Saturday, May 3, 2025

ஊழிப் பெருவெள்ளம்

ஊழிப் பெருவெள்ளம்  - சசி




ஏப்ரல் 30, 2025  - சொல்வனம்

ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகாமையில் தனி வீடு” என்று தொடங்கும் தினத்தந்தியின் நாலாம் பக்க, ஆறாம் பத்தி விளம்பரம் என் கண்ணில் பட்டபோதே விதி எங்கள் வாழ்க்கையில் தாயக்கட்டையை உருட்டத் தொடங்கிவிட்டது. 

 -முதல் தவறு, அருகில் என்ற வார்த்தைக்கு எதிர்ப்பதம் தான் அருகாமை. உண்மையில் இதற்கு தூரத்தில் என்று தான் பொருள் என்று தமிழறிஞர்கள் பலர் இப்போது சொல்வதைக் கேட்டிருக்கவேண்டும். இல்லையென்றால் குறைந்தபட்சம் திருக்குறள் அதிகாரங்களின் பெயர்களாவது தெரிந்திருக்க வேண்டும். ‘ஆமை’யில் முடிகிற வார்த்தைகளெல்லாம் எதிர்ச்சொல் என்று இப்போதுதான் புரிகிறது. கொல்லாமை, கல்லாமை, வெகுளாமை.  இரண்டாவது தவறு, சைட்டைப் பார்க்க ஓசியில் ப்ளாட் ஏஜெண்ட் காரில் போகாமல் தன்னிச்சையாக கும்மிடிப்பூண்டிக்கு ரயிலில் போய் அங்கிருந்து ஆட்டோ பிடித்துப் போயிருக்கவேண்டும். 

சைட் புரோக்கர் மேகநாதன் வெள்ளை நிற இண்டிகா கார் கொண்டு வந்திருந்தார். மேற்கு மாம்பலம் போளி ஸ்டால் முன்பாக காலை ஏழு மணிக்கெல்லாம் எங்களை பிக் அப் செய்தார். ஏற்கனவே காரில் ஒரு பார்ட்டி பின் சீட்டில் அமர்ந்திருந்தார். கார்த்திக் அண்ணா, நான், அம்மா மூன்று பேரும் பின்பக்கம் அவரோடு அமர்ந்தோம், நான் கிட்டத்தட்ட கார்த்திக்  மடியில் உட்கார வேண்டியிருந்தது. நல்லவேளை, கல்பனா அண்ணியும் குழந்தையும் வரவில்லை. கும்மிடிப்பூண்டி ஸ்டேஷன் அருகே வந்ததும் முன்னால் டிரைவருக்குப் பக்கத்தில் ஹாயாக உட்கார்ந்திருந்த மேகநாதன் ஒரு டூர் கைடாகவே மாறிவிட்டார். ‘இதோ இங்க ஹாஸ்பிடல், அதோ அங்க ஸ்கூல், பக்கத்துல காலேஜ்’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். “இதெல்லாம் இங்க இருக்கா” என்று கேட்டதற்கு கூடிய சீக்கிரம் எல்லாம் அங்கே வரப்போவதாக சொன்னார். கும்மிடிப்பூண்டியிலிருந்து சைட்டுக்கு போகும் வழியில் ஓரிடத்தில் காலை டிபனுக்கு காரை நிறுத்தினார்.  இந்த நேர விரயம் மற்றும் காரில் இடநெருக்கடி போன்ற காரணங்களால் கும்மிடிபூண்டியிலிருந்து சைட்டுக்கு எவ்வளவு நேரம் என்று எங்களால் சரியாக அனுமானிக்க முடியவில்லை. எனக்கென்னவோ இது புரோக்கர் மேகநாதனின் மார்க்கெட்டிங் யுக்தி என்றே தோன்றியது.

இதற்குப் பிறகு அட்வான்ஸ் எல்லாம் கொடுத்து மனை புக்கிங் செய்தபிறகு ஒருநாள் நானும் அம்மாவும் ரயில் பிடித்து கும்மிடிப்பூண்டியில் இறங்கி ஆட்டோ ஸ்டாண்டில் விசாரித்தோம். 

“எந்த குமரன் நகர்.. இங்க மூணு இருக்கு”.  

“பிள்ளையார் கோயில் இருக்கே. அது..”

“ம்ம், ரெண்டு குமரன் நகர்ல பிள்ளையார் கோயில் இருக்கு.”

“என்ன அடையாளம் சொல்வது என்று யோசித்த எனக்கு சட்டென்று அது நினைவுக்கு வந்தது.

“ஆடிட்டர் வீடு.. வாட்டர் டாங்க்.. போட் மாதிரி இதுக்குமே, அங்க..”

“ஓ, அதுவா, பொட்டல் குமரன் நகர்னு சொல்லு”

“பொட்டலா?”

“காலியா இருக்குமில்ல, அதான்.. 250 ரூபா ஆவும்”

“என்னது 250 ஆ?”

“ஆமா, அவ்வளவு தூரம் போயிட்டு ரிட்டர்ன் காலியா வரணுமில்ல”

“நாங்க ரெண்டுமணி நேரத்துல ரிடர்ன் வந்திடுவோம்.” 

“அவ்ளோ நேரமா? ஆத்திர அவசரத்துக்கு அங்க ஒரு போன் கூட வேலை செய்யாது”

“ஏன், என் பிஎஸ்என்எல் போன் அங்க வேலை செஞ்சுதே”

“அது கவன்மெண்ட்டு போன். ஆளே இல்லன்னாலும் டவர் போடுவான். என் போனு ஏர்டெல்லு. கார்ப்பேட்டு.. உங்க அஞ்சி ஆறு பேருக்கெல்லாம் டவர் போடமாட்டான்”. 

இதைவிட எங்கள் ஏரியாவை அவமானப்படுத்த முடியாது. அன்று, தாங்கமுடியாத கோபத்தில் சைட் புரோக்கர் மேகநாதனுக்கு போன் செய்தேன். “ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து சைட்டு கூப்பிடுற தூரம்னு சொன்னீங்க”

“ஆமா சுகுமார், இப்ப நீங்க அங்கயிருந்து தானே கூப்பிடுறீங்க.” 

“ஓ, அதாவது போன்ல கூப்பிடற தூரமா? “ கோபமாகக் கேட்ட எனக்கே சிரிப்பு வந்தது.

பணியின்போது இறந்துபோன அப்பாவின் செட்டில்மெண்ட் பணத்தில் வீடு கட்டி அங்கே குடி போன பிற்பாடு அந்த ஆட்டோ டிரைவர் சொன்னது சரியென்று எங்களுக்கே புரிந்தது.

எப்படியானாலும் மேற்கு மாம்பலத்தில் ஜனசமுத்திரத்தில் நீந்திப் பழக்கப்பட்ட எங்களுக்கு அந்த வெட்டவெளிப் பொட்டல் பிடித்துப் போயிற்று. எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் அரை கிலோமீட்டர் தொலைவில். 

2015ல் டிசம்பர் மாத ஆரம்பம். இரண்டு நாள் முன்பாக அண்ணியும் குழந்தை நித்யாவுடன் திருவொற்றியூரில் அண்ணி வீட்டுக்கு போயிருந்தார்கள். ஒரு வாரம் கழித்து வருவதாக ப்ளான். அப்போது கார்த்திக் அண்ணாவுக்கு விம்கோ நகரில் வேலை. நான் வேலை தேடும் வேலையில் இருந்தேன். 

முதள் நாள் லேசான தூறலில் மழை ஆரம்பித்து பொட்டல்வெளியில் மழைவாசனை வீசவும் கார்த்திக் விசிலடித்தபடி ரூமை விட்டு வெளியே வந்தான். 

