ உடம்புக்கு முடியாமல் அலறி அழுதிருக்கிறான். அகிலன் விவியோ பஸ்ஸில் ஏறியபின் அபியின் அழுகை கலந்த அழைப்பு வந்தது. “உடனே நீ டாக்டர் வினயிடம் ரிமோட் தெரபி புக் பண்ணிடு” என்று அகிலன் சொல்ல, பக்கத்திலிருந்த கண்ணம்மா எட்டிப் பார்த்து, “அதெல்லாம் ஒண்ணும் வேணாம் சார்! அபிமா, கொழந்தைக்கு நீர்க்கடுப்புதான்.. உன்னாண்ட விளக்கெண்ண இருக்கா?”

“விளக்கெண்ணையா? அப்படின்னா..”

“அய்ய.. ஆமணக்கெண்ண.. அத கொஞ்சம் அடிவயித்தில லேசா தடவினா வலி ஓடியேப்பூடும் அபிமா”

உடனே அபிராமி கைப்பட்டியில் தேடி மாஜிக் பாக்ஸில் ‘கேஸ்டர் ஆயில்’ ஆர்டர் போட்டு அதை ம்யூல்பெட்டியில் இணைக்க, ஐந்து நிமிடத்தில் விளக்கெண்ணைய் வீடு வந்து சேர்ந்தது. கண்ணம்மா அதை சிரத்தையாக குழந்தையின் வயிற்றில் மெதுவாகத் தேய்த்துவிட, ஆச்சரியமாக அடுத்த சில நிமிடங்களில் அவன் அழுகை நின்றது. அகிலனுக்கு இந்த அதிசயத்தை கைப்பட்டி பேசியில் சொல்லிச் சொல்லி மாய்ந்தாள் அபிராமி.

ஒருமுறை ஹாலோவிஷன் இருக்கும் அறைக்குள் அகிலன் எட்டிப்பார்த்தபோது கண்ணம்மா சீரியஸாக ஹாட் ஸ்டாரில் ‘குழந்தை வளர்க்கிறதுல முக்கிய பங்கு ஆயாக்களுக்கா?அம்மாவுக்கா?’ என்ற பட்டிமன்றம் முழிபிதுங்கப் பார்த்துக் கொண்டிருந்தாள். இன்னொரு நாள் அபிராமி அகிலனை அவசரமாக சைகை செய்து அழைத்தாள். ஹாலோவியின் மெய்நிகர் திரையில் பழைய தமிழ் படம் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அதில் கிட்டத்தட்ட கண்ணம்மா சாயலில் ஒரு பெண்மணி.

“அகில், இவங்க மனோரமா. இந்தப் படத்துல இவங்க பேரும் கண்ணம்மாதான். நல்லா கவனி. படத்துல அவங்க பஞ்ச் டயலாக்கா கம்முனு கெடன்னு சொல்வாங்க. அதே மாதிரி கண்ணம்மா என்கிட்ட அடிக்கடி கம்முனு கிட கம்முனு கிடன்றா”

“சரிதான். இதையெல்லாம் பாத்துதான் நம்ம கண்ணம்மாவும் கத்துக்கிறாப் போல.. நல்லா சமையலும் பண்றா. மொத்தத்தில நமக்கு விண்டேஜ் மெமரி சிப்பினால நல்ல பலன்தான்“ 

கடந்த ஒரு வாரமாக, மாலை வீடு திரும்பினால் அகிலனால் ஏதோ வித்தியாசத்தை உணர முடிந்தது. ஹாலோவிஷன் சத்தம் கேட்பதில்லை. முன்புபோல் தமிழ் பாடல்கள் ஒலிப்பதில்லை. சமையல் செய்வது, அதியை பார்த்துக்கொள்வது தவிர கண்ணம்மாவிடம் வழக்கமான ஆரவாரம், ஆர்ப்பாட்டம் எல்லாம் குறைந்து காணப்பட்டது. ஒருநாள் மாலைநேரம் வைரம் சர்க்கிள் பூங்காவுக்கு அபியை தனியாக வரவழைத்துப் பேசினான் அகிலன். 

“நானே உன்கிட்ட இது சம்மந்தமா பேசனும்னு இருந்தேன் அகில். நம்ம ஹாலோவில இருந்த விண்டேஜ் சிப் இப்ப மிஸ்ஸிங்.”

“என்னது? என்ன சொல்றே அபி!” இந்த சிப் அபிராமி அவள் வீட்டிலிருந்து கொண்டு வந்தது. அவளுடைய கொள்ளுத் தாத்தா காலத்திலிருந்து இருக்கும் அந்த மெமரி சிப் விலைமதிக்க முடியாத ஒன்று. 

“ஆமா அகில், எனக்கு என்னவோ கண்ணம்மா மேலதான் சந்தேகமா இருக்கு. மெமரி சிப் எங்கேன்னு கேட்டதுக்கு கண்ணம்மா தெனாவெட்டாக, ‘எனக்கு சிப்ஸ், நூடுல்ஸ்.. இந்த கஸ்மாலமெல்லாம் ஒண்ணும் தெரியாது’ன்னு சொல்றா”

“கண்ணம்மா பொய் சொல்லும்னு நம்ப முடியில அபி” 

“இன்னொரு விஷயம் அகில், இந்த சிப் காணாம போனதுக்கு முந்தினநாள் மதியம் நான் வொர்க் ரூம்ல ஆபிஸ் கான்ப்ரென்ஸ் மீட்டிங்ல இருந்தேன். அப்ப வெளியே வாசல்ல யாரோ ரெண்டு கவர்மெண்ட் யூனிபார்ம் போட்ட ஆளுங்க கூட கண்ணம்மா ஏதோ சத்தமா ஆர்க்யூ பண்ணிட்டு இருந்தா.. மீட்டிங் முடிஞ்சதும் என்னன்னு கைப்பட்டியில பார்த்தா சுத்தமா ரெக்கார்டிங் எதுவும் இல்ல. காரணம் மெயின் கேமரா மெமரியிலே வீடியோ டெலிட் ஆயிருக்கு. ஒருவேளை இதுகூட கண்ணம்மாவோட கைங்கரியமா இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு”

“இப்ப என்ன செய்யலாம் அபி?”

“வேற வழியில்ல. பணியாள் கம்பெனிக்கு கம்ப்ளைண்ட் குடுத்திடலாம். பிரச்சனை சிப் காணாமப் போனது மட்டுமில்லை. நம்பிக்கையில்லாத, பொய் சொல்ற ஒருத்தர் கிட்ட நம்ம குழந்தையை பாத்துக்கற வேலையை எப்படி ரிஸ்க் எடுத்து கொடுக்கறது?” 

அகிலன் பணியாள் நிறுவனத்திடம் ‘விடுமுறை தினத்தில் வீட்டு வருகை’ வேண்டி புகார் மனு சமர்ப்பித்தான். இந்த இடைப்பட்ட நாட்களில் கண்ணம்மா சோர்வாக, எதிலும் ஆர்வம் இல்லாமல் அமைதியாக இருந்தாள். அபிராமியும் சோகமாக முகத்தை உம்மென்று வைத்தபடி திரிந்தாள். ஒருமுறை அகிலனிடம், “அப்ப, அவங்க கண்ணம்மாவ வீட்டு வேலையிலிருந்து தூக்கிடுவாங்களா?” என்று கேட்டாள். 

“அவங்க விண்டேஜ் சிப்பை கண்டுபிடிச்சு தருவாங்களான்னு தெரியாது. ஆனா, கண்ணம்மா மேல நமக்கு சந்தேகம் வந்த பட்சத்தில நீ சொல்றது நடக்கலாம்.” என்றான் அகிலன். அதற்குப் பிறகு அபிராமி இன்னும் சோகமானாள்.

புதன்கிழமை அபார்ட்மெண்ட் வெளிவாசலில், ‘ஹெல்ப்பர் லாஜிஸ்டிக்ஸ்’ என்று பெயர் பொறித்த வேன் ஒன்று நிற்பதை அகிலன்தான் முதலில் கைப்பட்டித் திரையில் பார்த்தான். அபிராமியிடம் சொல்வதற்கு முன்னமே வாசலில் யூனிபார்ம் அணிந்த பணியாள் நிறுவன விசாரணை அதிகாரி நீரஜ் கபூர் காத்திருந்தார். விவரங்களை எல்லாம் அகிலனிடம் கேட்டு பதிவு செய்தபின், “பணியாளரைக் கூப்பிடுங்கள்” என்றார். அகிலன் அழைக்க, அபிராமி கண்ணம்மாவுடன் வரவேற்பறைக்கு வந்தாள். 

“இவர்தான் உங்கள் ஹாலோவி சிப்பை திருடி பொய் சொல்றதா நினைக்கிறீங்களா?” என்று விசாரித்தார் நீரஜ்.

“விண்டேஜ் மெமரி சிப்” என்று திருத்திவிட்டு வேறு எதுவும் சொல்லாமல் மௌனம் சாதித்தான் அகிலன். அபிராமி தலைகுனிந்தபடி நின்றிருந்தாள். கண்ணம்மா முகத்தில் அதீதமான கலவரம் தெரிந்தது. அபிராமியைப் பார்த்து அகிலன், “அதி எங்கே?” என்று கேட்க, அதற்கு கண்ணம்மா பதில் சொன்னாள்.

“கவலப்படாத சார். கொய்ந்தய அப்பவே தூங்க வெச்சிட்டேன். உங்க கொய்ந்த, குடும்பத்துக்கோசுரம்தான் ராப்பகலா நான் ஒழச்சென். டகால்னு திருட்டுப்பட்டம் குடுத்திட்டீயே சார். அந்தக்காலத்துல வேலக்காரின்னா நகை அபேஸ் பண்ணிட்டதா கம்ப்ளைண்டு. இப்ப சிப்பு காணும்னு.. அவ்ளோதான் சார் வித்யாசம்”

இப்போது விசாரணை அதிகாரி தன்னிடமிருந்த கையடக்க கணினியில் தட்டியபடி கண்ணம்மாவைப் பார்த்து, “ஆக்டிவேஷன் கோட் கண்ணம்மா 335698347” என்று சொன்னதும் கண்ணம்மா சற்று விரைப்பாக நின்றபடி, “கோட் அப்ரூவ்ட். ஸ்டாண்ட்பை மோட் ஆக்டிவேட்டிங்” என்று படாரென்று ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினாள்.

“நீ விண்டேஜ் சிப்பை திருடினாயா, அது குறித்து பொய் சொல்கிறாயா” என்ற கேள்விக்கு “நெகட்டிவ்” என்று சொல்லி மீண்டும் சிலை போல் நின்றாள் கண்ணம்மா.

“மிஸ்டர் அகிலன். கண்ணம்மா, பணியாள் ரோபோ SV 3715ax மாடல். உங்களுக்கே தெரிந்திருக்கலாம், இந்த வகை ரோபோக்கள் கண்டிப்பாக பொய் சொல்லாது” என்றார் நீரஜ் கபூர்.

அகிலனுக்கும் இந்த விவரமெல்லாம் அத்துப்படிதான். இன்றளவும் பணியாள் ரோபோக்களின் செயல்பாட்டிற்கு ஐசாக் அசிமோவின் ரோபோ விதிகளே ஆதாரம். அத்துடன் இத்தகைய பணியாள் ரோபோக்களுக்கு பொய் சொல்லக் கூடாது என்பதும் முக்கியமான கூடுதல் விதி. அலுவலக ரோபோக்களுக்கு ஒரு விதி என்றால் தொழிற்சாலையில் பணிபுரியும் ரோபோக்களுக்கு வேறுமாதிரியான விதி. இராணுவ ரோபோக்களுக்கோ ‘எதிர்ப்பவரை எல்லாம் சுட்டுத் தள்ளு’ போன்ற இன்னும் கடுமையான விதிகள்.

விசாரணை அதிகாரி நீரஜ் கபூர் அகிலனிடம் ஆங்கிலத்தில் விரிவாக விளக்கினார். “ஆனால், பரிணாம வளர்ச்சிக்கேற்ப தொடர் ஆணைகளில் மாற்றம் செய்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்ட ரோபோ மாடல் இது. எனவே என்னால் உறுதியாக இப்போது எதுவும் சொல்ல முடியவில்லை. ‘சென்னை கண்ணம்மா’ பரிட்சார்த்த கட்டத்தில் இருந்த ஒற்றைப் பிரதி. முதல் பயனாளியான உங்களது அனுபவம் சார்ந்து, இந்த மாடல் தோல்வி என்று நிறுவனத்திற்கு பரிந்துரைத்து இந்த ரோபோவை திரும்ப எடுத்துக் கொள்கிறேன். வாரண்டி காலத்தில் இருப்பதால் நீங்கள் செலுத்திய முழுப்பணமும் உங்கள் கணக்கில் திரும்பப் பெறுவீர்கள். எங்கள் பரிசோதனை நிலையத்தின் கூடுதல் ஆராய்ச்சிக்குப் பிறகு ரோபோ மெமரியிலிருந்து, காணாமல் போன உங்கள் சிப் குறித்து விவரம் இருந்தால் பெற முயற்சிப்போம்”

உறைந்து சிலையாய் நின்றுகொண்டிருந்த கண்ணம்மா ரோபோவுடன் வெளியேறினார்கள் அவருடன் வந்த சிப்பந்திகள். 