“சுகு, வெளிய பார்றா.. என்ன அழகான சீனரி..ரசிக்கனும்டா. அம்மா!  சூடா மிளகாபஜ்ஜி போடுமா. இந்த மழைக்கு சூப்பரா இருக்கும்.” 

மாலை ஐந்து மணிக்கெல்லாம் கொஞ்சம் மழை பலமாகவே பெய்யவே “நாளைக்கு ஆபீஸுக்கு லீவு சொல்லிடறேன். எனக்கு என்னமோ போக முடியும்னு தோணல.” என்றான் கார்த்திக்.

பஜ்ஜி சாப்பிட்ட தட்டை கிச்சன் சிங்கில் கார்த்திக் டொங்கென்று போட்டபோது அவன் போன் அடித்தது. டிவியில் வானிலை அறிக்கையில் சென்னையில் பலத்த மழைக்கு வாய்ப்பு என்று சொன்னதைக் கேட்டு அம்மாவை ஸ்டேஷன் வரை கொண்டு வந்து விட்டால் ராகவை அனுப்பி அவர்கள் வீட்டில் மழை ஓயும்வரை வைத்துக்கொள்வதாக அண்ணி கேட்டார்களாம். எப்போதும் முரண்டு பிடிக்கும் கார்த்திக் உடனே ஒப்புக்கொண்டான்.  அண்ணி வீடு திருவொற்றியூரில் மூன்றாவது மாடி. பக்கத்திலேயே ஹாஸ்பிட்டல். அது தவிர அவர்கள் குடியிருப்பிலேயே ஒரு டாக்டரும் இருக்கிறார். அம்மாவுக்கு மழைக்காலம் வந்தால் ஆஸ்துமா தொந்திரவு அதிகமாகி மூச்சிரைப்பு வந்துவிடும். அம்மாவை ஸ்கூட்டியில் ஸ்டேஷனுக்கு கொண்டுபோய் அண்ணியின் தம்பி ராகவிடம் ஒப்படைக்கும் வேலை எனக்கு என்று முடிவானது. 

சாயந்திரம் அம்மாவைக் கூட்டிக் கொண்டு போகும்போது ஒன்றும் சிரமம் தெரியவில்லை. கும்மிடிபூண்டி ஸ்டேஷன் அருகில் ஒரு பேக்கரியில் நித்யா குட்டிக்கு கேக், பிஸ்கட் வாங்கி அம்மாவிடம் கொடுக்கும் போது எங்களுக்கும் கொஞ்சம் ஸ்நாக்ஸ் வாங்கிக் கொண்டேன். மறக்காமல் மெழுகுவத்தி வாங்கச் சொன்னான் கார்த்திக். எதற்கு என்று புரியவில்லை. கரண்ட் போனால் பயன்படுத்த வீட்டில் இன்வெர்ட்டர் பொருத்தியிருந்தோம். அது கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்திற்கு வரும். அதற்குள் மழை நின்றால் கரண்டும் வந்துவிடுமே.

அம்மாவை ராகவிடம் சேர்ததுவிட்டு  திரும்பி வரும்போது காட்சிகள் முற்றிலுமாக  மாறியிருந்தது. வழியெல்லாம் வெள்ளக்காடு. ஸ்கூட்டி தண்ணீரில் தத்தளித்துத் தடுமாறியது. கார்த்திக்கை தொடர்பு கொள்ள முயற்சித்த போது நெட்வொர்க் சுத்தமாக இல்லை. பக்கத்தில் ஏதோ ஏரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் விளைவாக செல்போன் டவர் சரிந்து விட்டதாக வழியில் பேசிக் கொண்டார்கள். வீட்டு வாசலில் ஸ்கூட்டி நிறுத்தும் வெராண்டாவில் கணுக்கால் அளவு தண்ணீர் தேங்கியிருந்தது. வீட்டுக்குள்ளே நுழைந்தபோது கரண்ட் இல்லை. இன்வெர்டர் ஓடிக்கொண்டிருந்தது. 

“இந்த வீட்டுக்கு வந்து நாம பண்ண ஒரே புத்திசாலித்தனமான விஷயம் இந்த இன்வெர்ட்டர் வாங்கினது தான்.ஒரு பேன் ரெண்டு லைட் போட்டா நாலு மணி நேரம் பேக் அப் வரும்” என்று சொன்னான் கார்த்திக். ஏழு மணிக்கு டிவியை போட்டு ஆதித்யா டிவியிம் வடிவேலு காமெடி பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான். ‘ஒரு நிமிஷம் நியூஸ்’ என்று டிவி சேனலை மாற்றினேன். ‘இப்போதைக்கு மழை குறையாது. இரண்டு நாட்களுக்கு மிக கனமழை தொடரும்’ என்று செய்தியாளர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே டிவி அணைந்தது. இன்வெர்ட்டர் காலி. 

“என்னடா இது, இப்படி ஆயிடுச்சு. இன்னைக்கு கரெண்ட் வராது போல இருக்கு” என்ற நான் டார்ச் லைட்டைத் தேடி எடுத்தேன். கார்த்திக் பேட்டரியைக் கண்டுபிடித்து அதில் போட்டு உதறினான். இரண்டு மூன்று முறை உதறினால் தான் அது வேலை செய்யும்.  

மறுநாள் மழை பலத்தது. பிசுபிசு என்று எங்கே பார்த்தாலும் தண்ணீர். அன்று முழுதும் நான் காப்பி போட்டேன். கார்த்திக் சுடச்சுட உப்புமா செய்தான். ப்ரிட்ஜில் மிச்சமிருந்த மாவில் தோசை வார்த்தான். டிவி, ட்யூப்லைட் இல்லாத அன்றைய பேய்மழை இரவில், மெழுகுவத்தி வெளிச்சத்தில் திடீரென்று எங்கள் பேச்சு மழைப் பாடல்களைப் பற்றிய க்விஸ்ஸாக உருமாறியது. 

“ரேவதி மழையில டான்ஸ் ஆடுற பாட்டு என்னன்னு சொல்லு பாப்போம்” நான் கேட்க

“வான்.. மேகம். பூப்பூவாய்.. தூவும்.. புன்னகை மன்னன் படத்துல” பட்டென்று சொன்னான் கார்த்திக்.

“இன்னொன்று?”

“ரேவதியேவா? எனக்கு ஞாபகம் வரல”

“ஓஹோ.. மேகம் வந்ததோ.. மௌனராகம்.  சரி, இப்ப கமல் படத்தில?”

“அந்தி மழை மேகம்… நாயகன்ல. அப்புறம் அடடா மழடா..அட மழடா. தமன்னா சூப்பர் டான்ஸ், என்ன படம் சொல்லு.”

“ம்ம்., பையா..கார்த்திக் படம்” 

பேசி ஓய்ந்தபின் இரவு டார்ச் வெளிச்சத்தில் வாசல் கதவைப் பார்த்தபோது லேசாகத் தண்ணீர் ஹாலுக்குள் வந்து கொண்டிருந்தது. “அடக்கடவுளே.. இப்ப என்னடா பண்றது” கார்த்திக் தலையைப்ப் பிடித்தபடி சோபாவில் அமர்ந்தான். 

நாங்கள் இருவரும் வெளியே வந்து பார்த்தபோது வாசலில் வெள்ளம் குபுகுபுவென்று ஓடிக்கொண்டிருந்தது. “ஏரி வெள்ளம் தான் ஊருக்குள்ள நுழைஞ்சிருக்கு. போனும் வேலை செய்யல. கரண்டும் இல்ல. நாம ஏதாவது முன்னேற்பாடு செய்துக்கனும்” என்றான் கார்த்திக்.