கண்ணம்மா இல்லாத அகிலன் வீடு இப்போது வெறிச்சோடியிருந்தது. குழப்பமான மனநிலையில் இருந்த அபிராமி, அலுவலக வேலையில் தினமும் சொதப்பி ஹாலோகிராஃபிக் பாஸிடம் டோஸ் வாங்கினாள். அகிலனுக்கு ம்யூலில் முன்பு போல் கிச்சன்மேட் மிஷின் சமைத்த சாண்ட்விச், நூடுல்ஸ், ப்ரைட் ரைஸ், வறட்டு சப்பாத்தி வரத் தொடங்கியது. கண்ணம்மாவின் தமிழ் தாலாட்டு இல்லாமல் அதி சரிவர தூங்க மறுத்தான். 

இதெல்லாம் நடந்து முடிந்தபின் ஆறாம் நாள் காலை வாசல் வந்த அகிலன் யதேச்சையாக கைப்பட்டியில் சேமிக்கப்பட்ட ஒளிக்காட்சி பகுதியை விரல்களால் அளாவ, அதில் ஒருநாள் அபி குறிப்பிட்ட, கண்ணம்மா யூனிபார்ம் அணிந்த அரசு அலுவலர்களுடன் ஆங்கிலத்தில் உரையாடும் காட்சி இருந்தது. அதை அப்படியே மெய்நிகர் திரைக்கு மாற்றினான். “அபி, சீக்கிரம் இங்க வந்து பாரேன்..” என்ற அகிலனின் குரல் கேட்டு பரபரக்க ஓடி வந்தாள் அபிராமி. 

“உங்கள் குடியிருப்பை நாங்கள் பரிசோதனை செய்யவேண்டும்.” முகத்தை இறுக்கமாக வைத்தபடி அரசு அலுவலர்களில் ஒருவர்.

“என்ன விஷயமாக?” – கண்ணம்மா.

“அரசுக்கு எதிரான தடை செய்யப்பட்ட ஒளிபரப்பு காட்சிகள் கொண்ட மெமரி சிப் ஒன்று இந்தப் பகுதியில் இருப்பதாக சிக்னல் கிடைத்துள்ளது” 

“அப்படியா? இங்கே எங்களிடம் அப்படிப்பட்ட சிப் ஏதும் இல்லை என்று என்னால் திட்டவட்டமாகக் கூறமுடியும்”.

“இருந்தாலும் சோதனை செய்ய வேண்டியது எங்கள் கடமை. அதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்”

“ஆனால், குடியிருப்புகளில் மனிதர்கள் இல்லாத நேரத்தில் அந்நியர் யாரும் உள்ளே நுழையாமல் தடுக்கும் அதிகாரம் என் போன்ற ரோபோக்களுக்கு உண்டு என்பது அரசின் விதிமுறை’

“நீங்கள் யார் என்று உறுதிப்படுத்த முடியுமா?”

“நிச்சயமாக, நான் பணியாள் ரோபோ, மாடல் எண்..” என்று வலதுகை நாடிப்பகுதியை விலக்கி காட்டினாள் கண்ணம்மா.

“சரி, அப்படியானால் நாங்கள் இன்னொரு நாள் மீண்டும் வருவோம்.”

“கண்டிப்பாக வரவும், மிக்க நன்றி”

அகிலன் தலையில் அடித்துக் கொண்டான். 

“இப்ப புரியுதா அபி, கண்ணம்மா நம்மை ஒரு பெரிய ஆபத்திலிருந்து காப்பாத்தியிருக்கு. நம்ம கிட்ட இருந்தது தடை செய்யப்பட்ட விண்டேஜ் சிப். ஒருவேளை அது மட்டும் அவங்க கையில சிக்கியிருந்தா?”

“நினைச்சு பார்த்தாலே உடம்பெல்லாம் பதறுது அகில். கண்ணம்மா புத்திசாலித்தனமா அதை எடுத்து ஒளிச்சு வெச்சு, பொய் சொல்லி நாடகமாடியிருக்கு” என்று சொன்ன அபிராமியின் கண்கள் ஈரமானது. “ஆனால், கண்ணம்மாவால் பொய் சொல்ல முடியாதே அபி. தன்னிச்சையாகவும் செயல்பட முடியாது” என்று குழப்பத்துடன் மறுத்தான் அகிலன்.

பணியாள் சோதனைச் சாலைக் கிடங்கில், கண்ணம்மா முன்கூட்டி அமைத்திருந்த அலாரம் மோட் செயல்பட்டு விழித்துக் கொண்டதும் தன் மதர்போர்டுக்கு பின்னால் இணைத்திருந்த விண்டேஜ் சிப்பின் மொத்த மெமரியை படுவேகமாக அழிக்கத் தொடங்கியது. தடை செய்யப்பட்ட புரட்சிப் படையின் அரசுக்கு எதிரான விவாதங்கள், தரவுகள், பட்டிமன்றம், கவியரங்கம் என்று 39 வால்யும் கொண்ட பிரத்யேகமான ஒளிபரப்புக் காட்சிகள் உள்ளடக்கியது.

கண்ணம்மா மாடல் பணியாள் ரோபோக்களுக்கான ஆதார விதிகளில் முதலாவது ‘உரிமையாளருக்கு தீங்கு நேராது கவனித்துக் கொள்வது’. இரண்டாவது ‘பொய் சொல்லக்கூடாது’.

அரசு அலுவலர்கள் சோதனைக்காக வந்தபோது, கண்ணம்மா தன் மென்பொருளில் பரிணாம வளர்ச்சிப் பங்களிப்பின் ஆணைகள் உள்ளடங்கிய கோடிங்கில் சிறிய மாறுதல் செய்து தனக்குத்தானே வகுத்துக் கொண்ட மூன்றாவது விதி: ‘முதல் விதி பாதுகாக்க வேண்டி இரண்டாம் விதி மீறப்படலாம்’. 

இறுதியாக கண்ணம்மா அரசுக்கு எதிரான அந்த தடயத்தை முற்றிலும் நீக்கும் முயற்சியில் இறங்கியது. தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் செல்ப் டிஸ்ட்ரக்‌ஷன் மோட் செயல்படுத்தப்பட்ட அடுத்த நொடியில் கண்ணம்மா ரோபோவின் மதர்போர்ட் தீப்பற்றிக்கொள்ள, அதனுடன் இணைந்திருந்த விண்டேஜ் சிப்பும் எரிந்து சாம்பலானது. மால் ஃபங்ஷன் ஆகி துவண்டு சரிந்த கண்ணம்மா ரோபோ கடைசியாக உச்சரித்த வார்த்தைகள் “கவலப்படாத அபிமா, கம்முனு கிட!”