எல்லா கதவு ஜன்னல்களை இறுக்கமாக சாத்தினோம். “நான் இங்க ஹால்ல சோபால படுத்துக்கிறேன். நீ ரூம்ல படுத்துக்கோ. அலெர்ட்டா இரு. எதுன்னாலும் கூப்பிடறேன்” என்று சொல்லி கார்த்திக்கை ரூமுக்கு அனுப்பி சோபாவில் சாய்ந்தேன்.

ஏதேதோ கலவையாகக் கனவுகள். என்னை யாரோ தூக்கி தொப்பென்று தண்ணீரில் போடுவது போல.. நான் ‘காப்பாத்துங்க காப்பாத்துங்க’ என்று அலற எங்கள் ஏரியாவுக்கு பொட்டல் என்று பேர் வைத்த ஆட்டோக்காரர் முண்டாசு கட்டியபடி படகு துழாவுகிறார். ‘அய்ய.. உங்க அஞ்சு பேருக்கோசுரம் அங்கெல்லாம் போட் வராது சார்’ என்று சிரிக்கிறான். மூச்சுத் திணற கண் திறந்தால் வலது கை சிலீரென்றது. சோபா உயரத்திற்கு ஹாலில் தண்ணீர். ஹாலில் இருந்த விதவிதமான பொருள்கள் நீரில் வட்டமடித்தபடி மிதந்து கொண்டிருந்தன. கார்த்திக்கை தட்டி எழுப்பினேன். ஹாலுக்குள் முட்டியளவு தண்ணீரை பார்த்ததும் மிரண்டு போனான். 

நிலைமை சீரியஸ் என்று இருவருக்குமே புரிந்தது.  மொட்டைமாடியில் இருக்கும் ஸ்டோர் ரூமுக்கு முக்கியமான பொருள்களை எடுத்துச் செல்ல திட்டமிட்டோம். லிஸ்ட் பெரிதானது. டிவி, துணிமணி, கியாஸ் ஸ்டவ், கொஞ்சம் பாத்திரங்கள், குடை, மிச்சமிருக்கும் சாப்பிடத் தகுந்த திண்பண்டங்கள், மளிகைப்பொருள், கயிறு, டார்ச், பழைய பேப்பர், கந்தல் துணி, மெழுகுவத்தி, தீப்பெட்டி, முக்கியமாக பீரோவிலிருந்த கொஞ்சம் பணம், நகை, என் டிகிரி சர்டிபிகேட்.

மழைக்கு மறைவாக தண்ணீர் தொட்டிக்கு அடியில் மொட்டைமாடியில் நாங்கள் செட்டிலான இரண்டு மணி நேரத்தில் தரைத்தளம் முழுவதும் மூழ்கி விட்டிருந்தது.  இரவு ஒரு மணிக்கு மொட்டைமாடி ஸ்டோர் ரூமுக்குள் தண்ணீர் வரத் தொடங்கியது. கார்த்திக் “எனக்கென்னமோ நாம சேஃபா வாட்டர் டேங்க் மேல ஏறிடலாமுனு தோணுது சுகு” என்றான். 

சரி என்று நான் ஆமோதிக்க

“இந்த டேங்க கட்டுறதுக்கு பதில் சிண்டெக்ஸ் தொட்டி வைக்கலாம்னு நீ சொன்னியே. ஞாபகமிருக்கா?” மழைநீரை முகத்திலிருந்து வழித்தபடி கார்த்திக் கேட்டான். 

“அதுக்கென்ன இப்போ?”

“சிண்டெக்ஸ் தொட்டிக்கு மேல எப்படி ஏறி உக்காருவ?”

“இப்ப கூட நக்கல்டா  உனக்கு” என்றேன் கோபமாக.

“இடுக்கண் வருங்கால் நகுக” என்றவன்  “மறுபடி லிஸ்ட்., இந்தமுறை ஷார்ட் லிஸ்ட்”

வாட்டர் டேங்க் இரும்பு ஏணியில் குடையுடன் “தண்ணித்தொட்டித் தேடிவந்த கன்னுக்குட்டி நான்” என்று பாடிக்கொண்டே கார்த்திக் ஏற மிக முக்கியமான ஷார்ட் லிஸ்ட் பொருள்களுடன் நான் அவனைப் பின் தொடர்ந்தேன்.

நாங்கள் இருவரும் வாழ்க்கையில் எங்களுக்குள் இவ்வளவு விஷயங்கள் பேசினதேயில்லை. அப்பாவைப் பற்றி, காலேஜ் அனுபவங்கள், கார்த்திக் ஆபிஸ் கலீக்ஸ் பற்றி, எங்கள் சின்ன வயசு கதைகள் ரிவைண்ட். வாழ்க்கையின் கடைசி நாள் போல பேசிக்கொண்டே இருந்தோம். மழை வெள்ளம் இன்னும் நாலடி உயர்ந்தால் ஆபத்து என்ற நிலைமையை உணர்ந்தபின்னும் சிரித்துக்கொண்டிருந்தோம்.

மிதமாக மழை பெய்தால்தான் அழகு, ரசனை, ரம்மியம், கவிதை எல்லாம். அதுவே அதிகமாகி பெருமழையாகத் தொடர்ந்தால் அழகியல் மாறி அழிவியல் ஆரம்பமாகி விடுகிறது. 

கடைசி மெழுகுவத்தியை ஏற்றி அது அணையாமலிருக்க சர்பிகேட் இருந்த ப்ளாஸ்டிக் கவரால் மறைத்த போது தான் அதை நான் கவனித்தேன். “கார்த்திக், என்னடா இது, என்னோட சர்டிபிகேட் இருக்கிற ப்ளாஸ்டிக் கவருக்குள்ள ஏதோ நியூஸ் பேப்பர் இருக்கு”  

“அது வந்து.. பழைய தினத்தந்தி பேப்பர். நான் டென்த்ல ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்தது என் போட்டோவோட இதுல போட்டாங்க. அப்பா தாண்டா இத பத்திரமா எடுத்து வெச்சார்” என்று சொன்ன கார்த்திக்கின் கண்களில் நீர் துளிர்த்தது.

அரைமயக்கத்தில் இருந்த எங்களை படபடவென்ற சத்தம் பதறியடித்தபடி மேலே வானத்தைப் பார்க்க வைத்தது. வட்டமிட்டபடி ஒரு ஹெலிகாப்டர். “ ஹெலிகாப்டர நாம இதுக்கு முன்ப சினிமாவிலத் தான் பாத்திருக்கோம், அதுவும் இவ்வளவு கிட்டக்க.. நம்மள காப்பாத்த வந்தாங்களோ?”

“ப்ச்.. சாப்பாடு போடறாங்க போல. ஏதாச்சும் பண்ணி அவங்கள பார்க்க வச்சா தான் பொட்டலத்தை போடுவாங்க. என்ன பண்ணலாம், நனையாத காகிதம், துணி ஏதாச்சும் இருக்கா” என்று நான் பரபரக்க ஒன்றும் யோசிக்காமல் கார்த்திக் பட்டென்று பிளாடிக் உறையில் என் சர்டிபிகேட் கவரில் வைத்திருந்த அவன் போட்டோ வெளியான நியூஸ் பேப்பரை வெளியே எடுத்தான். பத்து வருடத்து முந்திய மக்கிப்போன அந்த செய்தித்தாள் கபகபவென்று பற்றி எரிந்தது. வெளிச்சம் பார்த்து உயரத்தில் வட்டமடித்த ஹெலிகாப்டர் ப்ளாஸ்டிக் பொட்டலம் ஒன்றை வீசியெறிய அது தண்ணீர்த்தொட்டி அருகில் விழுந்து மிதந்தது. நான்கு மில்க் பிக்கீஸ் பேக்கெட், மூன்று மினி வாட்டர் பாட்டில், இரண்டு புளிசாதப் பொட்டலம். ப்ரூட்டீஸ் இரண்டு, அத்துடன் அரை டஜன் வாழைப்பழம். 