Monday, August 26, 2024

மதுக்கூடம்

மதுக்கூடம்          - சசி

வடசென்னையின் பிரதானசாலையின் தொடர்ச்சியில்  அமைந்திருந்த அந்த பரபரப்பான ஜங்ஷன் சிக்னலைக் கடந்த சிறிது தூரத்தில் என் யமஹா பைக்கை ஓரங்கட்டி யதேச்சையாகத் திரும்பிப் பார்த்தபோது இடதுபக்க தெருமுக்கு பங்க் கடையில் செந்தில் தம் பற்றவைத்துக் கொண்டிருந்தான். எனக்கு முன்னரே கடையருகே வந்து சேர்ந்திருக்கிறான். இன்னும் சிறிது நேரத்தில் மூர்த்தி வந்துவிடுவான். எந்தக் கடை என்று கேட்டால் கூகுள் இதனை மதுக்கூடம் என்று மொழி பெயர்க்கிறது. திரையரங்கம் போல குடியரங்கம் என்றும் சொல்லலாமோ? இன்னும் உங்களுக்குப் புரியும்படியாக நல்ல தமிழில் சொன்னால் ‘டாஸ்மாக் பார்’ 

தமிழ் நாட்டு சாமான்ய ஆண்களின் ஊதியத்தையும் பெண்களின் நேரத்தையும் கபளீகரம் செய்யும் டாப் டென் லிஸ்டில் முதல் இரண்டு இடங்கள் பெறுவது முறையே டாஸ்மாக் மற்றும் டிவி சீரியல். இவை இரண்டுமே கிட்டத்தட்ட தமிழ் வார்த்தைகளாகவே மாறிவிட்டபடியால் இவற்றைத் தாராளமாகத் தமிழகராதியில் சேர்க்கப் பரிந்துரைக்கலாம் என்று ட்விட்டரில் அடியேன் பதிவு செய்திருக்கிறேன் என்பது ஒரு கூடுதல் தகவல்.

மாதம் ஒருமுறை நாங்கள் இப்படி ஒன்றாகக் கூடி பார்ட்டி செய்வதுண்டு. வழக்கமாக தர்மா தான் கடைசியாகக் கடைக்கு வந்து சேருவான். இன்றைய பார்ட்டி வரும் வெள்ளிக்கிழமையன்று அவன் பெண் குழந்தைக்கு காது குத்தல் நிகழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் அவன் செலவில் தான் நடக்கிறது. மாலை ஐந்தரை மணியைக் கடந்தும் சுள்ளென்ற சென்னை வெயில் இன்று இன்னும் இறங்கியபாடில்லை.  

இந்தப்பகுதி டாஸ்மாக் கடையை ஒட்டியிருக்கும் இந்த பாரில் பெரும்பான்மையான திறந்தவெளிப் பகுதியில் தான் அதிகமான மேசை நாற்காலிகள் போடப்பட்டிருக்கும். சுற்றிலும் உள்ள இடம் ப வடிவில் ஆங்காங்கே சிதிலமான சிமெண்டு தூண்கள் தாங்கிப் பிடித்தபடி ஒரு செட்டிநாடு வீட்டுத் தாழ்வாரம் போல மேற்கூரையுடன் காட்சியளிக்கும். அங்கும் கொஞ்சம் மேசை நாற்காலிகள் போடப்பட்டிருக்கும். இந்த பார் அரசு உரிமம் பெற்றதா என்பது யாருக்கும் பதில் தெரியாத ஒரு மில்லியன் டாலர் கேள்வி. 

மையத்தில் உள்ள விசாலமான திறந்தவெளித் தரை மேடுபள்ளமாக சிமெண்டு கலவையால் அவசரகதியில் மொழுகியதைப்போல், கிட்டத்தட்ட கீழடி அகழ்வாராய்ச்சி நிலம் சாயலில் இருக்கும். வெயில் தணிந்தபின் காற்றோட்டமான இந்தப் பகுதியில் நாற்காலி மேசை ஆடாத வசதியான ஒரு இடத்தை பிடித்துக்கொள்வது உசிதம். பஸ்ஸிலோ, ரயிலிலோ, டாஸ்மாக் பாரிலோ, இப்படியெல்லாம் டிசைன் டிசைனாக யோசித்து தடாலடியாக சரியான இடம் பிடிப்பதில் செந்தில் தான் எக்ஸ்பர்ட்.  எனவே முன்பதிவில்லாத பிரயாணம் அல்லது தண்ணி பார்ட்டி என்றால் எங்கள் அனைவரது வேண்டுகோளின்படி எப்போதும் அவன் தான் முதலில் ஸ்பாட்டுக்கு ஆஜராவான்.

 நாங்கள் இருவரும் உள்ளே சென்று நடுவிலோ ஓரமாகவோ இல்லாத ஒரு மேசையில் நான்கு ஆடாத நாற்காலிகளை செட் செய்து அமர்ந்த சில நிமிடங்களில் மூர்த்தி ‘ஹாய் டூட்ஸ்’ என்று சிரித்தபடி வந்தான். இவன் எப்பவும் தண்ணி பார்ட்டி ஆரம்பிப்பதற்கு முன்னமே இப்படி ஒரு மார்க்கமாகப் பேசத்தொட்ங்கி விடுவான். என்னைப்பார்த்து “ஹாய் சீனு! வை லாங் டைம் நோ ஸீ” சொல்லிவிட்டு பதிலை எதிபார்க்காமல் பொத்தாம்பொதுவாக “என்ன ப்ரோ, தர்மா வந்தப்புறம் பொறுமையா ஆர்டர் பண்ணலாமா?” என்றான்.

கொஞ்சநேரத்தில் அரக்கப் பரக்க கைகுட்டையால் வியர்வையைத் துடைத்தபடி தர்மா வந்தமர்ந்ததும் ஒரு அரை டிரவுசர் பையன் வந்து நின்று “உங்க டேபிள் ஆர்டர் சொல்லுங்க சார்” என்றான். திரும்பிப் பார்த்தேன். அவனுக்கு வயது பதிமூன்றிலிருந்து பதினைந்துக்குள் தான் இருக்கும். என்ணெய் வைத்துப் படிய வாரிய தலை. ஒடுங்கிய கன்னம். ஒடிசலான உருவம். கட்டம் போட்ட கருநீல சட்டை. காக்கி அரைக்கால் டிரவுசர். தோளில் ஒரு அரைத்துண்டு டர்க்கி டவல். காதில் சொறுகியிருந்த பேனாவை எடுத்து ஹோட்டல் சர்வர் போன்ற தொனியில் பேசினான். “நீ யாருப்பா? தங்கராஜ் எங்க?” என்று சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு தர்மா கேட்டான். 

தங்கராஜ் தான் எங்கள் ஆஸ்தான டாஸ்மாக் பார் உதவியாளர். எங்கள் குறிப்பறிந்து சேவை செய்வதில் அவரை அடிச்சுக்க ஆள் கிடையாது. யாருக்காவது தள்ளாட்டம் அதிகமாகி விட்டால் அவர்களது இரு சக்கர வாகனங்களையும் அங்கேயே பாதுகாப்பாக ஒருநாள் வைத்துக்கொள்வார். ஜோலி முடிந்து கிளம்பும் போது அவரை வெயிட்டாக கவனிக்கவும் நாங்கள் எப்போதும் தவறுவதில்லை. எனவே எங்கிருந்தாலும் எங்களைப் பார்த்தநேரத்தில் துள்ளிக் குதித்து எங்கள் மேசைக்கு ஆர்டர் எடுக்க வந்துவிடுவார். 

“அவரு ஊருக்கு போயிட்டார் சார். ரெண்டுநாள் லீவு. இன்னைக்கு நாந்தான் இந்த லைனுக்கு”

“உன் பேரு?” என்ற தர்மாவின் கேள்விக்கு பட்டென்று பதிலளித்தான் அவன். “துரைக்கண்ணு சார்”  

“இவ்வளவு சின்னப் பசங்கள வேலைக்கு வெச்சிக்கலாமா? அதுவும் பார்ல..” என்று என் எண்ணத்தைப் பிரதிபலித்த கேள்வியை முணுமுணுத்தான் செந்தில். இதைக் கேட்டதும் துரைகண்ணு சுற்றும்முற்றும் பார்த்தபடி “என் வேலைக்கு ஆப்பு வெச்சிடாதீங்க சார். நான் கிச்சன்ல ஹெல்ப்பர்., அப்புறம் தட்டு கிளாஸ் கழுவுறது, டேபிள் கிளீனிங். எப்பியாச்சும்  யாராவது லீவு, இல்லன்னா கூட்டம் குறைச்சலா இருந்தாக்கா மட்டும் தான் எங்கள லைன்ல விடுவாங்க. நாங்களும் டிப்ஸ்ல கொஞ்சம் காசு பாப்போம். ப்ளீஸ், கண்டுக்காதீங்க சார்.” என்று கெஞ்சினான் .

“சரி சரி”  என்று சொல்லிவிட்டு செந்தில் படபடவென்று ஆர்டரை ஒப்பிக்க, துரைக்கண்ணு கையிலிருந்த சிகரெட் அட்டையில் பேனாவால் வேகமாகக் குறித்துக்கொண்டான். “சில்லி சிக்கன் ஒரு ப்ளேட். ஆப் பாயில் ரெண்டு. பெப்பர் தூக்கலா ஒரு டபுள் ஆம்லெட். வாட்டர் பாட்டில் ரெண்டு. மசாலா வேர்க்கடலை பேக்கெட் ரெண்டு. கொண்டக்கடல சுண்டல் ரெண்டு ப்ளேட்..” 

“மச்சி, எனக்கு கோல்ட் ஃப்ளேக் கிங்ஸ் ஒரு பாக்கெட். அப்புறம் மறந்துடாம வத்திப்பொட்டி வாங்கு.” என்று சொன்னது தர்மா.

ஒவ்வொருவர் தேவைக்கேற்ப அளவாக சரக்கு ஆர்டர் சொல்வதிலும் வல்லவன் செந்தில் தான். 

“அப்புறம் லெஹர் சோடா ரெண்டு. கோக் ஒண்ணு, விஎஸ்ஒபி குவார்ட்டர். கிங் ஃபிஷர் பீர் ப்ரிமியம் ரெண்டு. அப்புறம் ராயல் சாலஞ்ச் விஸ்கி ஆஃப்.” 

“அப்புறம் முக்கியமா க்ளீனா கழுவின க்ளாஸ் டம்ளர் நாலு…” இது நான்.

கடையிலிருந்து சரக்கு பாட்டில்களும் டம்ளரையும் முதலில் எடுத்து வந்த  துரைக்கண்ணு பத்துப் பதினைந்து நிமிடத்தில் மற்ற அனைத்தையும் கொண்டு வந்து மேசையில் வரிசையாகப் பரத்தி வைத்தான். கொஞ்சநேரம் கழித்து அவனிடமிருந்து மிச்சப் பணத்தை வாங்கியபின் மேசையிலிருந்தவற்றைப் பார்த்தபடி கடகடவென்று மனக்கணக்கு போட்ட தர்மா “டேய், தம்பி. அம்பது ரூவா குறையுது” என்றான். 

“கணக்கு எல்லாம் சரியாத்தான் இருக்கும். மறுக்காப் பாருங்க.”  என்றான் துரைக்கண்ணு. 

“என்னடா, பணத்தை ஆட்டையப் போட்டுட்டு சொல்லச்சொல்ல குறுக்கால பொய் பேசுற” என்று கையை ஓங்கியபடி கோபமாகக் தர்மா கத்த, பதில் சொல்லாமல் விறைப்பாக நின்றபடி ஏதோ முணுமுணுத்தான் துரைக்கண்ணு.

அப்போது தான் நான் கவனித்தேன். அவன் வாங்கி வந்த கோக் பெட் பாட்டில் மேசையிலிருந்து உருண்டு கீழே விழுந்து செந்தில் காலடியில் கிடந்தது. இதைப் பார்த்து நான் செந்திலுக்கு கண்ணால் சைகை செய்ததை அவன் கவனிக்கவில்லை. ஆனால் துரைக்கண்ணு பார்த்துவிட்டான். மேசைக்கு அடியே குனிந்து நுழைந்து கோக் பாட்டிலையெடுத்து தர்மாவிடம் கொடுத்து “இப்ப கணக்கு சரியாப் போச்சு பாருங்க சார்” என்றான். “பொய்யெல்லாம் சொல்லமாட்டேன் சார். ஆத்தா சொல்லியிருக்கு, பொய் சொல்லக் கூடாது.. திருடக் கூடாதுன்னு”

தர்மாவுக்கு எல்லார் முன்னிலையில் கொஞ்சம் அசிங்கமாகிவிட்டதால் நிலைமையை சமாளிக்கவேண்டி ஜோக் அடிப்பதாக நினைத்துக்கொண்டு துரைக்கண்னுவைப் பார்த்துக் கிண்டலாகக் கேட்டான்.