“கொஞ்சமாவது யோசனை இருந்திருந்தா இதுல ஒரு மெழுகுவத்தியும் தீப்பொட்டியும் வெச்சிருப்பானுங்க” என்றேன்.

“ம்ம்..சரிதான்,  நெருப்புல மாட்டிக்கிட்டா நம்மள காப்பாத்த தண்ணி தேவைப்படுது. அதேபோல தண்ணியில சிக்கிட்டா நமக்கு நெருப்பு தான் துணை போல.. இந்த தீப்பெட்டிய,  சர்டிபிகேட் இருக்குற பிளாஸ்டிக் உறைக்குள்ள பத்திரமா வை.” பேண்ட் பாக்கெட்டிலிருந்த தீப்பெட்டியை என்னிடம் நீட்டி “கரண்ட், டார்ச், மெழுகுவத்தின்னு அப்படியே பின்னோக்கி வந்து இப்ப ஆதிமனுஷன் மாதிரி தீப்பந்தம் ஏந்தி நிக்கிறோம்” என்றான் கார்த்திக்

“சுடச்சுட மிளகா பஜ்ஜியிலிருந்து நமுத்துப் போன மில்க் பிக்கீஸ்க்கு வந்துட்டோம். கார்த்திக், ஒரு குட்டிக் கவிதை ஒண்ணு சொல்லட்டா.. சடசடவென பெய்தது மழை. உடன் படபடவென விரிந்தது குடை, மழையைப் புறக்கணிக்கும் கருப்புக் கொடியாய்” 

“நல்லா இருக்குடா. சொல்லும்போதே மழ பெய்யுற மாதிரி சத்தம், யார் எழுதினது, வைரமுத்துவா?”

“ஹிஹி.. நான் தான்,” 

“டேய் சுகு,  நீ கவிதை எல்லாம் கூட எழுதிவியா?  இவ்வளவு நாளா எனக்கு தெரியாதேடா.”

“எனக்கும் தான் நீ தத்துவமெல்லாம் பேசுவேன்னு தெரியாது” என்றேன். 

“மில்க் பிக்கீஸ் பிஸ்கெட் இதுக்குமுன்ன எப்ப சாப்பிட்டோம்னு ஞாபகம் இல்ல. இவ்ளோ டேஸ்டா இருக்கே“

“ஆனாப் பாரு, இந்த புளி சாதம் மட்டும் எவ்வளவு பசியில சாப்பிட்டாலும் ருசிக்கல. ஏதோ கடமைக்குன்னு சாப்பிடற மாதிரிதான் இருக்கு.” அலுத்துக் கொண்டான் கார்த்திக். 

ஒரு கட்டத்தில் எங்களுக்கு இந்த இரவே கடைசி என்றுதான் தோன்றியது. மழை நின்றுவிட்டபோதும் நீர்மட்டம் உயர்ந்துகொண்டே இருந்தது. நாங்கள் நின்றுகொண்டிருந்த தண்ணீர்த் தொட்டி இப்போது பாதிக்குமேல் மூழ்கியிருந்தது. “நாம செத்துடுவமா சுகு” என்று கேட்டு கார்த்திக் சிறிது நேரம் மெளனமாக இருந்தான். பிறகு திடீரென்று என் தோள்களைப் பற்றிக்கொண்டுக் குலுங்கி அழுதான். “சாகறதப் பத்திக் கவலையில்லடா. அதுக்கு முன்ன அம்மா கிட்ட ஒரு சாரி சொல்லனும். போன்ல பேச முடிஞ்சாக்கூட இப்பவே சொல்லிடுவேன்”. எதற்காக என்று அவனும் சொல்லவில்லை. நானும் கேட்கவில்லை. யோசித்துப் பார்த்தபோது எனக்கு அப்படி எதுவும் சாகிறதுக்கு முன் செய்ய என்று ஒன்றுமில்லை என்றே தோன்றியது. என்ன, செத்துப் போவதுக்கு முன் ஒரு வேலை கிடைத்திருக்கலாம். 

மழையிலும் வெள்ளத்திலும் நனைந்து கார்த்திக்கும் நானும் கோழிக்குஞ்சுகள் போல் வெடவெடத்தபடி ஒருவரையொருவர் பற்றிக்கொணடு நின்றிருந்தோம்.

தூரத்தில் இருட்டில் படகு ஒன்று மிதந்து வருவதை கார்த்திக் தான் முதலில் பார்த்தான். அதில் கைலி கட்டிய இரண்டு தெய்வங​கள். ஒருவர் கையில் இருந்த டார்ச் லைட் வெளிச்சத்தால் இருட்டில் அங்குமிங்கும் துழாவிக் கொண்டிருந்தார். இன்னொருவர் துடுப்பு போட்டுக் கொண்டிருந்தார். குடியிருப்பில் யாராவது மிச்சமீதி உயிரோடு இருக்கிறார்களா என்று பார்க்க வந்திருப்பார்கள் போல.

கும்மிருட்டு. எங்களால் படகை மங்கலாக பார்க்கமுடிந்ததே தவிர அதிலிருந்தவர்கள் மொட்டைமாடி நீர்த்தொட்டியின் மேல் வெடவெடத்தபடி நிற்கும் எங்களைப் பார்த்திருக்க சாத்தியமேயில்லை.  இன்னும் ஒருசில நிமிடங்களில் படகு வந்தவழியே திரும்பி விடலாம். எப்படியாவது அதற்குள் அவர்கள் கவனத்தை எங்கள் பக்கம் ஈர்க்க வேண்டும். எப்படி? 

கார்த்திக் என்னைப் பார்த்த பார்வையிலே  எனக்குப் புரிந்தது. ஒன்றும் பேசாமல் ப்ளாஸ்டிக் உறையை திறந்து என் டிகிரி சர்டிபிகேட்டை வெளியில் எடுத்து அவனிடம் நீட்டினேன். “கவலைப்படாதே, டூப்ளிகேட் அப்ளை பண்ணி வாங்கிடலாம்” என்ற கார்த்திக் அதை வாங்கி உருட்டிப் பதட்டத்துடன் தீக்குச்சியால் பற்றவைத்தான். என் டிகிரி சர்டிபிகேட் மக்கிப்போன செய்தித்தாள் போல் இல்லாமல் சட்டென்று பற்றிக்கொண்டு ஜெகஜோதியாக எரிந்தது. அதைப் பார்த்தபோது எனக்கு அது ஏதோ வார்த்தைகளேயில்லாத ஒரு கவிதை போல இருந்தது. 

இப்போது படகு மெதுவாக எங்களை நோக்கித் திரும்பி நகரத் தொடங்கியது. படகு எங்களை நெருங்கியதும் பரபரப்பு ஓய்ந்து நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டேன்.