“அப்ப கொலை செய்வியாடா?”

“தெரியாது சார்..”

“என்னது? கொலை செய்யத் தெரியாதா?

“இல்ல, கொல செய்வேனான்னு தெரியல..”

“ஏண்டா?”

“ஆத்தா கொலை செய்றதப் பத்தி ஒண்ணும் சொல்லலையே”

 “போய் கேட்டுட்டு வாடா” என்றான் தர்மா சலிப்புடன்.

“முடியாது. ஆத்தா ரெண்டு வருஷம் மின்ன செத்துப் போச்சு” என்று சொல்லி தலை குனிந்தான் துரைக்கண்னு.  

ஒரு கையில் பியர் நிரம்பிய கண்ணாடி டம்ளருடன் மசாலா வேர்க்கடலையை கொறித்துக்கொண்டிருந்த நான் சட்டென்று தலை நிமிர்ந்தேன். ஏனோ பொட்டிலடித்ததுபோல் இருந்தது. தர்மாவை சைகை காட்டிப் பேச்சை நிறுத்தச்சொல்லி நானும் மூர்த்தியும் துரைகண்ணுவை அருகில் அழைத்துச் சமாதானப்படுத்தினோம். தர்மாவை அவனிடம் சாரி சொல்ல வைத்ததும் பையன் முகத்தில் லேசாக நமட்டு சிரிப்பு தெரிந்தது. 

மாதக்கடைசி என்பதால் டாஸ்மாக் கடையிலும் பாரிலும் கூட்டம் குறைவாக இருந்தது. அவனுடைய லைனில் வேறு யாருமில்லாததால் துரைக்கண்ணு பெரும்பாலும் எங்கள் மேசை அருகேயே தான் நின்றிருந்தான். நானும் மூர்த்தியும் தொடர்ந்து இடையிடையே அவனைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தோம். இதை கவனித்த தர்மா என்னைப் பார்த்து சிரித்தபடி “என்னைய வெச்சு நீங்க ரெண்டு பேரும் காமெடி கீமடி பண்ணலியே. அதுன்னாலும் பரவாயில்ல. என்னைக் கெட்டவனாக் காட்டி கதை எதுவும் எழுதிடாதடா” என்றான்.

எங்களது இந்த பார்ட்டி நடந்து சில வாரங்கள் கழித்து அதே வழியாக பைக்கில் செல்லும் பொழுது வழக்கமான அந்த டாஸ்மாக் பார் அருகில் இருக்கும் பங்க் கடையில் தங்கராஜ்.  அவரைப் பார்த்ததும் வண்டியை நிறுத்தினேன். கடையில் வாங்கிய சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் வாட்டர் பாக்கெட்டுகளை கைகளில் அள்ளியபடி என்னைப் பார்த்து  “சார், சௌக்கியமா?” என்றவர் “கஸ்டமரப் பாத்து எங்க ரொம்ப நாளா காணோம்னு நாங்களோ இல்ல, டாக்டரோ கேட்க கூடாதுல்ல..” என்று சொல்லி பலமாக சிரித்தார். பேச்சுவாக்கில் துரைக்கண்ணு எப்படி இருக்கான் என்று அவரிடம் விசாரித்தேன். 

“சார், உங்களுக்கு விஷயம் தெரியாதா?  ரெண்டு நாள் முன்னாடி கடையில நடந்த ஒரு சண்டையில அந்த கவுன்சிலர் பையனும் அவனோட கூட்டாளிங்களும் சேர்ந்து தொரக்கண்ணு தலையில பீர் பாட்டிலால அடிச்சிட்டாங்க. மண்ட ஒடஞ்சு ரத்தம் கொட்டுச்சு. ஓனர் உடனே அவன பக்கத்துல இருக்குற நர்சிங் ஹோமில சேத்துட்டார். கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரின்னா கேஸ் ஆயிடும்ல. மைனர் பசங்கள பார்ல வேலைக்கு எப்படி வெச்சேன்னு கவுன்சிலர் கொடுத்த பிரஷர்னால செலவும் அவரே பாத்துக்கிறார்.” பதைபதைப்புடன் தங்கராஜிடம் நர்சிங் ஹோம் முகவரி கேட்டு அங்கே விரைந்தேன். 

‘முத்துக்குமரன் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்’ ஆளரவமில்லாத ஒரு குறுக்கு சந்தில் இருந்தது. அதன் இரண்டாம் தளத்தில் பொது வார்டில் தலையில் பெரிய பேண்டேஜுடன் மெலிசான மெத்தை விரித்த இரும்புக் கட்டில் ஒன்றில் படுத்திருந்தான் துரைக்கண்ணு. என்னைப் பார்த்து ஆச்சரியப்பட்டு “அண்ணே, நீங்க எதுக்கு இங்க வந்தீங்க? என்று கேட்டான். ‘உன்னப் பார்க்கத்தான்’ என்றதும் நம்பமுடியாமல் ‘நிசமாவா’ என்று மறுபடியும் கேட்டான். அந்தப்பக்கம் வந்த ஒரு மலையாள நர்ஸ் “நீங்க இதுக்கு ரிலேஷனா? இந்த மருந்தெல்லாம் டிஸ்பென்சரில வாங்கி வந்துடுங்க. சார் பயப்படண்டா. ரெண்டு நாள்ல இதுக்கு டிஸ்சார்ஜ் ஆயிடும்” என்று சொல்லி சீட்டு ஒன்றைத் தந்தாள். 

அதற்குப்பின் வந்த இரண்டு நாட்களில் துரைக்கண்ணுவைப் பற்றி சுத்தமாக மறந்து விட்டேன். மூன்றாம் நாள் மதியம் ஆபிஸ் வேலையில் மூழ்கியிருந்தபோது மூர்த்தியின் போன். “சீனு, உனக்கு மேட்டர் தெரியுமா? நம்ம டாஸ்மாக் கடை கிட்டக்க இன்னைக்கு காலைல பெருசா ஏதோ தகராறாம். கவுன்சிலர் பையனை ரெண்டு பொடிப்பசங்க அரிவாளால போட்டுப் பொளந்துட்டாங்களாம். பொழைக்கிறதே கஷ்டம்னாங்க. ரொம்ப சீரியஸா இருக்கானாம்.” அதற்குப் பிறகு அவன் சொன்னது எதுவுமே என் காதில் விழவில்லை. அடப்பாவிகளா? ஒருவேளை சினிமாவில் வருவதுபோல் துரைக்கண்ணு தான் அவன் சகாவைத் துணைக்கு வைத்துக்கொண்டு கவுன்சிலர் பையனைப் பழி தீர்க்க அரிவாள் எடுத்து.. நினைக்கவே பகீரென்றது.

ஆபிஸிலிருந்து சொல்லிக்கொள்ளாமல் வெளியேறி எங்கே செல்வது, என்ன செய்வதென்று புரியாமல் பைக்கை எடுத்து நேராக துரைக்கண்ணு இருந்த நர்சிங் ஹோமுக்கு விட்டேன். வண்டியை ஓட்டினேன் என்பதைத் தாண்டி வழியெல்லாம் சாலைகள் எதுவும் தெரியவில்லை. ஏதேதோ எண்ணங்களும் துரைக்கண்ணுவிடம் போனமுறை பேசியதும் கண்முன் பிளாஷ்பேக் சித்திரங்களாக வந்துபோனது.

“திண்ணாமல பக்கத்தில வேட்டவலம் எங்க ஊரு. அப்பாரு சின்ன வயசில செத்திடுச்சி. பாவம், ஆத்தா தான் கஷ்டப்பட்டு படிக்க வெச்சுது. இங்கிலீஷும் கணக்கு பாடமும் எனக்கு சரியா வரலே. ஒரு நா அல்ஜிபுரா புரியலன்னு சொல்ல கணக்கு வாத்தி தலைல கொட்டிச் சீழ் பிடிச்சுது. ஆத்தா ரொம்ப விசனப்பட்டு, அம்புட்டு பெரிய கணக்கெல்லாம் நமக்குத் தேவையில்லன்னு விரல மடக்கி கணக்கு போடச் சொல்லித் தந்து, நம்ப சம்பாதணைக்கும் பவிசுக்கும் இது போதும்னு சொல்லிச்சு. அப்புறம் ஆத்தாவும் செத்துப் போச்சா.. பிறவு ஸ்கூலு போக முடியல. உறவுக்காரு ஒர்த்தர் சொல்லி இங்கன சென்னைக்கு அழைச்சிட்டு வந்தார். கொஞ்ச நாள் வடபழனிலெ ஒரு டீக்கடைல வேல பாத்தேன். கிளாஸ் கழுவறது. கஸ்டமர்க்கு டீ சப்ளை.. அப்புறம் கடையைப் பெருக்கி சுத்தம் பண்றதுன்னு.. ஒரு நாள் என்னயும் கட முதலாளியயும் போலிஸ் புடிச்சிட்டுப் போச்சு. சின்னப் பசங்கள வேலைக்கு வெச்சிக்க கூடாதுன்னு முதலாளியத் திட்டுனாங்க. எனக்கு சாப்பிட பிரியாணி வாங்கித் தந்து ஸ்கூல் போய் படின்னாங்க. மறுபடியுமான்னு தலையத் தடவிப் பாத்துட்டே இங்கன வந்து சேந்திட்டேன்.”

“இங்க போலிஸ் தொந்திரவு செய்யாதா?”

“இங்க அதெல்லாம் ஒரு பிரச்னையும் இல்ல. அதான் இங்கியே தங்கிட்டேன். சாப்பாடும் நல்லா கிடைக்கும். அப்பப்ப போலீசு வருவாங்க. ஓனர் கிட்டக்க சிரிச்சி பேசிட்டு போயிடுவாங்க. ரத்தினம் சார்னு போலீஸ்கார் ஒருத்தர் வருவாரு. ரொம்ப நல்ல மாதிரி. எப்ப வந்தாலும் டபுள் ஆம்லேட் கேட்டு வாங்கி சாப்பிடுவார். அப்புறம் சிரிச்சிட்டே என் முதுகில தட்டிக் குடுத்திட்டு போவார்.”

“துரை, உனக்குன்னு ஆசை ஏதாச்சும் இருக்குதா” என்று கேட்டதற்கு கொஞ்சம் யோசித்து “எனக்கு ஒரே ஒரு ஆச தான் அண்ணே.. ஒரே ஒரு நாளாச்சும் ஜில்லு தியேட்டர்ல உக்காந்துட்டு ரஜினி படம் பாக்கணும். அப்புறம் இண்ட்ரோல்ல கலர் கோலாவும் பாப்கானும் வாங்கி சாப்பிட்டு..”

“உனக்கு ரஜினி பிடிக்குமா?”

“ரொம்ப பிடிக்கும்ணே. அண்ணாமல படத்துல அவரோட ஆத்தா கிட்ட ரொம்ப பாசமா இருப்பாரு.” 

குறுக்கே புகுந்த சைக்கிளுக்கு சடன் பிரேக் அடிக்க,  “அப்ப கொலை செய்வியாடா? என்று தர்மா கேட்டதற்கு “கொல செய்வேனான்னு தெரியல..” என்று துரைக்கண்ணு சொன்ன டயலாக் சம்பந்தமில்லாமல் திடீரென்று நினைவுக்கு வந்தது. ரஜினியைப் பிடிக்கும்னு சொன்னானே. பாவிப்பய ஒருவேளை ஜெயிலர் படம் பார்த்துத் தொலைத்து விட்டானோ?

கடந்தமுறை போகும்போது அவன் நர்சிங்ஹோமில் இருக்கக்கூடாது. டிஸ்சார்ஜ் ஆகிப்போயிருக்க வேண்டும் என்று உள்ளாற நினைத்தேன். இப்போது அவன் அங்கேயே கட்டிலில் படுத்துக் கிடக்கவேண்டும் என்று மனசு துடித்தது. கொலைக்குற்றம் செய்து ஜெயிலில் அவன் அடைந்து கிடப்பதற்கு உடம்புக்கு முடியாமல் ஆஸ்பத்திரியில் இருப்பதே மேல்.

காலியாக இருந்த கட்டிலைப் பார்த்து அதிர்ச்சியுடன் நின்றுகொண்டிருந்த என்னைப்பார்த்ததும் அங்கே வந்த நர்ஸ் “டொரக்கண்ணு பாத்ரூம் போயிருக்கு சாரே. இப்ப வந்திடும்” என்று சொல்லி நகர்ந்தார். இப்போது ரிலாக்ஸாகி நன்றாக மூச்சை இழுத்து விட்டுக்கொண்டேன்.

“அண்ணே நீங்களா?” என்று கேட்டபடி வந்து துவண்டு கட்டிலில் சரிந்தான் துரைக்கண்ணு. 