 “கார்த்திக், புளிசாதம் பாக்கெட் ஒண்ணு மிச்சமிருக்கு. எடுத்துக்கிடலாமா” என்று கேட்டேன். கோபமாகப் பார்ப்பது போல் முறைத்துப் பின் சிரித்தான். “உனக்கு வேனும்னா மில்க் பிக்கீஸ் அரை பாக்கெட் இருக்கு. அதையும் எடுத்துக்கோ” 

“கண்டிப்பா எடுத்துப்பேன்”

படகில் வரும்போது நான் தான் கவனித்து கார்த்திக்கிடம் காட்டினேன். ஆடிட்டர் வீட்டு போட் வாட்டர் டாங்க் மொத்தமும் மூழ்கி மஞ்சள் பெயிண்ட் அடித்த போட்டின் வளைவான மேல் நுனி மட்டுமே தெரிந்தது. “அட, இந்த இடத்தை விட நம்ம ஏரியா கொஞ்சம் மேடு போல” என்று அந்த இக்கட்டிலும் மெலிதாக மகிழ்ச்சியை கார்த்திக் வெளிப்படுத்தினான். 

பெருவெள்ளம் வரும்போது கண்டிப்பாக பத்திரப்படுத்த வேண்டிய பொருள்களின் பட்டியலில் முதலில் இருப்பது சர்டிபிகேட்ஸ் என்றுதான் எல்லோரும் சொல்வார்கள். என் டிகிரி எனக்கு வேலை வாங்கித்தந்து சோறு போடும் என்றெல்லாம் நினைத்தேன். கடைசியில் அது ஆபத்துக்கு உதவும் தீப்பந்தமாகத் தான் மாறியது. இந்த வரிசையில் இரண்டாவது முக்கிய பொருள் தீப்பெட்டி என்பது எங்கள் அனுபவம் தந்த பாடம்.

கதையை முடிக்கும் வரை எந்த இடையூறும் செய்யாமல் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த என் நண்பர்கள் மத்தியிலிருந்து டீம் லீடர் சரவணன் சொன்னான். “கிளைமாக்ஸ்ல, டிகிரி பத்திக்கிட்டு உங்க உயிரையில்ல காப்பாத்தியிருக்கு. மொத்தத்தில கதை, ரொம்ப திரில்லிங்கா இருந்துது” 

“என்ன கொடுமை சரவணன் இது? கதையா?” அதிர்ச்சியானேன்.

“சாரி சுகுமார், பட், ட்ரூத் இஸ் ஸ்ட்ரேஞ்சர் தென் பிக்‌ஷன். சரி, அதுக்கப்புறம் மழை சீசன் வரும்போதெல்லாம் உங்களுக்கு பயமா இருந்திருக்கும்ல?”

“நிச்சயமா இல்ல. பயமெல்லாம் முதல் தடவை தான். ஒருமுறை பட்ட அவஸ்தை, கிடைச்ச அனுபவம் இதெல்லாம் எங்களுக்கு எந்த வெள்ளத்தையும் சமாளிக்கிற மன உறுதியைக் கொடுத்திருக்கு.”

“இந்தமுறை உங்க ஏரியா மழை வெள்ளத்தை எப்படி சமாளிச்சீங்க?”

“அதுவா? ரொம்ப சிம்பிள்.. வாசல்ல கணுக்கால் அளவுக்கு தண்ணி தேங்கினதுமே உஷாரா வீட்டைப் பூட்டிட்டு குடும்பத்தோட அங்கிருந்து ஜூட் விட்டுட்டோம். உயிர் முக்கியமில்ல”.


ஊழிப் பெருவெள்ளம்







Monday, February 3, 2025

நேர்காணல்

நேர்காணல்       -சசி 

சொல்வனம்-   ஜனவரி 12, 2025


“கூகுள்ல லொகேஷன் சர்விஸ்னு ஒன்னு இருக்கும். அதில நாம கடைசியா எங்கெல்லாம் இருந்தோம்னு பார்க்க முடியும்.” 

“நீங்க சொல்றது கரெக்ட் தான் சார். ஆனா அது நம்ம ப்ரைவஸிக்கு பாதுகாப்பானது இல்லைன்றதால அதை நான் என் போன் செட்டிங்ஸ்ல ஆஃப் பண்ணி வெச்சிருக்கேன்”


நானாக வலியச் சென்று இந்த சக்கர வியூகத்தில் மாட்டிக் கொண்டு விட்டேனோ என்று தோன்றியது. பதில் ஏதும் சொல்ல முடியாமல் வாயடைத்துப் போய் நின்று இருந்தேன். என் முன்னே இருந்த அந்த இளைஞன் நான் அடுத்து என்ன கேள்வி கேட்கப் போகிறேன் என்று காத்துக் கொண்டிருக்கும் முகபாவனையில் இருந்தான்.

தனியாக இருக்கும் எல்லா ஞாயிற்றுக்கிழமை போல இன்றும் சாவகாசமாக கண்விழித்து தி நகர் இண்டியன் காபி ஹவுஸில் காலை டிபன் சாப்பிட ஆஜரானேன். இன்று மதிய உணவு என் மாமியார் வீட்டில், வேளச்சேரியில்.  டிபனுக்கு பின் காபியைக் குடித்து விட்டு பஸ் நிலையத்திலிருந்து 5B பஸ்ஸை பிடித்துச் செல்ல வேண்டியதுதான். ஏற்கனவே நேற்று முன்தினம் என் மனைவி குழந்தை மீனாவுடன் வேளச்சேரி சென்று இருந்தாள். வெளியே வந்து தம் பற்ற வைத்தபோது, 30 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞன் தயக்கத்துடன் என்னைப் பார்த்துக் கொண்டே மெதுவாக நெருங்குவதை உணரமுடிந்தது. அவன் ஏதாவது இடத்திற்கு வழி கேட்கப் போகிறானா என்று யோசித்த நொடியில் அவன் கையில் பெட்டியோ பையோ ஏதும் இல்லாததை கவனித்தேன். கண்டிப்பாக ஏதாவது பொய் சொல்லி உதவி கேட்டு நூதன வழிப்பறி செய்யும் ஒரு ஆசாமியாக இருக்கும் வாய்ப்பே அதிகம்.

“எக்ஸ்க்யூஸ் மி சார், ஒரு நிமிஷம்”

ஊருக்கு வந்த இடத்தில் பணம் கொள்ளை அடித்து விட்டார்கள் என்று பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இந்த இளைஞன் சொன்ன கதை முற்றிலும் வினோதமாக இருந்தது. ஆங்காங்கு நான் கேட்ட எதிர் கேள்விகளை எல்லாம் வெகு சுலபமாக உடைத்துச் சுக்கு நூறாக்கி விட்டு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தான்.

“சார், என் பேரு பிரேம் குமார், இங்க கோடம்பாக்கத்தில் ஒரு பைனான்ஸ் கம்பெனியில திங்கட்கிழமை எனக்கு இண்டர்வியு. அதுக்காக காலைல கோவையிலிருந்து எக்ஸ்பிரஸ்ல சென்னை சென்ட்ரல் வந்து சேர்ந்தேன். சென்னை எனக்கு அவ்வளவா பழக்கம் இல்லாததால ஆட்டோக்காரர் கிட்டயே இன்டர்வியூ நடக்கிற இடத்தை சொல்லி அதுக்குப் பக்கமா ஏதாவது ஒரு நல்ல லாட்ஜுக்கு கூட்டிட்டு போகச் சொன்னேன்.”

“ம்ம்?”

“கோடம்பாக்கத்தில் இண்டர்வியு  நடக்கிற ஆபீஸ் பக்கம் சரியான லாட்ஜ் ஏதும் இல்லாததால் அதற்கும் தி நகருக்கும் இடைபட்ட இடத்தில ஒரு லாட்ஜில் விடுவதாகவும் மேலும் அங்கிருந்து சுளுவா தி நகருக்கு ஆட்டோவில் சாப்பிட வரலாம்னு ஆட்டோ டிரைவர் சொன்னார்”.

“சரி?”

“ஆட்டோவை லாட்ஜுக்கு உள்பக்க வராண்டால நிறுத்திட்டு அப்படியே பத்து நிமிஷத்தில வந்தீங்கன்னா டிபனுக்கு ட்ராப் பண்றேன்னு ஆட்டோ டிரைவர் சொல்ல.. நானும் உள்ளே போய் ரிசப்ஷன்ல வாடகையை கூகுள்பே பண்ணிட்டு சாவியோட ரூமுக்கு ஓடினேன். அவசர அவசரமாக கீழே ஓடி வந்து மறுபடியும் ஆட்டோல ஏறி உட்கார்ந்தேன். தி நகர் சரவண பவன் முன்னாடி இறக்கிவிட்டு  டிரைவர் கிளம்பினார். சாப்பாடு டோக்கன் வாங்க பர்ஸை தேடின போதுதான் எனக்கு விஷயமே புரிந்தது“

“என்ன ஆச்சு. பர்ஸ் காணாம போயிடுச்சா.. இல்ல, திருட்டு போயிடுச்சா?”  

“ரெண்டும் இல்ல சார். ரூம்ல முகம் அலம்ப பாத்ரூமுக்கு போகும் போது டேபிள் மேல பர்ஸையும் மொபைலையும் வெளியே எடுத்து வெச்சிருந்தேன். அதை எடுத்துட்டு வர மறந்துட்டேன்.”

“பர்ஸ் உங்க கிட்ட இல்லன்னா ஆட்டோ டிரைவருக்கு எப்படி பணம் கொடுத்தீங்க?”

“ஷர்ட் பாக்கெட்ல 200 ரூபா சில்லறை இருந்தது.” 

“ஆட்டோவுக்கு எவ்வளவு கொடுத்தீங்க”

“மொத்தம் 170 ரூபாய்?”

வசமாக மாட்டிக் கொண்டு விட்டான்.  “சரி, அப்போ உங்க பாக்கெட்டுக்குள் இப்ப மிச்சம் 30 ரூபாய் இருக்குமா?” 

மேல் சட்டை பாக்கெட்டில் கைவிட்டு சரியாக 30 ரூபாய் சில்லறை எடுத்துக் காட்டினான் அந்த இளைஞன். பக்காவாக பிளான் செய்து வந்திருக்கிறானோ?

சரவண பவனில் 11 மணிக்கு மேல் தான் சாப்பாடு ஆரம்பம் என்பது சட்டென்று நினைவுக்கு வந்தது. ஆட்டோ டிரைவர் இவனை டிபனுக்கு விடுவதாகத் தானே சொன்னார். “நீங்க சரவண பவன் போய் சேர்ந்தப்ப மணி என்ன?”

“பதினோரு மணிக்கு மேல ஆயிடுத்து. இன்னைக்கு நான் வந்த ரயில் அரை மணி நேரம் லேட்டு. நீங்க நான் சொல்றது உண்மையான்னு டெஸ்ட் பண்ணுறீங்கன்னு தெரியுது. பரவாயில்ல. ஆனா நான் சொல்றது எல்லாமே உண்மை தான் சார்.”

“இபபவும் ஒரு பிரச்சனையும் இல்லை. இங்கே இருந்து ஒரு ஆட்டோ பிடிச்சு நேரா லாட்ஜுக்கு போயிடுங்க. ரூமுக்கு போய் பர்ஸை எடுத்துட்டு வந்து ஆட்டோவுக்கு செட்டில் பண்ணிடலாம். அவ்வளவு தானே?.”

“சிக்கலே அங்க தான் சார்.  நான் ஒரு பெரிய தப்பு பண்ணிட்டேன். நான் அதை சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க.”

 “ஏன், என்ன ஆச்சு?” 

“உண்மையிலேயே அந்த லாட்ஜ் எங்க இருக்குன்னு எனக்குத் தெரியாது. ஆட்டோ அங்க என்னை உள்ளுக்குள்ளார விட்டதால வெளியே லாட்ஜ் பெயரை நான் கவனிக்கவும் இல்லை. ரிசப்ஷன்ல இருந்தவரை ஞாபகம் இருக்கு. ஆனா அங்கயும் நேம் போர்ட் ஏதும் இல்லை. நிஜமாகவே எனக்கு இப்ப மறுபடியும் அங்க எப்படிப் போய் சேருவது என்று புரியவில்லை. அந்த லாட்ஜை கண்டுபிடிக்க நீங்க தான் எனக்கு உதவி பண்ணனும் சார்.  நாளைக்கு இண்டர்வியுக்கு தேவையான சர்டிபிகேட் பைல் எல்லாம் அங்க தான் இருக்கு. முக்கியமா என்னோட மொபைல் போன்..”

என்னையும் அறியாமல் “அடப்பாவி!” என்று கத்தினேன். அவன் உண்மையைத் தான் சொல்கிறானா இல்லை என்னை ஏமாற்றி பணம் வாங்க ஏதாவது முயற்சி செய்கிறானா என்று புரியவில்லை. ஆனால் ஒருவேளை இது உண்மையாக இருந்தால் அவனுடைய லாட்ஜை எப்படி கண்டுபிடிப்பது என்பது எனக்கும் ஒரு சவாலாகத் தோன்றியது. 

“லாட்ஜ் ரூம் சாவி எங்க?”

“வரும்போது அதை ரிசப்ஷன்ல கொடுத்திட்டேன். எப்படியும் அதுல பேர் எதுவும் இல்ல சார்.”

“இன்னொரு யோசனை, இண்டர்வியு நடத்துற கம்பனிக்கே போய் விவரத்தைச் சொல்லி உதவி கேட்கலாமே.”

“சார், இன்னைக்கு ஞாயிற்றுக் கிழமை. அதுவுமில்லாம என் கதையை கேட்ட பிறகு எவனாவது எனக்கு வேலை குடுப்பானா?”

“அதுவும் சரிதான், உங்க மொபைல் நம்பர் சொல்லுங்க. முதல்ல அதுக்கு ரிங் பண்ணி பார்ப்போம்.” 

“ரூமுக்குள்ள இருக்கிற மொபைல் சத்தம் வெளியே கேட்க சான்ஸ் இல்ல. இருந்தாலும் நம்பர் சொல்றேன். ட்ரை பண்ணிப் பாக்கலாம்.”

அவன் தந்த மொபைல் நம்பருக்கு போன்  செய்தேன். எடுக்கப்படாமல் ரிங் போய்க்கொண்டிருந்தது. அவன் சொல்வது ஒருவேளை நிஜம் என்றால் அவன் லாட்ஜை எப்படிக் கண்டு பிடிப்பது?

“சரி, லாட்ஜிலிருந்து இங்க ஆட்டோல வர எவ்வளவு நேரம் ஆச்சு?”

“கிட்டத்தட்ட அரை மணி நேரமிருக்கும்”

“இன்னைக்கு சண்டே. டிராபிக் குறைவு. கோடம்பாக்கத்துக்கும் திநகருக்கும் இடையிலன்னா..மேற்கு மாம்பலம், பாண்டிபஜார்..ரங்கராஜபுரம்.. எது வேணாலும் இருக்கலாம். ஒரு ஆட்டோ எடுத்து ரவுண்ட் அடிக்கலாம். ஆனா அப்படி கண்டுபுடிக்க முடியுமான்னு தெரியல, ஒருவேளை போலிஸ் கிட்ட போனா..”