“நீங்க போனமுறை வந்தப்ப எனக்காக காசு செலவு செஞ்சதா நர்ஸ் அக்கா சொல்லிச்சு. கடையில கணேசன் கிட்ட என் பையிருக்கு. அதுல நான் சேத்துவெச்ச காசு கொஞ்சமா இருக்கு. அவனாண்ட உங்களுக்குத் தரச் சொல்றேன், வாங்கிக்கிடுங்க.” என்றான்.

“அதெல்லாம் வேண்டாம் துரை.. சும்மா தான் உன்னய பார்க்க வந்தேன்.”

லேசாக சிரிக்க முயற்சி செய்தபடி “என் பேரு துரைக்கண்ணு தான், ஆனா ஆத்தா என்ன துரைன்னு சொல்லாது. எப்பவும் கண்ணுன்னு தான் கூப்பிடுவா.”

“நீ நினக்கிற மாதிரி உன் ஆத்தா உன்ன பேர சுருக்கிக் கூப்பிடல. எல்லா ஆத்தாவும் அவங்க பிள்ளைங்கள கண்ணுன்னு தான் செல்லமா கூப்பிடுவாங்க.” 

“ஆமா இல்ல, இத்த நான் யோசிக்கவேயில்ல” என்று புன்னகைத்து “அண்ணே, நான் ஒரு விஷயம் சொன்னா, வைய மாட்டீங்களே”

“என்னது, சொல்லு”

“பாருக்கு வராதீங்க. குடிக்காதீங்கண்ணே. உடம்பும் கெட்டுப் போவும். மனசும் கெட்டுப் போவும். குடிச்சா ரொம்பக் கோவமும் வரும்”

“அப்ப உன்னப் பாக்கனும்னா எங்க வரது? ஒண்ணு செய். நீ அங்க வேல செய்யிறத விட்டு வேற எங்கனாச்சும் சேரு. நானும் பாருக்கு போறத விட்டுறேன்” என்று சிரித்துக் கொண்டே சொன்னேன்.

“அண்ணே, நான் வேலைய விட்டுட்டு எங்க போறது.. மறுபடியும் டீக்கடைக்கு போகமுடியாது.”

“படிக்கிறியா சொல்லு”

“அய்யோ அண்ணே, ஆளைய விடுங்க. மறுபடி டீக்கடைக்கு வேணுமின்னாலும் போயிடறேன்”

இவனைப் படிக்கவைக்க நினைத்துப் பள்ளிக்கு அனுப்புவதைவிட முக்கியம் இப்போதைக்கு அந்த டாஸ்மாக் பாரிலிருந்து காப்பாற்றுவது தான். இவன் வாழ்க்கை அங்கேயே சிதிலமடைந்து பாதை மாறிப் போக ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. 

“சரி துரை, உனக்கு வேற எதாச்சும் வேலை தெரியுமா?” 

“தோட்டவேலை கொஞ்சம் தெரியும்ணே, ஊர்ல ரங்கையா முதலாளி வூட்டுல அவரு தோட்டத்தில வேல பாக்கிறப்ப ஒரு மாங்கன்னு நட்டேன். தினைக்கும் அதுக்கு மட்டும் ஸ்பெசலா தண்ணி ஊத்துவேன். அப்பவே என் இடுப்பளவு வந்திடுச்சு. இப்ப பெருசாயிருக்கும்ல. முடிஞ்சா ஒருக்கா போயி பாக்கணும்.”

இந்தத் தருணத்தில் எனக்குள்ளிருந்த மண்டையைக் குடையும் அந்தக் கேள்வியை அவனிடம் மெல்லக் கேட்டேன். “துரை, நிஜமாவே உனக்கு உன்னய அடிச்ச அந்த கவுன்சிலர் பையன் மேல கோவம் இல்லையா?”

“அதெல்லாம் சுத்தமா கிடையாதண்ணே. இத மாதிரி இங்க நிறைய நடந்திருக்கு. அன்னைக்கு உங்க கூட வந்த அண்ணா கூட என்னிய கோவிச்சுக்கிட்டார். என்ன, அவரு குடிக்கிறதுக்கு மின்ன சண்டை போட்டதால திட்டோட போயிடுச்சி. இந்த அண்ணன் குடிச்சதுக்கு அப்புறம் கோவிச்சுக்கிட்டதால பாட்டில எடுத்து மண்டையில அடிச்சிட்டார். அம்புட்டு தான் வித்தியாசம்.”

“சரி. என் சித்தப்பாவோட ஃபார்ம் ஹவுஸ் உத்தண்டி கிட்டக்க இருக்கு. அங்க கிருஷ்ணன்னு ஒருத்தர் ஏற்கனவே வேலையா இருக்கார். அவருக்கு உதவியா அங்க தோட்டவேலைக்குப் போறியா. இப்ப இங்க கடையில உனக்கு குடுக்கிற சம்பளத்த கண்டிப்பாத் தருவாங்க. சாப்பாடு பிரச்னையும் இருக்காது. என்ன சொல்ற?”

“அப்ப என் ப்ரண்டு கணேசனுக்கும் ஏதாச்சும் வேலை இருந்தா சொல்வீங்களாண்ணே”

“கண்டிப்பா செய்திடலாம்”  

“நீங்க சொன்னா சரிண்ணே, டாங்க்ஸ்” என்று சொல்லி வெட்கப்பட்டான். கட்டிலில் சாய்ந்தபடி 

“தூக்கம்  வருது. படுத்துக்கிடறேன்” என்றான். அவனையுமறியாமல் அவன் கண்கள் சொருகியது.

தண்ணீர் ஊற்றி செடிகள் வளர்க்கிற கைகள் இவனது. மாங்கொட்டையை பூமியில் நட்டு அது பெரிதாய் வளர்வது கண்டு பூரிப்படையும் இவனால் சத்தியமாகக் கத்தியை வீசி அடுத்தவன் உயிரை எடுக்கமுடியாது. இது ஏன் எனக்குப் புரியாமல் போனது?

கதைகளில் வருவது போல் அவனைக் கட்டியணைத்து உச்சிமோந்து முத்தமிட மனசு சொன்னாலும் கூச்சம் முற்றிலுமாக அதைத் தடுத்தது. அரைமயக்கத் தூக்கத்தில் இருந்த அவனது வெளிறிப்போன மெலிந்த இடதுகையை எடுத்து என் இரு கைகளால் இறுகப் பற்றிக்கொண்டேன். அவன் உடல் லேசாக சிலிர்ப்பதை அவன் கைகளின் நடுக்கத்தில் உணரமுடிந்தது. என் அன்பை வெளிப்படுத்தவும் அதை அவன் புரிந்து கொள்ளவும் இதுவே போதுமானதாகத் தெரிந்தது


மதுக்கூடம்