“சார், என்ன சொல்றீங்க, ஏதாவது தொலைஞ்சு போச்சு இல்ல திருட்டு போச்சுன்னா, அவங்க கிட்ட போய் சொல்லலாம். என் கதைய போய் அவங்க கிட்ட சொன்னா சிரிப்பாங்க.”

“சரி, லாட்ஜுக்கு எவ்வளவு வாடகை குடுத்தீங்க”

“ஆயிரத்து நானூறு ரூபா” 

“இண்டர்நெட்ல இங்க அக்கம்பக்கத்தில அந்த வாடகை ரேஞ்ச் இருக்கிற லாட்ஜுக்கு எல்லாம் போன் போட்டு பாக்கலாம். அதுவும் சரிப்படுமான்னு தெரியல. சரி, உங்களுக்கு என்ன வழி தோணுது?”

“நான் யோசிச்சு ஒரு வழி தான் இருக்கு சார். என்னோட போன் இருந்தா போதும். லாட்ஜுக்கு ஜிபே பண்ணி இருக்கேன். அந்த போன் நம்பருக்கு பேசினா லாட்ஜை கண்டுபிடித்து விடலாம்.”

“போன் தான் இல்லையே. லாட்ஜுல மாட்டிக்கிச்சே”

“கரெக்ட், ஆனா ஒரு ஆதார் காப்பி இருந்தா போன் சிம் டூப்ளிகேட் வாங்கிடலாம். அப்புறம் ஒரு பேசிக் மாடல் மொபைல் போன் ஒன்னு வாங்கிட்டா.. அதுல கூகுள் பே பதிவிறக்கம் பண்ணி அதிலிருந்து லாட்ஜ் போன் நம்பரை புடிச்சிடலாம்.”

இப்போது எனக்கு விளங்கி விட்டது. ஒரு பேசிக் மாடல் போன். அத்தோடு ஒரு டூப்ளிகேட் சிம் கார்டு வாங்கத் தேவையான பணம். அதற்குத் தான் இவன் என்னிடம் அடிபோடுகிறான் அல்லது இந்த சம்பவத்தைக் கட்டமைத்து என்னிடம் பணம் பறிக்கத் திட்டமிடுகிறான். வித்தியாசமாக இருந்த இந்தக் கதையை நம்புவதா வேண்டாமா? என் புத்திசாலித்தனத்தின் மீதான நம்பிக்கையில் அவன் ஏதாவது ஒரு இடத்தில் இடறுவான், தடுமாறுவான் என்று நினைத்தேன். அவனோ எல்லா கேள்விகளுக்கும் சரியான பதில் வைத்திருந்தான். கொஞ்சமும் யோசிக்காமல் பட்டென்று பதிலும் சொன்னான்.

“இப்ப ஒரு நாலாயிரம் ரூபா இருந்தா பிரச்னை தீர்ந்திடும் சார்.”

“சரி, இப்ப அதுக்கு நான் என்ன செய்யனும்”

“நான் சொன்னத எல்லாம் நீங்க நம்புனா எனக்கு உதவி செய்யலாம். போன், புது சிம் கைக்கு வந்துட்டா பணத்தை உடனே திருப்பிக் கொடுத்திட முடியும். நாளைக்கு மட்டும் எனக்கு இண்டர்வியு இல்லன்னா கவலைப்பட மாட்டேன். இந்த ரோட்டோரமா கூட படுத்துட்டு எப்படியாவது திரும்பி வீடு போய் சேர்ந்திடுவேன்.”

இப்படிச் சொல்லிவிட்டு என் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். 

சட்டென்று பொறி தட்டியது போல் தோன்றிய எனது கடைசி அஸ்திரத்தை இறக்கினேன். “எல்லாம் சரி. இப்போ உங்களுக்குத் தேவையானது பணம் தானே. நான் என்னுடைய போன் தரேன். அதுல உங்க வீட்டுல யாரையாவது கால் பண்ணி என் நம்பருக்கு ஜிபே பண்ண சொல்லுங்க. அதை நான் ஏடிஎம்ல இருந்து எடுத்துத் தந்திடறேன்.“ 

“நீங்க சொல்றது சரிதான் சார். எனக்கும் அது தோணுச்சு. என் அப்பா உயிரோட இல்லை. உண்மையிலேயே எனக்கு எங்க அம்மா நம்பரைத் தவிர வேறு எதுவும் ஞாபகத்துக்கு வரல. எல்லாமே போன்ல தான் இருக்கு. அம்மாவுக்கு போன் பண்ணி பிரயோஜனமே இல்லை. அவங்களுக்கு பணம் அனுப்பவும் தெரியாது. அதைத் தவிர இப்ப இதெல்லாம் தெரிஞ்சா அவங்க ரொம்ப டென்ஷன் ஆயிடுவாங்க. ஹார்ட் பேஷண்ட் வேற.”

சொல்லும் கதையில் கொஞ்சம் சோகம் கொண்டு வருகிறானோ? ஒரு நொடி யோசித்துப் பார்த்தபோது அவன் சொல்வதும் சரிதான் என்று தோன்றியது. எனக்கும் என் மனைவி நம்பரைத் தவிர வேறு எந்த மொபைல் நம்பரும் ஞாபகத்துக்கு வருமா என்பது சந்தேகமே. நாம் எல்லோருமே மொபைல் போனுடன் ஆதார் எண்ணை மட்டுமல்ல. நம் மொத்த வாழ்க்கையையும்  லிங்க் செய்து வைத்திருக்கிறோம். எல்லோருமே போனுக்கு அடிமைதான். கையில் மொபைல் இல்லை என்றால் நம் எல்லார் கதையும் கந்தல் தான். 

“என்னால இதை நம்ப முடியல, அவசரத்துக்கு உங்களோட ஒரு நண்பன் போன் நம்பர் கூட தெரியாதா?”

சட்டென்று ஏதோ ஞாபகம் வந்தது போல் “சார் ஒரு நிமிஷம் உங்க போனை குடுங்க” என்று வாங்கி சிறிது தொலைவில் சென்று கால் செய்து பேசிவிட்டுத் திரும்பி வந்தான். 

“ஒன்னும் பிரயோஜனம் இல்ல சார்”

“ஏன்? என்ன ஆச்சு, பேசிட்டு இருந்த மாதிரி கேட்டதே!”

“அவனெல்லாம் ஒரு நண்பனே இல்லை சார்.  நிலைமையை விளக்கிச் சொன்ன பிறகும் அஞ்சு பைசா இல்லைன்னு கைய விரிச்சுட்டான்”. 

தொடர்ச்சியாக ஒருவரால் பொய் சொல்ல முடியாது என்ற எனது அதீத நம்பிக்கையை அவன் உடைத்து விட்டான் அல்லது தொடர்ந்து அவன் சொல்வதெல்லாம் உண்மை என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வளவு விசாரணைக்குப் பிறகு அவன் கேட்ட உதவியை செய்ய வேண்டும் என்பதைத் தவிர வேறு வழி இல்லை. ஒருவேளை ஏமாற்றுப் பேர்வழி என்றாலும் அவன் என்னைக் களத்தில் வென்று விட்டான். அதற்கான பரிசு அது.  

ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொடுத்தபோது என் இரு கைகளைப் பற்றி நன்றி சொன்னான். என் போன் நம்பரை வாங்கிக்கொண்டு “போன் சிம் வாங்கினதும் உடனே உங்களுக்கு பணம் அனுப்பிடறேன் சார்” என்றான். 

வேளச்சேரியில் நடுராத்திரி அரைமயக்கத் தூக்கத்தில் திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. அவன் புரட்டு ஆசாமி இல்லையென்றால் சரவண பவன் வாசலில் ஆட்டோ அவனை விட்டுச் சென்ற காட்சி கண்டிப்பாக ஓட்டலின் சிசிடிவி கேமராவில் பதிவாயிருக்கும். அதன் மூலமாக ஆட்டோ நம்பரைக் கண்டுபிடித்து டிரைவரை தொடர்பு கொள்ள முடியுமே. எப்படியும் பணம் என் கையை விட்டு போனபின் இனி இதெல்லாம் இப்போது யோசித்துப் பயனில்லை. 

காலையில் எழுந்ததும் மனைவி கேட்டாள். “என்னங்க ஆச்சு, ராத்திரி முழுக்கத் தூக்கத்துல லாட்ஜ் ஆட்டோன்னு பினாத்திட்டே இருந்தீங்களே?” விஷயத்தை சொன்னால் கட்டித் தொங்க விட்டு விடுவாள். ‘அஞ்சு ரூபாய்க்கு ஆயிரம் நொள்ளை கேள்வி கேப்பீங்க. எவனோ ப்ராடு ஒருத்தனுக்கு சுளையா நாலாயிரம் அழுதுட்டு வந்திருக்கீங்க’

திங்கட்கிழமை காலையிலிருந்தே அவன் நினைப்பாகவே இருந்தது. இதுவரை அவன் பணம் ஏதும் அனுப்பவில்லை. இன்று இண்டர்வியு என்றானே. கொஞ்சம் காத்திருப்போம் என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். இருப்பு கொள்ளாமல் மதியம் மூன்று மணியளவில் போன் அழைப்புப் பதிவிலிருந்த அவன் நம்பருக்கு ரிங் செய்தேன். பதில் ஏதுமில்லை. இதற்கென்ன அர்த்தம்? பயனில் இல்லாத மொபைல் எண் ஒன்றை அவனுடையது என்று சொல்லியிருக்கிறான். நேற்று அழைப்புப் பதிவில் இருந்த இன்னொரு எண் அவனுடைய நண்பனை அழைத்ததாக அவன் சொன்னது. அந்த நம்பருக்கு அழைப்பு விடுத்தேன். ஒரு நொடியில் யாரோ மறுமுனையில் எடுக்க. “ஹலோ யாரு பேசறது” என்று நான் கேட்டதற்கு பதில் வந்தது. 

“சங்கர் பஞ்சர் கடை சார்” 

“என்னது? பஞ்சர் கடையா, எங்க இருக்கு உங்க கடை?” 

“தி நகர் பஸ் ஸ்டாண்ட் எதிர்பக்கம் சார்”

இப்போது எனக்கு எல்லாம் தெளிவாகப் புரிந்தது. அவன் என்னிடம் நேற்று போனை வாங்கி அவன் நண்பனிடம் பேசுவது போல எதிர்புறம் இருக்கும் பஞ்சர் கடையின் போர்டில் இருந்த போன் நம்பருக்குப் பேசி இருக்கிறான் போல. 

மொத்தத்தில் என்னை சுத்தமாக ஏமாற்றி விட்டிருக்கிறான். நானும் வடிகட்டிய மடையனாக நாலாயிரம் ரூபாய் அவனுக்கு அள்ளிக் கொடுத்திருக்கிறேன். பணம் விரயமென்றால் எள்ளு அல்லது காந்தி கணக்கு என்பார்கள். இதை எட்டு காந்தி கணக்கு என்று வைத்துக் கொள்ள வேண்டும். ஏடிஎம்மில் எடுத்த புத்தம் புதிய எட்டு ஐநூறு ரூபாய் நோட்டுகள்

மாலை ஒரு ஏழு மணி இருக்கும். மொபைல் போன் அடித்தது. “சார், நான் பிரேம்குமார் பேசுறேன்”  சட்டென்று புரியவில்லை. பிறகு நினைவுக்கு வந்துவிட்டது. அவன் தான். 

“மதியம் போன் செய்தேன். எடுக்கவே இல்லையே” கோபத்துடன் கேட்டேன்.

“அது ஒரு பெரிய கதை சார்” 

அடப்பாவி மறுபடியும் ஆரம்பித்து விட்டானா? 

“நேத்து நீங்க போன பிறகு உடனடியாக ஒரு மொபைல் போன் அங்கேயே வாங்க முடிந்தது. ஆனால் சிம்கார்டு தான் பிரச்சனை ஆயிடுச்சு. ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிம்கார்டு டூப்ளிகேட் வாங்க முடியல. திங்கட்கிழமை தான் கிடைக்கும்னு சொல்லிட்டாங்க. என்ன செய்யறதுன்னு புரியாம அங்கேயே பக்கத்துல ஒரு சின்ன லாட்ஜில் நைட்டு தங்கிட்டேன். காலையில முதல் வேலையா கடை திறந்ததும் டூப்ளிகேட் சிம் வாங்கிட்டு லாட்ஜை கண்டுபிடிச்சு போய் சேர்ந்துட்டேன். அதுக்கே பதினோரு மணி ஆயிடுச்சு. அதனால கம்பெனிக்கு போன் பண்ணி இண்டர்வியூவ மதியம் மாத்தி வைக்கச் சொல்லி கேட்டதால மூணு மணிக்கு தான் நடந்தது. அதனால் தான் உங்க போன் கால் அட்டென்ட் பண்ண முடியல..”

“அது சரி, நேற்று உங்க பிரண்டுக்கு போன் செஞ்சீங்களே. அது என்ன பஞ்சர் கடையா?”

“மன்னிச்சுக்கோங்க சார். அந்தக் கடைக்கு மேல ஒரு இன்டர்நெட் பிரவுசிங் சென்டர் இருந்தது. அது மூடி இருந்ததால, ஆதார் கார்ட் காப்பி எடுக்க அது எப்ப திறக்கும்னு அவர் கிட்ட கேட்டேன். ஆனா என் ப்ரண்டு கிட்ட பேசினதா சொன்னது தப்புதான். எனக்கு வேற வழியும் தெரியல. எனக்கு அப்படி பணம் கொடுத்து உதவுகிற மாதிரி நண்பர்கள் யாரும் கிடையாது சார்.”

“சரி தான்”

“உங்களைத் தவிர அவ்வளவு பெரிய தொகையை வேற யாராவது கொடுத்து இருப்பாங்களான்னு எனக்கு தெரியல. நீங்க எனக்கு செய்த உதவி ரொம்ப பெருசு சார். சொல்லப்போனால் எனக்கு வேலையே அதனாலதான் கிடைச்சது.”

இப்போது என்னை நினைத்து எனக்கே பெருமையாக இருந்தது. “அதெல்லாம் விடுங்க. இன்டர்வியூ எப்படி போச்சு.”

“சுலபமா தான் இருந்தது. உண்மையிலே நீங்க நேற்று எனக்கு எடுத்த இண்டர்வியு தான் கஷ்டமா இருந்தது.” இதைச் சொல்லும்போது அவனது நமட்டுச் சிரிப்பை போனில் உணரமுடிந்தது. “அடுத்த ஞாயிற்றுக்கிழமை நான் உங்களை அதே இடத்தில் பார்த்து நேரடியா தேங்க்ஸ் சொல்லணும் சார்.” சிரித்துக் கொண்டே சரி என்றேன். போனை கட் செய்த ஓரிரு நிமிடத்தில் டொங் என்ற சத்தத்துடன் குறுஞ்செய்தி ஒன்று வந்தது. ‘உங்கள் வங்கிக் கணக்கில் ரூபாய் 4000 வரவு வைக்கப்பட்டது’



நேர்காணல்